சித்திர ஆதிசங்கரர் - பகுதி 8 - Illustrated Adi Shankara | Sri Kanchi Kamakoti Peetham
  1. Home
  2. Articles
  3. சித்திர ஆதிசங்கரர்
  4. சித்திர ஆதிசங்கரர் - பகுதி 8
சித்திர ஆதிசங்கரர்

சித்திர ஆதிசங்கரர் - பகுதி 8

Sri Kanchi Kamakoti Peetham

சங்கரன் அங்கே சென்றபொழுது நர்மதை பிரவாரமாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. சங்கரன் தன் சக்தியால் அப்பிரவாகத்தை கமண்டலத்தில் அடக்கினான். பெரு வெள்ளமாக இருந்த அந்த நதியை மக்களுக்கு உதவும் முறையில் கரைக்கு அடங்கி ஓடுகிற ஆறாக மீண்டும் பாயவிட்டான்.அங்கே நர்மதையின் கரையில் காத்திருந்த கோவிந்த பகவத் பாதர் இந்த அற்புதத்தைக் கண்டு, அன்பு பொங்கும் உள்ளத்தோடு சங்கரனை

வரவேற்றார். தலையிலிருந்த முடியைக் களைத்து, காஷாய ஆடை உடுத்துப் புதியதொரு பொலிவினைப் பெற்றான் சங்கரன்.

இதுவே துறவறத்தின் அடையாளமாகும். அவனுக்குத் துறவு மந்திரம் புகட்டினார் கோவிந்த பகவத் பாதர். "அனைத்தும் கடவுளின் தோற்றமே:மனித ஜீவனாகத் தன்னை எண்ணிக்கொண்டிருப்பவனும் உண்மையில் கடவுள் என்கிற ஒரே தத்துவம்தான் என்ற உண்மையைக் கூறும் வேத மந்திரங்களுக்கு "மகா வாக்கியங்கள்"எனப்பெயர். இந்த மகா வாக்கியங்களையும் சங்கரனுக்கு உபதேசித்தார் கோவிந்தர்.

சந்நியாசியாகிவிட்ட சங்கரனை இனி நாம் மரியாதையுடன் சங்கரர் என்றே அழைக்கலாம். மகா வாக்கியங்கள் எல்லாம் சங்கரருக்குத் தானாகவே அனுபவத்தில் தெரியும். மூல குருவான தக்ஷிணாமூர்த்தியே அவர் தாமே?என்றாலும் உலகத்தில் குரு- சிஷ்ய முறையின் பெருமை விளங்க வேண்டும் என்பதால் அடக்கத்துடன் கோவிந்தரிடம் சீடரானார்.

தெய்வமாக இருந்து பெரிய சக்தியினால் மக்களை நல்வழிப்படுத்துவதைவிட, மனிதர்போல இருந்து அன்பால் அவர்களை உயர்துவதுதான் சிறப்பானது:அப்போதுதான் மற்ற மானுடர்களுக்கும் தாங்கள் கூடத் தெய்வமாக உயரலாம் என்ற நம்பிக்கை பிறக்கும் என்று கருதினார்.

சித்திர ஆதிசங்கரர் - பகுதி 8