கண்டனத்திலும் கண்ணியம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

மன்னார்குடிப் பெரியவாள் நம்முடைய அத்வைத வித்யையைத் தர்க்க சாஸ்த்ர பூர்வமாக நிலைநாட்டப் புஸ்தகம் எழுதினபோது, ஆரம்பத்திலேயே ஒரு தர்க்க விதியை – தத்ஹேது ந்யாயத்தை – பக்தி ச்லோகத்தில் அழகாக நுழைய விட்டிருக்கிறார். தர்க்கம் மாதிரியான அறிவாராய்ச்சிகளும் தெய்வபக்திக்கு அடங்கியே போக வேண்டுமென்று காட்டுவதுபோல இருக்கிறது.

இந்த பக்தி விசேஷத்தால்தான் அவர் மஹாபுத்திமானாக இருந்தும் கொஞ்சங்கூட அஹங்காரமோ, கர்வமோ இல்லாமலிருந்தார். இதைப்பற்றி முன்னேயே சொன்னதில் குறிப்பாக ஒன்றைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். அதாவது, ரொம்ப அறிவாளியாக இருந்து, ஏதோ ஒரு நூலுக்கு மறுப்பு நூலாக வாதப்ரதிவாதங்களை வீசி ஒருத்தர் எழுதுகிறாரென்றாலோ, அல்லது, வித்வத்ஸதஸில் மற்ற வித்வான்களோடு வாதம் நடத்துகிறாரென்றாலோ, அப்போது எதிராளிகளைத் தாக்குத்தாக்கு என்று தாக்குவதிலும் தங்களுடைய புத்தி வன்மையைக் காட்டுவதே இயற்கை. குத்தலாக – பரிஹாஸமாகவும், “பிச்சு வாங்குவது” என்றபடி நேராகவே கண்டித்தும் எழுதுவதில் அநேக வித்வான்களுக்கு ருசி ஏற்பட்டுவிடுகிறது. இந்த அம்சத்தில் இந்தப் பெரியவர் மாதிரி எவராவது அத்தனை ஸாத்விகமாகக் கண்டனம் தெரிவிக்கமுடியுமா என்றே இருக்கிறது. வாத ப்ரதிவாதங்கள் எதற்கு என்று அவர் எங்கேயோ ஒதுங்கியிருக்கவில்லை. ஸத்யமான தத்வங்களை நன்றாக ப்ரகடனம் பண்ணத்தான் வேண்டும் என்று, வித்வத் ஸதஸ்களில் கலந்துகொண்டு மாற்று அபிப்ராயக்காரர்களைத் தோற்றுப்போகப் பண்ணியவர் அவர், கண்டன க்ரந்தங்களும் எழுதினவர். ‘ந்யாயேந்து சேகர’மே அப்படியொன்றுதான். அப்பைய தீக்ஷிதரைப் போலவே அத்வைதம், சிவ பக்தி ஆகிய இரண்டையும் நிலைநாட்டி அவர் வாதம் செய்யவும், புஸ்தகங்கள் எழுதவும் வேண்டியிருந்தது. ‘ந்யாயேந்து சேகரம்’ அத்வைத விஷயமானது. ‘துர்ஜநோக்தி நிராஸம்’ என்று ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார். அது சிவஸம்பந்தமானது. அவர் காலத்திலிருந்த இன்னொரு பெரிய பண்டிதர்* – அவரும் ‘மஹாமஹோபாத்யாய’ பட்டம் வாங்கினவர் – ஸ்மார்த்தராகப் பிறந்த போதிலும் அத்வைதம், ஸந்நியாஸம், சிவபக்தி ஆகிய எல்லாவற்றையும் கண்டிப்பவராக இருந்தார். அவர் சிவாராதனையை ஒரே தூஷணையாக தூஷித்து எழுதினார். அப்போது பலர் நம்முடைய ‘பெரியவா’ ளிடம் விஜ்ஞாபித்துக்கொண்டதன் பேரிலேயே அவர் ‘துர்ஜநோக்தி நிராஸம்’ எழுதி, சைவத்துக்கு விரோதமான அபிப்ராயங்களைத் தகர்த்தெறிந்தார். அப்படியிருந்தும், அந்த எதிர்க் கட்சிக்காரப் பண்டிதர் ரொம்பவும் கடுமையாக சிவாராதனத்தைத் தாக்கிப் பலபேர் மனஸைப் புண்படுத்தியிருந்துங்கூட, இவரோ புத்திரீதியில் பாயிண்டுக்கு மேல் பாயிண்டாகக் கொடுத்துக்கொண்டே போய்தான் எதிர் வாதத்தை வென்றாரே தவிர தூஷணையாக த்வேஷமாக ஒரு வார்த்தைகூட எழுதவில்லை! புத்திமானாக இருந்தவர் கனிந்த பக்திமானாகவும் இருந்ததன் விசேஷம்! கண்டனத்திலும் கண்ணியம் தப்பாதவர் என்று பெரிய கீர்த்தி பெற்றார்.


* திருவிசைநல்லூரர் ராமஸுப்பா சாஸ்திரிகள்

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is விக்னேஸ்வரர் ரக்ஷிக்கட்டும்!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பிறையுடன் விளையாடிய பிள்ளையார்
Next