ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
மலைநாட்டுத் திருப்பதிகள்
திருவாறன்விளை (ஆரம்முளா)
செங்கண்ணூரிலிருந்து (மார்க்கம் 82 காண்க) கிழக்கே 6 மைல், பஸ்ஸில் போகலாம். வசதிகள் குறைவு. ஆனால் தேவஸ்தான சத்திரம் இருக்கிறது. தளிகை செய்து சாப்பிடலாம்.
மூலவர் - திருக்குறளப்பன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - பத்மாஸநி நாச்சியார்.
தீர்த்தம் - வேதவ்யாஸ ஸரஸ், பம்பா தீர்த்தம்.
விமானம் - வாமன விமானம்.
ப்ரத்யக்ஷம் - ப்ரஹ்மா, வேதவ்யாஸர்.
விசேஷங்கள் - யுத்தத்தில், கர்ணனின் தேர் இடது சக்கரத்தை பூமிவிழுங்கிய பொழுது, கர்ணன், தன் ரதத்தைத் தூக்கிவிட்டு வரும்வரை பூமியில் இருக்கும் தன்னைக் கொல்ல வேண்டாம் என்று சொல்லியும், வஞ்சகமாக பாணத்தைப் போட்டுக் கொன்றதால், மனது வருந்திய அர்ஜுனன், இவ்விடம் வந்து தவம் செய்து இந்த கோவிலை ஜூர்ணோத்தாரணம் செய்ததாக ஸ்தலபுராணம். ஒரு பெரிய மேட்டின் மேலுள்ள இப்பெரிய கோயில் அர்ஜுனனால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாம். பக்கத்தில் கோவில் மதிலைத் தொட்டுக்கொண்டு அழகிய பம்பாநதி ஓடுகிறது. முன்பு ப்ருஹ்மதேவரிடமிருந்து வேதங்களை மதுகைடபர்கள் அபகரித்த போது ப்ருஹ்மா ஸ்ருஷ்டிஞான சூனியராக, பகவானைக் குறித்து தவம் செய்ய, பகவான் ஸ்ருஷ்டி ஞானத்தை ப்ருஹ்மாவுக்கு திரும்பி அருளிய ஸ்தலம்.
இந்த ஸ்தலத்தில்தான் சபரிமலை ஐயப்பஸ்வாமியின் ஆபரணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின்போது ஊர்வலமாக சபரிமலைக்கு பக்தகோஷ்டியுடன் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.