திருப்பள்ளியெழுச்சி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீ:
தொண்டரடிப்பொடியார்வார் அருளிச்செய்த

திருப்பள்ளியெழுச்சி

அரங்கனுக்குத் திருப்பள்ளியெழுச்சி அருளிச்செய்தவர் தொண்டரடிப்பொடியாழ்வார் ஒருவரே. அனைவரும் பல்லாண்டுகளாகத் திருப்பள்ளியெழுச்சி என்று கூறுவது இதையே. எல்லா ஸன்னிதிகளிலும் ஸேவிக்கப்படும் திருப்பள்ளியெழுச்சி இரு ஒன்றே.

எண்சீர்க் கரிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சூரியன் உதித்தவிட்டான்:பள்ளியெழுந்தருள்

917. கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்

கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,

மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்

வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,

எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த

இருங்களிற் றீட்டமும் பிடியடு முரசும்,

அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்

அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே. 1

கஜேந்திரனுக்கு அருளியவனே!பள்ளியெழுந்தருள்

918. கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்

கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ,

எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்

ஈன்பணி நனைந்தத மிருஞ்சிற குதறி,

விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்

வெள்ளெயி றுறவதன் விடத்தினுக் கனுங்கி,

அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த

அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே. 2

காலைக்காற்று வீசுகிறது:பள்ளியெழுந்தருள்

919. சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்

துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,

படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ

பாயிரு ளகன்றது பைம்பொழில் கமுகின்,

மடலிடைக் கீறிவண் பாளைகள் நாற

வைகறை கூர்ந்தது மாருத மிதுவோ,

அடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை

அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே. 3

அயோத்தி அரசே!பள்ளியெழுந்தருள்

920. மேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்

வேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்,

ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்

இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை,

வாட்டிய வரிசிலை வானவ ரேறே!

மாமுனி வேள்வியைக் காத்து,அவ பிரதம்

ஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே!

அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே. 4

தேவர்கள் பணிய வந்துள்ளனர்:பள்ளியெழுந்தருள்

921. புலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்

போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,

கலந்தது குணதிசைக் கனைகட லரவம்

களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,

அலங்கலந் தொடையல்கொண் டடியினை பணிவான்

அமரர்கள் புகுந்தன ராதவி லம்மா

இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்

எம்பெரு மான்!பள்ளி யெழுந்தரு ளாயே. 5

யாவரும் காத்துள்ளனர்:பள்ளியெழுந்தருள்

922. இரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ?

இறையவர் பதினொரு விடையரு மிவரோ?

மருவிய மயிலின னறுமுக னிவனோ?

மருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி,

புரவியோ டாடலும் பாடலும் தேரும்

குமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம்,

அருவரை யனையநின் கோயில்முன் னிவரோ?

அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே. 6

தேவருடன் முனிவர்கள் நின்னைத் தொழ நிற்கின்றனர்

923. அந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ?

அருந்தவ முனிவரும் மருதரு மிவரோ?

இந்திர னானையும் தானும்வந் திவனோ?

எம்பெரு மானுன கோயிலின் வாசல்,

சுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க

இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,

அந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ?

அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே. 7

சூரியனும் ஒளி பரப்பித் தோன்றினன்

924. வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க

மாநிதி கபிலையண் கண்ணாடி முதலா,

எம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு

ஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்,

தும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ?

தோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி,

அம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய்

அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே. 8

யாவருக்கும் காட்சி தரவேண்டுமே!பள்ளியெழுந்தருள்

925. ஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே

யாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி,

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்

கந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்,

மாதவர் வானவர் சாரண ரியக்கர்

சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,

ஆதலி லவர்க்குநா ளோலக்க மருள

அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே. 9

அடியார்க்கு அடியன் ஆவேன்

926. கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?

கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?

துடியிடை யார்கரி குழல்பிழிந் துதறித்

துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா,

தொடையத்த துளவமும் கூடையும் பொலிந்து

தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும்

அடியனை, அளியனென் றருளியுன் னடியார்க்--

காட்படுத் தாய்!பள்ளி யெழுந்தரு ளாயே. 10

அடிவரவு:கதிர் கொழு சுடர் மேட்டு புலம்பின இரவி அந்தரம் வம்பவிழ் ஏதம் கடிமலர் -- அமலன்.

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is திருப்பள்ளியெழுச்சித் தனியன்கள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  அமலனாதிபிரான் தனியன்கள்
Next