ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
முதற் பத்து
வட்டு நடுவே
குழந்தை ஓடி வந்து தாயின் முதுகைக் கட்டிக்கொண்டு மகிழும்:தாயும் மகிழ்வாள். கண்ணனும் தாய்க்குத் தெரியாமல் பின்புறத்தே மெல்ல நடந்து வந்து தாயின் முதுகைக் கட்டிக் கொள்வான். அந்நிலையை விரும்பி யசோதை மகிழ்ந்ததுபோல் ஆழ்வார்தாமும் விரும்புகிறார்.
புறம் புல்கல்
(தன் முதுகைக் கட்டிக்கொள்ளும்படி கண்ணனை அழைத்தல்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை
கோவிந்தன் புறம் புல்குதல்
108. வட்டு நடுவே வளர்கின்ற, மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்,
சொட்டுச்சொட் டென்னத்துளிக்கத் துளிக்க என்
குட்டன்வந் தென்னைப் பறம்புல்குவான்
கோவிந்த னென்னப் புறம்புல்குவான்.
எம்பிரான் கண்ணன்
109. கிங்கிணி கட்டிக் கிறிகட்டிக் கையினில்,
கங்கண மிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி,
தன்கணத் தாலே சதிரா நடந்துவந்து,
என்கண்ண னென்னைப் புறம்புல்குவான்
எம்பிரா னென்னைப் புறம்புல்குவான். 2
கொத்துத் தலைவனை அழித்த அச்சுதன்
110. கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்,
ஒத்துப் பொருந்திக்கொண் டுண்ணாது மண்ணாள்வான்,
கொத்துத் தலைவன் சூடிகெடத் தோன்றிய,
அத்தன்வந் தென்னைப் புறம்புல்குவான்
ஆயர்க ளேறென் புறம்புல்குவான். 3
விசயன் தேர் ஊர்ந்தவன்
111. நாந்தக மேந்திய நம்பி சரணென்று,
தாழ்ந்த தனஞ்சயற் காகி, தரணியில்
வேந்தர்க ளுட்க விசயன் மணித்திண்தேர்
ஊர்ந்தவ னென்னைப் புறம்புல்குவான்
உம்பர்கோ னென்னைப் புறம்புல்குவான். 4
மண்பல கொண்ட வாமனன்
112. வெண்கலப் பத்திரங் கட்டி விளையாடி,
கண்பல செய்த கருந்தழைக் காவின்கீழ்,
பண்பல பாடிப் பல்லாண் டிசைபப், பண்டு
மண்பல கொண்டான் புறம்புல்குவான்
வாமன னென்னைப் புறம்புல்குவான். 5
பத்திராகாரன் கண்ணன்
113. சத்திர மேந்தித் தனியரு மாணியாய்,
உத்தர வேதியில் நின்ற வொருவனைக்,
கத்தியர் காணக் காணிமுற் றுங்கொண்ட,
பத்திரா காரன் புறம்புல்குவான்
பாரளந் தானென் புறம்புல்குவான். 6
வயிறார வெண்ணெய் விழுங்கியவன்
பொத்த வுரலைக் கவிழ்த்ததன் மேலேறி,
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்,
மெத்தத் திருவயி றார விழுங்கிய,
அத்தன்வந் தென்னைப் புறம்புல்குவான்
ஆழியா னென்னைப் புறம்புல்குவான். 7
மறையோர் வணங்கும் எம்பிரான்
115. மூத்தவை காண முதுமணற் குன்றேறி,
கூத்தவந் தாடிக் குழலா லிசைபாடி,
வாய்த்த மறையோர் வணங்க, இமையவர்
ஏத்தவந் தென்னைப் புறம்புல்குவான்
எம்பிரா னென்னைப் புறம்புல்குவான். 8
கற்பக மரத்தைப் பூமிக்குக் கொணர்ந்தவன்
116. கற்பகக் காவு கருதிய காதலிக்கு,
இப்பொழு தீவனென் றிந்திரன் காவினில்,
நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்,
உய்த்தவ னென்னைப் புறம்புல்குவான்
உம்பர்கோ னென்னைப் புறம்புல்குவான். 9
நன்மக்களைப் பெற்று மகிழ்வர்
117. ஆய்ச்சியன் றாழிப் பிரான்புறம் புல்கிய,
வேய்த்தடந் தோளிசொல் விட்டுசித் தன்மகிழ்ந்து,
ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்,
வாய்த்தநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. 10
அடிவரவு:வட்டு கிங்கிணி சுத்த நாந்தகம் வெண்கலம் சத்திரம் பொத்த மூத்தவை கற்பகம் ஆய்ச்சி - மெச்சூது.