குரு பக்திக்கு ஈசன் செய்யும் அருள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

சிஷ்யன் எப்படி நினைத்தாலும், கடைத்தேறணுமென்று நினைத்தாலும் ஸரி, அதைப் பற்றித் தான் கவலைப்படுவதில்லை என்று வைத்துவிட்டாலும் ஸரி – இவனுக்கும் பரம ஞானம், கதி மோக்ஷம் கிடைத்தே தீரும். இவன் ஈச்வரனை நினைக்காவிட்டாலும், ஈச்வரன் இவன் பராபக்தியுடன் தாஸ்யம் செய்கிற குருவுக்குள் இருப்பதால், இவனுடைய பக்தியை வாங்கிக்கொண்டு – எல்லா நமஸ்காரமும் ஒரு கேசவனைத்தான் சென்றடைகிறது என்றபடி வாங்கிக் கொண்டு – இவனுக்குப் பரமாநுக்ரஹம் பண்ணி விடுவான். அவனுக்குத் தன்னை ஈச்வரனென்று பெயர் கொடுத்து, ஸ்தானம் கொடுத்து பக்தி பண்ணினால்தான் அநுக்ரஹிப்பது என்ற எண்ணம் கிடையாது. எவராயிருந்தாலும், எவரிடமாயிருந்தாலும் கொஞ்சங்கூடத் தன்னலமே கருதாமல் பூர்ணமான ப்ரேமையை வைத்து, ஆத்மார்ப்பணம் பண்ணி ஸேவை செய்தால் அது தனக்கே செய்யும் பூஜை என்று ஏற்றுக்கொண்டு க்ருபை செய்துவிடுவான்.

அவனையேகூட த்ரிலோக நாதன் என்று தெரிந்துகொள்ளாமல், அதனால் கை கட்டி வாய் புதைத்துப் பூஜை பண்ணாமல், ‘நம்மைச் சேர்ந்த, நம்மைப் போன்ற ஒரு ஆள்’ என்றே நினைத்து, ஆனாலும் தன்னலம் கலக்காமல் பூர்ண ப்ரேமையோடு ஸ்வாதீனமாகக் கலந்து பழகினாலும் மோக்ஷ பர்யந்தம் அநுக்ரஹம் புரிந்து விடுவான். கோபிகா ஸ்தீரீகள் வ்ருத்தாந்தத்தில் இப்படித்தான் பார்க்கிறோம். பக்தியின் உச்சஸ்தானம் எங்கே என்றால் அவர்களிடம்தான் என்று நாரதாதிகளும் சொல்லி நமஸ்காரம் பண்ணியிருக்கிறார்கள். க்ருஷ்ண பரமாத்மாவே அப்படித்தான் கொண்டாடியிருக்கிறான். அவர்களுக்கு அவன் பரமாத்மா என்ற ஸமாசாரமே தெரியாது. பரமாத்மா என்ற ஒன்றைப் பற்றியே அவர்கள் கேள்விப்பட்டதில்லை. ஜார சோரன் – ஸ்த்ரீகளின் ஹ்ருதயத்தை ப்ரேமையில் தவிக்க வைப்பவன் – திருடன், என்றுதான் அவனைத் தெரியும். ஆனாலும் அவனிடமே ப்ரேமை என்று ஸர்வஸங்க பரித்யாகம் பண்ணினார்கள். அந்த வார்த்தைகூட அவர்களுக்குத் தெரியாது! ஆனாலும் பண்ணினார்கள்! பகவான் அதையே மதித்து அவர்களை கோலோகம் என்கிற தன்னுடைய நித்யாநந்த விஹார பூமியிலே தன்னுடைய மஹிஷிகளாக்கிப் பெரிய உயர்வு கொடுத்தான்.

இந்தவிதமாக, குருவையே ஸகலமுமாக நினைத்து பக்தி பண்ணிவந்தால், ஞானம், கதிமோக்ஷம் என்று ஒருவன் தவித்து வேண்டிக்கொள்ளாவிட்டாலும் ஈச்வரனே அவற்றை அநுக்ரஹம் செய்துவிடுவான். இவனுடைய கர்மாவையும் பார்த்து ஈச்வரன் செய்வது என்கிறபோது, சோதனைகள் வைக்கும்போது ‘டிலே’பண்ணிக்கொண்டே போகும் போது, குருவின் ஸஹாயம் இதையெல்லாம் ஸமாளிப்பதற்குப் பெரிய பக்கபலமாக இவனுக்கு உதவும். அதாவது குருவின் மனஸ் என்பது ஈச்வரனுக்கு வேறே மாதிரியாக கொஞ்சமோ நிறையவோ இருக்கிறதில் – அவனுடைய விளையாட்டிலே பரம அத்வைதாநுபூதிமான்களாக இருக்கப்பட்டவர்களுக்குக்கூடக் கருணா நிமித்தமாகவே கொஞ்சம் பேதமாகத் தங்களுடைய தனி மனஸு மாதிரி ஒன்று இருப்பதுண்டு. அநுபூதியிலே ரொம்ப மேலே போகாத குருக்களுக்கு இன்னம் ஜாஸ்தியாகவே த்வைத பாவம் இருக்கும். இப்படிக் கொஞ்சமாகவோ, நிறையவேயோ இருக்கிறதில் – குருவானவர்கள் சிஷ்யனின் கர்மாவுக்காக சோதனை, டிலே என்று ஈச்வரன் ரொம்பவும் செய்து விடாமல், அவனுடைய behalf -ல் தாங்களும் ஈச்வரனிடம் பிரார்த்திப்பார்கள். தங்களுடைய தபோ சக்தியையும் அதற்காகக் கொடுப்பார்கள். தங்களிடமே கூட சிஷ்யனின் கர்மாவை transfer செய்து கொண்டும் உபகரிப்பார்கள். ஈச்வரனிடம் நேராகப் பேசிப் பழகக் கூடியவர்களானால் அவனிடம் சிஷ்யனுக்காக மன்றாடுவதிலிருந்து மிரட்டுவது வரை எல்லாம் செய்வார்கள். முன்னேயே கதைகள் சொன்னேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is மூன்று விதமான பாவங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  குரு-சிஷ்யர்:இருபெரும் தர்மங்களின் உருவகம்
Next