இடையாறு ( T. எடையார்)

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

இடையாறு ( T. எடையார்)

மக்கள் வழக்கில் 'ஜி.எடையார்' என்று வழங்குகிறது.

திருக்கோயிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியா அரசூர் செல்லும் பாதையில் சித்தலிங்க மடத்தையடுத்து இடையாறு உள்ளது. கோயில் சாலையோரத்தில் உள்ளது. சுகர்முனிவர் வழிபட்ட தலம்.

இறைவன் - மருதீஸ்வரர், இடையாற்றீசர்

இறைவி - ஞானாம்பிகை, சிற்றிடைநாயகி

சுந்தரர் பாடியது.

கோயில் பழமையானது. மேற்கு நோக்கிய சந்நிதி. சுற்றுச் சுவர் முன்பக்கம் தவிர மற்றப் பக்கங்களில் நன்குள்ளது. மூன்று நிலைகளுடன் கோபுரம் உள்ளது. கொடிமரமில்லை. பலிபீடம் உள்ளது நந்தியுமில்லை. உள்ளே இடப்பால் மண்டபம் உள்ளது. இதில் வள்ளி தெய்வயானை சமேத சண்முகர் சந்நிதி உள்ளது. எஞ்சிய இடம் வாகன மண்டபமாகப் பயன்படுகிறது.

உள்சுற்றில் பெரிய மருதமரம் உள்ளது. நவக்கிரக சந்நிதி, அகத்தீஸ்வர லிங்கம், சண்டேஸ்வரர், சப்தமாதாக்கள், பாலாம்ருத விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும் துர்க்கையும் உள்ளனர். அம்பாள் சந்நிதி உள்ளது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் பொன் விழாத் திருப்பணித் திட்டத்தில் இக்கோயிலின் விமானங்கள் திருப்பணி செய்யப்பட்டுள்ளன.

பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ஆற்றுத் திருவிழா சிறப்பாகச் சொல்லப்படுகிறது. நாடொறும் கால பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோயிலிலிருந்து சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. கல்வெட்டில் இவ்விறைவன் 'மருதந்துறை உடைய நாயனார்' என்று குறிக்கப்படுகின்றார். இக்கோயில் A.H. 1471 - ல் ஒரிசா மன்னன் ஒருவனால் அழிக்கப்பட்டு, பின்பு 10 ஆண்டுகள் கழித்து சாளுவ நரசிம்மனின் பிரதிநிதியால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டின்மூலம் தெரிகிறது. இங்குள்ள முருகனின் (சண்முகர்) பெயரினை 'கலியுகராமப் பிள்ளையார்' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.

"ஊறிவாயன நாடிய வன்றொண்டனூரன்

தேறுவார் சிந்தை தேறுமிடஞ் செங்கண் வெள்ளே

றேறு வாரெய்த மானிடையா றிடைமருதைக்

கூறுவார் வினையெவ்விட மெய்குளிர்வாரே."

(சுந்தரர்)

-"தாவாக்

கடையாற்றின் அன்பர்தமைக் கல்லாற்றினீக்கும்

இடையாற்றின் வாழ் நல்இயல்பே."

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அ.மி.மருதீஸ்வரர் தேவஸ்தானம்

T. எடையார் - அஞ்சல் திருக்கோயிலூர் வட்டம்

(வழி) பெரிய செவலை - 607 209. விழுப்புரம் மாவட்டம்

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்)
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவெண்ணெய் நல்லூர்
Next