விநாயக புராணம் 5 விநாயகமான்ம்யஸாரம் 14 வல்லபைகணேசர் ஒளவியமிலாநெஞ்சகத்தமருமுமையம்மையாழ்திரைக்காளிந்தியி லலர்கமலமேற்சங்கமாயுற்மரீசிகண்டாங்கெட

விநாயக புராணம்

5. விநாயகமான்ம்யஸாரம்

14. வல்லபைகணேசர்

ஒளவியமிலாநெஞ்சகத்தமருமுமையம்மையாழ்திரைக்காளிந்தியி

லலர்கமலமேற்சங்கமாயுற்மரீசிகண்டாங்கெடுக்கக்குழவியாய்ச்

செவ்விதின்வளர்ந்துவல்லபைநாமமேவித்திருந்திறைமணப்பவேண்டிச்

செப்பரியவாந்தவமியற்றவாளுடையான்சிறந்ததோர்சைவமறையோ

னெவ்வமிலுருக்கொண்டுவரவமலையச்சனோர்ந்தெந்தைமகிழ்வுறவிபவமா

யெழிற்குமாரியைமணம்புரிவிக்கவதுபோதிலினிதீன்றமக்களெனமா

லொவ்விதயமுடன்ல்கீராறணங்கையும்வரைந்துண்மைஞானத்தையோணற்

குதவித்தனைக்காட்டிவல்லபைகணேசராயளிர்பிரணவச்சோதியே

இதன் சரித்திர சங்கிரகம்

பிரம புத்திரனான மரீசி முனிவர்-பிதாவால் கணேசமான் மியத்தை யுபதேசிக்கப் பெற்று அரியதவஞ் செய்து கணேசரிடத்தில் மூவுலகத்தினுந்தன் னாணைசெல்லவும் வற்றாத செல்வமும் மாளாத ஆயுளும் புத்திரப்பேறும் உமாதேவியார் புத்திரியாய் வரவும்-அவரை சிவபெருமான் மணம் புரியவுமாக வரம் பெற்று தேவர்-முனிவர்-அசுரர் முதலிய கணங்கள் வாழ்த்த தேவவல்லியெனுங் கன்னிகையை மணந்து பிரம நகரத்தில் வாழுநாளில்-கைலையில் சிவபெருமானோடு வீற்றிருந்த உமாதேவியார்-தலைவனை வணங்கி உலக நிலைமையை வினவ-அகில காரணரும்-உலக முற்றும் தமது சத்திவியாபகத்துள்ளதென்று திருவாய் மலர்ந்தருள-கேட்ட அம்மையும்-ஆயின்-சத்தியாமன்றோ வெனத்தருக்கிக் கூற-அங்ஙனே பெருமான் புன்னகை செய்து-சர்வசத்திகளையும் நடத்தும்-தமது பிரேரக மாத்திரையை யோர்கணம் சுருக்கியருளலும் அதனால் உலகெலாம் சடமாக அனேககற்பகாலங்கிடக்க-கண்ட உலக மாதாவும் அஞ்சி-தமதபாரதத்தை க்ஷமித்து உலகுய்ய வருளும்படி பிரார்த்திக்க-பெருமான் கருணை பூத்தளவில்-உய்ந்தெழுந்த அரிபிரமேந்திராதி சமஸ்த ஆன்மாக்களும்-தாங்கள் பெருந்தகை பிரானை மறந்து சடத்துவத்திருந்த குற்றம் தீர்வாக வருளும்படி சன்னிதியடைந்து பிரார்த்திக்க-உடையநாயகன் அக்குற்றம் நுமதன்று- உமையவளதெனத்திருவுளம் பற்ற-அவர்கள் அனைவரும் வணங்கி தத்தமிருக்கை சென்றபின் பெருமாட்டியாரும்-உலகநாதனை வணங்கி அப்பிழையழிவருளும் படி விண்ணப்பிக்க-பெருமான் திருவருள் கூர்ந்து பிராட்டி மூகநோக்கி-மரீசிபாலவ தரிக்கக் கட்டளையிட்டருள-தலைவி யவ்வாறே யமுனையாற்றிற் பூத்ததோர் தாமரைமலரின் மீது வலம்புரி வடிவமாய் சிவனாமந்தியானித்து தவஞ் செய்திருக்கையில்-அங்கு நீராட வந்த மரீசி கண்டடுக்கலு மோர் பெண் குழவி வடிவாக-அம்மையாமென் றெடுத்து பெருங்களி கூர்ந்தவனாய் தன் தேவி கரத்தளிக்க-அவள் வாங்கிய வளவில் கொங்கையில் சுரந்தபாலைபுகட்டி மகண்மை கொண்டு-வல்லபை யெனத் திருநாமஞ் சாற்றி வளர்த்து

வருங்கால்-அம்மைக் கையாண்டு செல்ல-பரமனைத் திருமணஞ் செய்ய வேண்டி தவஞ் செய்யத் தந்தைதாய ரிசைவுகொண்டு-அவர் கற்பித்தவேறோரிடத்து சேடியரோடுஞ் சென்றிருந்து பன்னிரண்டாண் டள வாய்த் தவஞ் செய்ய-அமலனும் இரங்கி ஓரந்தண வடிவத்தோடு தவச்சாலை சென்று அபிராமி தவத்தை சல்லாபவார்த்தையாற் சோதித்து பின் திவ்விய மங்கள கோலத்தோடு கணேசமூர்த்தி படிவங்கொண்டு மயூராரூடராய் காக்ஷிகொடுத்தருள-ஏமதன்னையும் மும்முறை வணங்கி இனிப்பிரியா வரம் வேண்டி நிற்கையில்-அருகிருந்த சேடியரோடி தந்தையாராகிய மரீசி முனிவர்க்கு நிகழந்தன கூறக் கேட்டகங்களித்து அவர்-அத்தவச்சாலையடைந்து மகளாரையும் பெருமானையும் தமதிருக்கை சேரச்சேர்த்து-விதிப்படி சுபமுகூர்த்தத்தில் சர்வாலங்காரமண்டபத்தில்-அந்நித்திய கலியாணரிரு வருக்கும் உலகுய்யும்படி திருக்கலியாண மகோற்சவ நடத்துகையில்-விஷ்ணுவும் ஆளுடையார் சன்னிதியடைந்து-தம்முடைய பெண்மக்கள் பன்னிருவரையும் திருமணம் புரிந்தருள விண்ணப்பிக்க-திருவுளமிசைந்து அவர்களையு மவ்வாறே வரித்தருளியபோது- மீட்டுமக் கேசவன் பணிந்து முப்பொருட்டிறமும் அவற்றை உணரு மார்க்கமும் உபதேசிக்கும் படி விண்ணப்பஞ் செய்ய-பரமாசிரியராகிய மகேசரும் திருவுளமிரங்கி அனுக்கிரகித்தருளி- விஸ்வரூப தரிசனையோடு பல வரங்களையுங் கடாக்ஷித்து-மரீசிமுனி முதலிய அடியவர்களுக்கும் நந்தாவரம் பலவுமனுக்கிரகித்து வல்லபைப்பிரான் நாச்சிமார்களோடு மணித்தீபமென்னும் சிவபுரத்திற் கெழுந்தருளி சர்வான்மாக்களும் உய்யும்படி இனிது வீற்றிருந்தனர்.

இலீலாகாண்டம் முற்றிற்று.

***********************************************************************

வாழி

சிங்கமஞ்ஞைமூடிகமாமூர்தி வாழி

திகழ்பரசாம்புஜம்பாசாங்குசமும் வாழி

தங்குகஜானனமேகதந்தம் வாழி

சதுர்ப்புஜம்லம்போதரம்வக்ரதுண்டம் வாழி

பொங்குமெழிற்சித்திபுத்திவலபை வாழி

பொருணான்குமுதவுபொற்றாண்மலர்கள் வாழி

துங்கவிநாயகர்தமிந்நூற்பெருக வாழி துதிசெய்தொண்டர்பல்லாண்டுசுகித்து வாழி

***********************************************************************