விக்நேச்வரர் ரக்ஷிக்கட்டும் ! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஸர்வார்த்த ப்ரதிபாதநைக சதுரோ த்வைமாதுரோ அவ்யாத் ஸ ந:

என்று விக்நேச்வர ஸ்தோத்ரத்தின் மூலம் தத்ஹேது ந்யாயத்தை எடுத்துக்காட்டும் ‘ந்யாயேந்து சேகர’ ச்லோகம் முடிகிறது. ‘த்வைமாதுரோ அவ்யாத் ஸ ந:’ என்றால் ‘இரண்டு தாயார்களை உடையவரான விக்நேச்வரர் நம்மை ரக்ஷிக்கட்டும்’ என்று அர்த்தம்.

ச்லோகத்தின் முதல் மூன்று வரிகளில் அது விக்நேச்வரரைப் பற்றியது என்று பெயரைக் குறிப்பிட்டு வெளிப்படக் காட்டாமல், ‘மற்ற தேவதைகளில் ஒன்றைப் பூஜிக்க விரும்புகிறவர்கள்கூட அந்தப் பூஜைக்கு ஏற்படக்கூடிய இடையூற்றை நீக்கிக் கொள்வதற்காக எவருடைய திருவடித் தாமரைகளைப் பூஜிக்கவேண்டியது அவச்யம் என்று கருதுகிறார்களோ, இப்படிப்பட்ட பக்தர்களில் தத்ஹேது ந்யாயமும் தெரிந்தவராக உள்ளவர்கள் மற்ற தேவதா பூஜையே வேண்டாம் என்று எவரொருத்தரையே பர தெய்வமாகப் பூஜிப்பதோடு நிறுத்திக் கொள்கிறார்களோ’ என்று சொல்லிவிட்டு, ‘எவர்’ ‘எவர்’ என்று பெயரைச் சொல்லாமல் குறிப்பிட்ட அவரை நாலாம் வரியில் ‘அவர் இவர்தான், த்வைமாதுரராக இருக்கப்பட்ட விக்நேச்வரர் தான்’ என்று வெளிப்படப் பெயர் சொல்லி ‘இப்படியாகப்பட்டவர் நம்மை ரக்ஷிக்கட்டும் : அவ்யாத் ஸ ந :’ என்று முடித்திருக்கிறது. ‘யத் பாத பங்கேருஹ’: எவருடைய திருவடித் தாமரைகளை; ‘தேவம் யம் ஏகம் பரம்’ : எவரை ஏகம் பர தேவதையாக-என்று சொல்லி அப்புறம் ‘த்வைமாதுரோ ஸ: ந: அவ்யாத்’: த்வைமாதுரரான அவர் நம்மை ரக்ஷிப்பாராக’ என்று நன்றாக அடையாளம் புரியவைத்து முடித்திருக்கிறது.

அப்யந்யாமரமாரிரா தயிஷ தாம் யத்பாதபங்கேருஹ

த்வந்த்வாரா தநமந்தராய ஹதயே கார்யம் த்வவச்யம் விது: |

தத்தேதோரிதி நீ திவித்து பஜதே தேவம் யமேகம் பரம்

ஸர்வார்த்தப்ர திபா தநைகசதுரோ த்வைமாதுரோ (அ) வ்யாத்ஸ ந: ||

கதை சொல்வார்கள். ஒருவன் யாசகத்துக்காக நவாபின் அரண்மனைக்குப் போனானாம். “கொஞ்சம் காத்திரு. நவாப் நமாஸ் பண்ணப் போயிருக்கிறார்” என்று ஆட்கள் சொன்னார்களாம். “அப்படியா ஸமாசாரம்? நாம் வேண்டுமானதைக் கேட்டு வாங்கிக் கொள்ள நவாபிடம் வந்தால், அவரும் தமக்கு வேண்டுமானதற்காக அல்லாவிடம் பிரார்த்திக்கத்தான் வேண்டியிருக்கா? அப்படியானால் நம்மைப் போலவே யாசகராகவுள்ள இந்த நவாபிடம் கை நீட்டாமல் நாமும் நேராக அந்த அல்லாவிடமே வேண்டிக்கொள்ளலாமே!” என்று சொல்லிவிட்டு யாசகன் போய்விட்டானாம்.

ஏறக்குறைய இந்த மாதிரிதான், ‘ஏனைய தேவர்களும் தங்கள் கார்யம் நிர்விக்னமாக நடக்க வேண்டுமென்பதற்காக விக்நேச்வரரை நமஸ்காரம் பண்ணுகிறார்களென்னும் போது, நாம் ஒவ்வொரு கார்யத்துக்காக இவர்களில் ஒவ்வொரு தேவதையை வேண்டுவதைவிட இந்த எல்லாக் கார்யங்களுக்காகவும் விக்நேச்வரர் ஒருத்தரையே வழிபட்டு விடலாம்’ என்பது.

பிள்ளையாரை விஷயமாக எடுத்துக்கொண்டு அவருடைய பெருமையிலேயே மனஸைச் செலுத்தி நாமும் பெருமைப்படும்போது இப்படிச் சொன்னாலும், பொதுவாக நம் மனப்பான்மை ஒவ்வொரு விதமான பலனுக்கு அதற்கென்றே விசேஷமாக ஏற்பட்டுள்ள தேவதையைப் பிரார்த்திப்பதாகத்தான் இருக்கும். அதில் தப்பில்லை. அந்தப்படியே பண்ணலாம். அதோடு, இஷ்ட தேவதை என்று ஒவ்வொருத்தருக்கும் தனியான பிடிப்பு இருப்பதாக ஒன்று இருக்கும். குலதேவதை என்று வம்சாவளியாக ஒன்று இருக்கும். இந்த தேவதைகளை அவசியம் பூஜிக்கத்தான் வேண்டும். ஆனாலும் எந்த தேவதையின் பூஜையானாலும் முதலில் ‘சுக்லாம் பரதரம்’ குட்டிக் கொள்ளாமல் முடியாது! எந்த ஸ்வாமியிடம் எதற்காகப் போய் நிற்கவேண்டுமானாலும், அதற்கு முன்னாடி, அந்த ஸ்வாமியும் தான் க்ருதக்ருத்யராவதற்காக எந்த ஒரு ஸ்வாமியிடம்போய் நிற்க வேண்டியிருக்கிறதோ, அந்தப் பிள்ளையாரிடம் நாம் போய் நின்று பிரார்த்தித்து நமஸ்காரம் பண்ணித் தானாக வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஐயப்பனின் தாயாரைப் பற்றிய பிரச்னை!   அக்கால வழிபாட்டு முறைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கண்டனத்திலும் கண்ணியம்
Next