சித்திர ஆதிசங்கரர் - பகுதி 22 - Illustrated Adi Shankara | Sri Kanchi Kamakoti Peetham
  1. Home
  2. Articles
  3. சித்திர ஆதிசங்கரர்
  4. சித்திர ஆதிசங்கரர் - பகுதி 22
சித்திர ஆதிசங்கரர்

சித்திர ஆதிசங்கரர் - பகுதி 22

Sri Kanchi Kamakoti Peetham

திருமாளின் திவ்விய தலங்களில் தலைசிறந்து விளங்குபவை ஸ்ரீரங்கமும், திருப்பதியும் ஆகும். ஆனைக்கா விஜயத்தின்போதே ஆசாரியர்கள் அரங்கநாதனையும் தரிசித்து அவ்வாலயத்தில் யந்திர ஸ்தாபிதம் செய்தார்

திருப்பதியில் வேங்கடரமணப் பெருமாளைக் கண்டு மனம் உருகினார் ஆசாரியர். அவனை அடியிலிருந்து முடிவரையில் அங்க அங்கமாக வர்ணிக்கும் "விஷ்ணு பாதாதிகேசாந்த ஸ்தோத்திர" த்தை இயற்றிப் பாடினார்.

ஏழுமலை கடந்து விளங்கும் இப்பெருமானை எங்கே நானில மக்கள் காணாதிருந்து விடுவாரோ எனக்கருதினார் போலும். திருமலை திருப்பதியில் ஒரு யந்திரத்தை ஸ்தாபித்து விட்டார். ஜனங்களை ஆகர்ஷிக்கும் இந்த யந்திரத்தை அவர் ஸ்தாபித்தாலும் ஸ்தாபித்தார். அன்றிலிருந்து திருப்பதியில் நித்திய உற்சவமாக இருக்கிறது.

புனித பாரத நாட்டை புனிதமாக்கும் பண்ணிரன்டு ஜோதிலிங்கங்கள் உள்ளன. ஸோமநாதபுரி. ஓம்காரமாந்தாதா, பரலி வைத்யநாத், பீமசங்கரம், ராமேசுவரம், தாருகாவனம், காசி, நாஸிக் கௌதமீதடம், கெதாரினாத், குஸ்ருணேச்வரம் என்பனவே பன்னிரண்டு ஜ்யோதிர்லிங்க க்ஷேத்திரங்களாகும். தேசம் நெடுகிலும் பரவியுள்ள இத்தளங்களை யாவற்றிற்கும் ஆசாரிய சங்கரர் சென்று வணங்கியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் இணைத்து த்வாதச ஜ்யோத்ர்லிங்க ஸ்தோத்திரம் என்ற ஒரு துதியும் செய்திருக்கிறார்.

ஆயினும் இவை யாவற்றுள்ளும் அவனது மனத்தை மிகவும் கொள்ளை கொண்டது ஆந்திர தேசத்தில் உள்ள ஸ்ரீசைலமேயாகும் முன்பு நாம் கண்ட திருவிடைமருதூரை மத்யார்ஜனம் என்றும் சொல்வார்கள். அர்ஜுனம் என்றால் மருதமரம். மருதமரத்தின் கீழ் இறைவன் எழுந்தருளும் இடம் அர்ஜுன க்ஷேத்திரமாகிறது. ஸ்ரீசைலத்தில் மல்லிகைக்கொடி தழுவிய ஒரு மருதமரத்தின் கீழ் சிவலிங்கம் எழுந்தருளியிருக்கிறது. எனவே இங்கு இறைவன் மல்லிகார்ஜுனர் எனப்படுகிறார். வனத்தின் நடுவே மல்லிகார்ஜுனப் பெருமாளைக் கண்டதும் ஆசாரியரின் உள்ளத்தில் சிவாநந்த வெள்ளமே அலைமோதிக் கொண்டு பெருககெடுத்தது. உடனே சிவானந்தலஹரி என்ற நூறு சுலோகங்கள் அவரது நாவிலிருநிது குபுகுபு வெனப்பொங்கி வெளிவந்தன

சித்திர ஆதிசங்கரர் - பகுதி 22