"அடியார் பெருமை" இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஆன்ம சாதனங்களைத் தீவிரமாகப் பற்றிக் கொண்டு, ஆன்ம பக்குவம் அடைந்து, இறைவனின் திருவடிகளையே தஞ்சம் எனக் கொண்டு, கற்பன

"அடியார் பெருமை"

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஆன்ம சாதனங்களைத் தீவிரமாகப் பற்றிக் கொண்டு, ஆன்ம பக்குவம் அடைந்து, இறைவனின் திருவடிகளையே தஞ்சம் எனக் கொண்டு, கற்பனை வாழ்க்கையில் கவனம் செலுத்தாது, திருவருளுக்காக வேண்டி, எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்தி வாழ்தலே பிறப்பின் நோக்கமாகும். உலகில் பிறந்த ஒவ்வொருவரையும் அளவில்லாத கர்மங்கள் ஒன்று கூடித்திரண்டு, இடையீடின்றி, வாட்டி வருத்தும் என்பது உண்மை. அவரவரைச் சார்ந்த கர்மங்கள் எவ்வளவாக இழிவுபடுத்த வேண்டுமோ, அவ்வளவாக இழிவுபடுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆயினும், இறைவன் திருவருளாலும், குரு அருளாலும், எல்லாத் துன்பங்களையும் அனுபவித்துத் தொலைப்பதன் மூலமாகவே மாயையின் பிடிப்பு நீங்கும். எத்தனையோ பிறவிகளுக்கு வித்தாய் உள்ள கர்மங்களை ஒரே பிறவியில் முழுதும் அனுபவித்து முடிப்பது என்பது முடியாத காரியமாகும். ஆகவே, திருவருள் விதிப்படி அந்த வினைகளையெல்லாம் அனுபவிக்க அவற்றின் ஆற்றல் குறைந்து நம்மை விட்டு நீங்கி விடும். மெய்யடியார்களும் இதுபோன்ற துன்பங்களை அனுபவித்தவர்களே. என்றாலும், அவை அனைத்தையும் திருவருட்செயல் என உணர்ந்து, எம் கடன் பணி செய்து கிடப்பதே என்பதே தலையாய அறம் என்று துணிந்து, எல்லாவற்றையும் சகித்துக் கொள்பவர்களே மெய்யடியார் ஆவர்.

இறைவன் வினை என்னும் மாயையை அகற்றி அருள் செய்கின்றான். அன்பரை அடிமை கொள்கின்றான். அவர்களுடைய வினையை அருளால் அனுபவிக்கச் செய்தும், அனுபவிக்காமல் நீக்கத்தக்கவற்றை நீக்கியும் அருள் புரிகின்றான். வினையை வினையாலேயே தீர்க்க வைக்கின்றான். அன்பர்களது வினையை எவ்வண்ணம் நடத்தி அகற்ற வேண்டுமோ அவ்வண்ணம் நடத்தி, அகற்றி ஆட்கொள்வதே கடவுளின் அருளாகும். இதை உணர்ந்தவர்கள் அடியார்கள். இவ்வாறு கடவுள் செய்வதால் தாங்களும் இறைவனுடைய அன்புக்குப் பாத்திரமாகின்றோமே என்று நினைந்து மகிழ்பவர்கள் அடியார்கள்.

"வெருளாவண்ணம் மெய்யன்பை

யுடையாய் பெற நான்வேண்டுமே" (திருவாசகம் - பிரார்த்தனைப் பத்து)

வினைப் போராட்டங்களால் துன்பம் அடைந்த மெய்யடியார்கள் எல்லாம் தங்களைப்பாவிகள் என்று இழித்துக் கூறி, நைந்து நைந்து, இரங்கி இருக்கின்றார்கள். (திருவாசகம் - உயிருண்ணி 10) . ஒருவன் தன்னைப் பாவி என்றும், அருளுக்குத் தகுதியற்றவன் என்றும் உணர்வதற்கே பல பிறவிகளில் புண்ணியம் செய்தருக்க வேண்டும். மாயை நிலையில் சீவர்கள் தங்களை பாவிகள் என்று உணர்வது முடியாத காரியம். தங்களுடைய பிறவிகள் வினைவழி வந்தவை என்று அறியாதவர்கள். எடுத்த பிறப்பில் அனுபவிக்கும் கர்மங்களைக் கொண்டே அடுத்த பிறவிக்குரிய வினைகளுக்கு வித்திடுகின்றார்கள் என்று தெரிந்து கொள்வதில்லை.

இதனுடைய இலக்கணம் நமது ஆன்மிக நூல்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. திருமந்திரம், திருவாசகம், தேவாரம், திவ்வியப் பிரபந்தம் போன்ற அருள் நூல்கள் இந்த இலக்கணத்தை வலியுறுத்துகின்றன. ஆனால் அவற்றைக்கற்றதனால் மட்டும் பயனை அடைந்துவிட முடியாது. அவை எடுத்து வைக்கும் நியாயங்களை நன்கு உணர்ந்து, அவை காட்டும் வழியிலேயே சென்று, அவை எடுத்து வைக்கும் நெறிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.

இவ்வாறு சாதக யோகங்களை வழுவறத்தாங்கி, ஓழுகி, மாயையை அடிமைப்படத்தித் தங்களை மலமற்ற நிலைக்கு மெய்யடியார்கள் உயர்த்திக் கொள்வார்கள்.

சிலர் தாங்கள் படித்ததை வைத்துத் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற கற்பனையுடன் நடந்து கொள்வார்கள். ஆனால், அவர்களுடைய நடத்தை வெறும் கற்பனைதான். வார்த்தைகள் சரளமாக வெளிவரும். ஆனால், அவற்றில் ஆழம் இருக்காது. உணர்ச்சி இருக்காது. அமைதி இருக்காது. அலை ஒய்ந்த, ஆழ்ந்த கடல் போன்ற தெளிந்த சிந்தனையுடையவர்களே பரம்பொருளின் வியாபகத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

"திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்

புரையற் றிருந்தான் புரிசடை யோனே". (திருமந்திரம் - 2955)

தத்துவம் படித்து, பேசி, புகழ்ச்சி வலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளல் ஒருவனை ஆன்மிகப் பாதையில் நடத்திச் செல்லாது. விவரங்கள் தெரிந்திருந்தால் மட்டும் போதாது. விவரங்களைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும். தனதாக்கிக் கொள்வது என்றால் தத்துவப் பரம்பொருளை அனுபவித்துத் தான் என்கின்ற உணர்வை மறுத்தலே ஆகும். மெய்யடியார்கள் அத்தகைய நிலையிலே நிற்பவர்கள்.

இயமம், நியமம் போன்ற ஒழுக்கங்கள் அவர்களுக்கு இயல்பாகவே வரும். அவர்கள் அதற்காகத் தீவிர முயற்சி செய்யத் தேவையில்லை. பாடுபட வேண்டியதும் இல்லை. அவர்கள் வாழ்க்கையே இந்த ஒழுக்கங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதன் காரணத்தால், அவர்களுடைய வாழ்க்கையே இந்த ஒழுக்கங்களின் இலக்கணமுமாகும்.

பயிற்சி வழியில் இந்த ஒழுக்கங்களை அடைய முற்படும்பொழுது, ஒவ்வொரு படியாக ஏற வேண்டியுள்ளது. ஆனால், மெய்யடியார்கள் நூல்களில் கூறப்பட்ட எல்லா நெறிகளுக்கும் சொந்தக்காரர்கள். அவர்கள் சாதனைகளைச் சிறிது சிறிதாக அடைவதில்லை. அவர்கள் சாதனை வடிவம். அவர்கள் உடல் உயிரை வாட்டி, வருத்தித் தவம் செய்துதான் உண்மை நெறிகளைக் கண்டுகொள்ள முடியும் என்பதில்லை. அவ்வாறு உடலை வாட்டாமலேயே அந்த நெறிகளை அனுபவித்தவர்கள் மெய்யடியார்கள்.

அறிவதும் எளிது! உணர்வதும் எளிது! உணர்ந்ததை மற்றவர்களுக்கு

எடுத்துரைப்பதும் மிக எளிது ஆனால், உணர்ந்தவாறே ஒழுகுவது என்பது மிகவும் அரிது. மெய்யடியார் பெருமை சொல்லுவதற்கு அரியது. அளவிடுவதற்கும் அரியது.

"தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே

அடியர்தம் பெருமை அளக்கவும் பெரிதே."

மெய்யடியார்கள் இறைவனின் திருவடியைக் கண்டவர்கள். திருவடியைப் பற்றினவர்கள் பலகோடி பிறவிகளில் செய்த நற்றவத்தின் பயனால், இறைவனுடைய திருவடிகளைத் தரிசனம் செய்து, பல்வேறு யோகங்களை இயல்பாகவே கடைப்பிடித்து உடலாலும், உள்ளத்தாலும் ஒழுக வேண்டிய நெறிகளைப் பின்பற்றி, தம்முள்ளும் புறத்தேயும் இறைவனுடைய ஆற்றலைக் கண்டு அனுபவித்தவர்கள் மெய்யடியார்கள் ஆவர். இறைவன் அருள்வழி நின்று பணி செய்து கிடப்பவர் தொண்டராவர். இறைவனுடைய அருள் சேர்க்கையால் மலம் நீங்கி, உள்ளம் முழுவதும் அருள் அமுதம் நிரம்ப நிற்பர்.

"அருளடு பரா அமுதாக்கினன்"

என்பார் மாணிக்கவாசகர்.

"மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்தி

டாவகை நல்கினான்

வேய தோளுமைபங்க னெங்கள் திருப்பெருந்துறை மேவினான்

காயத் துள்ளமு தூற வூறநீ கண்டுகொள்ளென்று காட்டிய

சேய மாமலர்ச் சேவ டிக்கணஞ்ச சென்னி மன்னித் திகழுமே"

(திருவாசகம் - சென்னிப்பத்து)

"காயத்துண் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே

மாயக்கள் உண்டாரென் றுந்தீபற

வறட்டுப் பசுக்களென் றுந்தீபற" (திருவுந்தியார்)

மெய்யடியார் சிவானந்தத்தில் சிவத்துக்கு அடிமையானவர். சிவபிரானிடத்தில் அடங்கி நின்றவரே அடியார் ஆவர். சிவபெருமானின் திருவடி சேர்ந்த பேரின்பத்தில் திளைத்திருப்பவரே சிவனடியார். தம்முள்ளும் வெளியிலும் சதா நடைபெறும் இறைவனின் திரு நடனத்தைக் கண்டு, களிப்பில் ஆழ்ந்தவர் அடியார் ஆவர்.

"அடியார் அரனடி யானந்தங் கண்டோர்

அடியா ரானவ ரத்தரு ளுற்றோர்

அடியார் பவரே யடியவ ராமால்

அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே". (திருமந்திரம் - 2740)

மெய்யடியார்கள் இவ்வுலகைச் சார்ந்தும், சாராமலும் நிற்பர். பிரபஞ்ச இயக்கத்தில் ஈடுபட்டாலும், அறியாமை வழிபட்டு மயங்காமல், அறிவு வழியில் இறையமுதை அனுபவித்தவர்களாகச் செல்வர். மயங்கா வழி செல்லும் மெய்யடியார்கள் நித்தியத்துவம் பெறுவர். மாயை வலைப்பட்டு மயங்கி, இரந்து, பிறப்புக்கு வித்திடமாட்டார்கள். அவர்களை "வானுலகு ஆள்வர்" என்பார் திருமூலர் நாயனார். எந்த வகை சலனம் நேர்ந்தாலும், இறைவன் திருவடிகளில் வேரூன்றியவர்களாகச் சலனமற்று நிற்பர் மெய்யடியார்கள்.

"இயங்கும் உலகினில் ஈசன் அடியார்

மயங்கா வழிச்செல்வர் வானுல காள்வர்

புயங்களு மெண்டிசை போதுபா தாள

மயங்கா பகிரண்ட மாமுடி தானே". (திருமந்திரம் - 1873)

சிவபெருமான் அடியவர் உடலில் குடிபுகுந்து, அவர் சிந்தனையுள்ளே தேனூறி நின்று, அவருடைய உடலை அமலமாக்கி, பிறவியை ஒழிப்பன்.

"கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேனூ P நின்று

பிறந்த பிறப்புறுக்கு மெங்கள் பெருமான்" (திருவாசகம் - சிவபுராணம்)

"தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச்

சங்கரா ஆர்கொலா சதுரர்

அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்

யாதுநீ பெற்றது ஒன்றுஎன்பால்

சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான்

திருப்பெருந் துறை உறை சிவனே

எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்

யான் இதற்கு இலன்ஒர் கைம்மாறே".

(திருவாசகம் - கோயிற்றிருப்பதிகம்)

இறைவன் திருவருளால் அடியவர்களடைய உடல் இறப்பு, பிறப்பு என்னும் வட்டத்தைவிட்டு நீங்கி அருள் சுரக்கும் மலமற்ற சூக்கும தேகமாய் மாறி, பொன்மயமான வடிவம் பெற்று "ஈனமில் காயமாக" எங்கும் நீக்கமற நிறைந்த அருளாகிய சக்தியின் வடிவமாகும். சீவர் வீடு சிவ வீடாகும். மலமற்ற ஊன் அருள் வடிவாக, அதனைப் பிரியாதிருக்கும் உயிர் தானும் மலம் நீங்கி, சிவமாகும் தன்மையைப் பெறுதலை மெய்யடியார்களிடம் காண்கின்றோம்.