திருநாவுக்கரசர் அருளிய தேவராகத் திருப்பதிகங்கள்
நான்காம் திருமுறை
1, திரு அதிகைவீராட்டானம், கொல்லி
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-
கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்;- அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே! 1
நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன்;
நினையாது ஒருபோதும் இருந்து அறியேன்;
வஞ்சம்இது ஒப்பது கண்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட,
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்;
"எஞ்சேலும் !" என்னீர் - அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே! 2
பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்!
படுவெண்தலையில் பலி கொண்டு உழல்வீர்!
துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்
சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்-
பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர்!
பெற்றம் ஏற்று உகந்தீர்! சுற்றும் வெண்தலை கொண்டு,
அணிந்தீர்! அடிகேள்! அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே! 3
முன்னம், அடியேன் அறியாமையினான்
முனிந்து, என்னை நலிந்து முடக்கியிட,
பின்னை, அடியேன் உமக்கு ஆளும்பட்டேன்
சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்;
தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ
தலை ஆயவர்தம் கடன் ஆவதுதான்?-
அன்னம் நடையார் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே! 4
காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால்,
கரை நின்றவர், "கண்டுகொள்!" என்று சொல்லி,
நீத்து ஆய கயம் புக நூக்கியிட,
நிலைக் கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன்;
வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன்;
வயிற்றோடு துடக்கி முடக்கியிட
ஆர்த்தார் - புனல் ஆர் அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே! 5
சலம் பூவொடு, தூபம், மறந்து அறியேன்;
தமிழோடு இசைபாடல் மறந்து அறியேன்;
நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன்;
உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன்;
உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய்!
உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய்!
அலந்தேன், அடியேன்; - அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே! 6
உயர்ந்தேன், மனைவாழ்க்கையும் ஒண் பொருளும்
ஒருவர் தலை காவல் இலாமையினால்;
வயந்தே உமக்கு ஆட்செய்து வாழல் உற்றால்,
வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்
பயந்தே என் வயிற்றின் அகம்படியே
பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட, நான்
அயர்ந்தேன், அடியேன்;- அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே! 7
வலித்தேன் மனைவாழ்க்கை, மகிழ்ந்து அடியேன்
வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்;
சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை;
சங்கவெண்குழைக் காது உடை எம்பெருமான்!
கலித்தே என் வயிற்றின் அகம்படியே
கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன,
அலுத்தேன், அடியேன்:- அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே! 8
பொன் போல மிளிர்வது ஓர் மேனியினீர்!
புரிபுன்சடையீர்! மெலியும் பிறையீர்!
துன்பே, கவலை, HE, என்று இவற்றை
நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்!
என்போலிகள் உம்மை இனித் தெளியார்;
அடியார் படுவது இதுவே ஆகில்;
அன்பே அமையும் - அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே! 9
போர்த்தாய், அங்கு ஓர் ஆனையின் ஈர் உரி தோல்!
புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய்!
ஆர்த்தான் அரக்கன்தனை மால்வரைக்கீழ்
அடர்த்திட்டு, அருள்செய்த அது கருதாய்
வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்,
என் வேதனை ஆன விலக்கியிடாய் -
ஆர்த்து ஆர் புனல் சூழ் - அதிகைக் கெடில
வீரட்டானத்து உறை அம்மானே! 10