மெச்சூது

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

இரண்டாம் பத்து

மெச்சூது

சிறு குழந்தைகளின் செயல்களுள் பூச்சி காட்டுதல் ஒன்று. அவ்வாறு கண்ணனும் பூச்சி கட்டி விளையாடுகிறான். கோபியர்கள் குழந்தையின் செயலைக் கண்டு களிக்கிறார்கள். ஆழ்வாரும் பக்தியின் மேலீட்டால் அவ்விளையாட்டை நேரில் கண்டு மகிழ்வதுபோல் அநுபவித்து இன்பமடைகிறார்.

பூச்சி காட்டி விளையாடுதல்

கலித்தாழிசை

சங்கமிடத்தான்

118. மெச்சூது சங்க மிடத்தான் நல் வேயூதி,

பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்,

பத்தூர் பெறாதன்று பாரதம் கைசெய்த,

அத்தூத னப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே!அப்பூச்சி காட்டுகின் றான். 1

பார்த்தன் தேர்மேல் நின்ற கண்ணன்

119. மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும்,

பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய, பார்த்தன்

சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்ற,செங்கண்

அலவலைவந் தப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான். 2

குழலூதும் வித்தகன்

120. காயுநீர் புக்குக் கடம்பேறி, காளியன்

தீய பணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி,

வேயின் குழலூதி வித்தக னாய்நின்ற,

ஆயன்வந் தப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே!அப்பூச்சி கட்டுகின்றான். 3

கஞ்சனை மாளப் புரட்டியவன்

121. இருட்டில் பிறந்துபோய் ஏழைவல் லாயர்,

மருட்டைத் தவிர்ப்பித்து வன்கஞ்சன் மாளப்

புரட்டி,அந் நாளெங்கள் பூம்பட்டுக் கொண்ட,

அரட்டன்வந் தப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே!அப்பூச்சி காட்டுகின்றான். 4

கடைதாம்புக்கு ஆப்புண்டவன்

122. சேப்பூண்ட சாடு சிதறி, திருடிநெய்க்கு

ஆப்பூண்டு நந்தன் மனைவி கடைதாம்பால்,

சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க.அன

றாப்பூண்டா னப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே!அப்பூச்சி காட்டுகின்றான். 5

தேவகியின் தோன்றல்

123. செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு

சொப்படத் தோன்றித் தொறுப்பாடி யோம்வைத்த,

துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய,

அப்பன்வந் தப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே!அப்பூச்சி காட்டுகின்றான். 6

கோபால கோளரி

124. தத்துக்கொண் டாள்கொலோ தானேபெற் றாள்கொலோ,

சித்த மனையாள் அசோதை யிளஞ்சிங்கம்,

கொத்தார் கருங்குழல் கோபால கோளரி,

அத்தன்வந் தப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே!அப்பூச்சி காட்டுகின்றான். 7

பரதனுக்கு நாடு கொடுத்தவன்

125. கொங்கைவன் கூனிசொற் கொண்டு, கவலயத்

துங்கக் கரியும் பரியு மிராச்சியமும்,

எங்கும் பரதற் கருளிவன் கானடை,

அங்கண்ண னப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே!அப்பூச்சி காட்டுகின்றான். 8

களிறு துயர் தீர்த்தவன்

126. பதக முதலைவாய்ப் பட்ட களிறு

கதறிக்கை கூப்பிஎன் கண்ணாகண் ணாவென்ன,

உதவப்புள் ளூர்ந்தங் குறுதுயர் தீர்த்த,

அதகன்வந் தப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே!அப்பூச்சி காட்டுகின்றான். 9

தரவு கொச்சக் கலிப்பா

இலங்கை மலக்கிய வில்லாளன்

127. வல்லா ளிலங்கை மலங்கச் சரந்துரந்த,

வில்லா ளனைவிட்டு சித்தன் விரித்த

சொல்லார்ந்த வப்பூச்சிப் பாட லிவைபத்தும்

வல்லார்போய், வைகுந்தம் மன்னி யிருப்பரே. 10

அடிவரவு:மெச்சு மலை காயும் இருட்டில் சேப்பூண்ட செப்பு தத்து கொங்கை பதகம் வல்லாள் - அரவணையாய்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வட்டு நடுவே
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  அரவணையாய்
Next