சித்திர ஆதிசங்கரர் - பகுதி 6 - Illustrated Adi Shankara | Sri Kanchi Kamakoti Peetham
  1. Home
  2. Articles
  3. சித்திர ஆதிசங்கரர்
  4. சித்திர ஆதிசங்கரர் - பகுதி 6
சித்திர ஆதிசங்கரர்

சித்திர ஆதிசங்கரர் - பகுதி 6

Sri Kanchi Kamakoti Peetham

அன்னையின் துயர் தீர்க்க எண்ணினான் சங்கரன். பூர்ணா நதியைப் பிரார்த்தித்து, "வா வா"என்று அழைத்தான். பரமேஸ்வரனின் அவதாரமான அவனது வார்த்தைக்கு நதியும் கட்டுப்பட்டது. பூர்ணா நதி தனது போக்கையே மாற்றிக் கொண்டு, சங்கரன் வீட்டு தோட்டத்திற்கே வந்துவிட்டது. அன்னை பேரானந்தம் அடைந்தாள்.

ஒரு நாள் சப்த ரிஷிகள் எனப்படும் மாமுனிவர் எழுவர் சங்கரன் தனித்திருந்தபோது அவனிடம் வந்தனர். "பெருமானே!நாளுக்கு நாள் நாட்டில் நாஸ்திகம் வலுத்து வருகிறது. தாங்கள் ஆஸ்திகத்தை நிலை நிறுத்தவே அவதாரம் செய்து எட்டாண்டுகள் முடிய இருக்கிறது. தங்களது அவதாரப் பணியை நினைவூட்டவே வந்தோம்"என்றனர்.

"நல்லது. பணியைத் தொடங்குவேன். துறவியாகி, வீட்டை விட்டு, நாட்டைச் சுற்றிச்சுற்றி வந்து உபதேசித்தால் தான் இப்பணி நடைபெறும். இவ்விதம் நான் துறவியாவதற்கு வாய்ப்பாக இந்நிகழ்ச்சிகளை உருவாக்குவேன்."என்றான் சங்கரன். சப்தரிஷிகள் திருப்தியுடன் விடைபெற்றனர். சங்கரன் திட்டமிட்டபடியே சம்பவம் நடந்தது. அவன் அன்று பூர்ணா நதியில்

நீரோடுகையில் முதலை ஒன்று அவனுடைய காலைக் கவ்வி விட்டது.

"அம்மா!அம்மா!"என்று அலறினான் சங்கரன். ஆர்யாம்பாள் கதிகலங்கி விட்டாள். தன் உயிருக் குயிரான உத்தமக் குழந்தையை முதலை பற்றியிருப்பது கண்டு துடி துடித்தாள். ஆனால் அவளால் எப்படி முதலையின் இறுக்கமான பிடிப்பிலிருந்து குழந்தையை விடுவிக்க முடியும்?

"ஜயோ!உன்னைக் காப்பாற்றுவது என் கையில் இல்லையே!கையாலாகாத பாவியாக நிற்கிறேனே!"என்று கூறி கையைப் பிசைந்தாள் ஆர்யாம்பாள்.

"இல்லையம்மா, என்னைக் காப்பது உன்கையில்தான் இருக்கிறது"என்றான் சங்கரன். அதன் பொருள் விளங்காமல் அவள் தவிக்க சங்கரனே தொடர்ந்து கூறினான். "அம்மா, இந்தப் பிறவியில் நான் முதலையால் கொல்லப்படவேண்டும் என்பது விதி ஆனால் இப்போதே சந்நியாசம் செய்து கொண்டு, துறவியாகி, வீட்டையும் உறவினரையும் உடமைகளையும் விட்டு விட்டு வெளியேறினேனாகில் இந்தப் பிறவியே முடிந்து, எனக்கு வேறு பிறவி உண்டானதாகும். சாஸ்திரப்படி சந்நியாசம் என்பது மறு பிறவி யாகும். அடுத்த பிறவியில் முதலை என்னை எதுவும் செய்ய முடியாது. எனவே இப்போது நான் துறவியாவதற்கு c அனுமதி கொடுத்தால் முதலை என்னை விட்டு விடும். என்னை பிழைக்க வைப்பது உன்கையில் தான் இருக்கிறது."என்றான் சங்கரன்.

சித்திர ஆதிசங்கரர் - பகுதி 6