கலங்க

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

கலங்க

திருநறையூர் -- 2

திருநறையூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள நம்பியையே ஆழ்வார் ஈண்டும் பாடுகிறார்.

கலிநிலைத்துறை

கடல் கடைந்தவன் ஊர் திருநறையூர்

1488. கலங்க முந்நீர் கடைந்தமு

தங்கொண்டு, இமையோர்

துலங்கல் தீர நல்கு

சோதிச் சுடராய,

வலங்கை யாழி யிடங்கைச்

சங்க முடையானூர்,

நலங்கொள் வாய்மை யந்தணர்

வாழும் நறையூரே. 1

நரசிங்கமாக அவதரித்தவன் ஊர் இது

1489. முனையார் சீய மாகி

யவுணன் முதண்மார்வம்,

புனைவா ளுகிரால் போழ்பட

வீர்ந்த புனிதனூர்,

சினையார் தேமாஞ் செந்தளிர்

கோதிக் குயில்கூவும்,

நனையார் சோலை சூழ்ந்தழ

காய நறையூரே. 2

இலங்கையை செற்றவன் இருப்பிடம் நறையூர்

1490. ஆனைப் புரவி தேரொடு

காலா ளணிகொண்ட,

சேனைத் தொகையைச் சாடி

யிலங்கை செற்றானூர்,

மீனைத் தழுவி வீழ்ந்தெழும்

மள்ளர்க் கலமந்து,

நானப் புதலில் ஆமை

யளிக்கும் நறையூரே. 3

உரலில் கட்டுண்டவன் உறைவிடம் நறையூர்

1491. உறியார் வெண்ணெ யுண்டுர

லோடும் கட்டுண்டு,

வெறியார் கூந்தல் பின்னை

பொருட்டுஆன் வென்றானூர்,

பொறியார் மஞ்ஞை பூம்பொழில்

தோறும் நடமாட,

நறுநாண் மலர்மேல் வண்டிசை

பாடும் நறையூரே. 4

மருத மரங்களை முறித்தவன் மன்னும் ஊர் நறையூர்

1492. விடையேழ் வென்று மென்தோ

ளாய்ச்சிக் கன்பனாய்,

நடையால் நின்ற மருதம்

சாய்த்த நாதனூர்,

பெடையோ டன்னம் பெய்வளை

யார்தம் பின்சென்று,

நடையோ டியலி நாணி

யளிக்கும் நறையூரே. 5

பேய்ச்சி பாலுண்டவன் தங்கும் ஊர் நறையூர்

1493. பகுவாய் வன் பேய் கொங்கை

சுவைத்தா ருயிருண்டு,

புகுவாய் நின்ற போதகம்

வீழப் பொருதானூர்,

நெகுவாய் நெய்தல் பூமது

மாந்திக் கமலத்தின்,

நகுவாய் மலர்மே லன்ன

முறங்கும் நறையூரே. 6

சாந்தீபினிக்கு அருள்செய்தவன் அமரும் ஊர் இது

1494. முந்து நூலும் முப்புரி

நூலும் முன்னீந்த,

அந்த ணாளன் பிள்ளையை

யஞ்ஞான் றளித்தானூர்,

பொந்தில் வாழும் பிள்ளைக்

காகிப் புள்ளோடி,

நந்து வாரும் பைம்புனல்

வாவி நறையூரே. 7

பார்த்தன் தேரூர்ந்தவன் வாழும் இடம் நறையூர்

1495. வெள்ளைப் புரவித் தேர்விச

யற்காய் விறல்வியூகம்

விள்ள, சிந்துக் கோன்விழ

வூர்ந்த விமலனூர்,

கொள்ளைக் கொழுமீ னுண்குரு

கோடிப் பெடையோடும்,

நள்ளக் கமலத் தேற

லுகுக்கும் நறையூரே. 8

தேவதேவன் சேரும் ஊர் நறையூர்

1496. பாரை யூரும் பாரந்

தீரப் பார்த்தன்தன்

தேரை யூரும் தேவ

தேவன் சேருமூர்,

தாரை யூரும் தண்தளிர்

வேலி புடைசூழ,

நாரை யூரும் நல்வயல்

சூழ்ந்த நறையூரே. 9

திருமாலின் துணை கிடைக்கும்

1497. தாமத் துளப நீண்முடி

மாயன் தான்நின்ற,

நாமத் திரள்மா மாளிகை

சூழ்ந்த நறையூர்மேல்,

காமக் கதிர்வேல் வல்லான்

கலிய னொலிமாலை,

சேமத் துணையாம் செப்பு

மவர்க்குத் திருமாலே. 10

அடிவரவு:கலங்க முனை ஆனை உறி விடை பகுவாய் முந்து வெள்ளை பாரை தாமம் -- அம்பரமும்.





 





 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கண்ணும் சுழன்று
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  அம்பரமும்
Next