சித்திர ஆதிசங்கரர்
| பராசக்தியான காமாட்சியின் அருள் பொங்கும் நகரம் அது எனக்கண்டார் ஸ்ரீசங்கரர். அவளது இருப்பிடமான ஸ்ரீசக்ரத்தைப் போலவே அந்நகரைப் மாற்றியமைத்தால் அங்கு அம்பிகையின் அருட்பொலிவு முன்னிலையிலும் அதிகமாகும் எனக்கண்டார். ஆசாரியரின் கட்டளைப்படி மன்னன் நகர சாலைகளை ஸ்ரீசக்ர வடிவில் மாற்றி அமைத்தான். அதன் மத்தியில் அம்பிகை எழுந்தருளும் இடமாக அமைந்தது ஸ்ரீகாமாட்சியின் ஆலயமான காமகோட்டம். அக்காலத்தில் கலிகால மக்களால் தாங்க முடியாத அளவுக்குக் காமாட்சியின் சக்தி உக்கிரமான வெளிப்பட்டு வந்தது. அவளை அணுகவே அனைவரும் அஞ்சினர். ஆனால் ஆசாரியரோ அன்புத்தாயிடம் செல்லும் அருமை மகனாக ஆனந்தத்துடன் காமாட்சியை அடைந்தார். அவளுக்கு முன் ஸ்ரீசக்ரம் வரைந்து அதில் அவளது அதிகப்படி சக்தியை எல்லாம் இழுத்து அடைத்துவிட்டார். இந்தபின் காமாட்சியின் உக்கிரம் நீக்கி, அவள் கருணையின் எல்லையில் உள்ள பேரழகு மூர்த்தியாக ஆகிவிட்டாள். இன்றும் காஞ்சி காமாட்சியின் இந்த அருள்பொலிவை பக்தர்கள் அனுபவித்து மகிழலாம். | |