இறைவனின் அருளைப்பெறச் சுலபமான வழி பக்தி மார்க்கம். பக்தியின் உன்னத நிலை சரணாகதி. உடல் பொருள் ஆவி இவை மூன்றையும் ஈசுவரனுக்கே அர்ப்பித்துவிடுவதுதான் சரணாகதியின் தன்மையாகும். இதனையே மாணிக்கவாசகப் பெருமான்,
அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமையும் எல்லாம்
குன்றே யனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்கு முண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே
என்று சிவபெருமான் தன்னை ஆட்கொண்டு அருளிய விதத்தைக் கூறுகிறார். குலசேகர ஆழ்வாரும்,
தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப் பொழில்சூழ் வித்துவக் கோட்டம்மானே
அரிசினத்தா லீன்ற தாயகற்றிடினும் மற்றவள்தன்
அருள் நினைந்தே யழுங்குழவி யதுவே போன்றிருந்தேனே
என்று, சினத்தால் ஒரு தாய் தன் குழந்தையை விட்டுவிட்டாலும், அந்தக் குழந்தை தாயின் அன்புக்காக ஏங்கி அழுவது போன்று தன்னைத் துயரம் வந்துற்றபோதும், தான் அந்தப் பெருமாளின் அருளையே வேண்டி இருப்பதாகக் கூறுகிறார்.
மனம், வாக்கு, காயம் இவை மூன்றாலும் இறைவனுக்குத் தொண்டு செய்வதே சரணாகதியாகும். கண்ணாடி போன்றது மனம். அந்தக் கண்ணாடியின் வழியே நாம் வெளியுலகைக் காண்கிறோம். அதே கண்ணாடியின் ஒரு புறத்தில் பாதரசத்தைப் பூசி விடுவோமானால் நம்முடைய உருவத்தையே காண்கிறோம். நமது மனமாகிய கண்ணாடியில் இறைவனுடைய பாதரசத்தை-பக்தியைப் பூசிவிட்டால் வெளியுலகம் மறைந்து விடுகிறது. நாம் ஆத்மஸ்வரூபத்தை அறிகிறோம்.
வாக்கினால் பரம்பொருளின் பெரும் புகழைப் பாடிப் பணிய வேண்டும்.
' நாராயணேதி நாமாஸ்தி வாகஸ்தி வஸவர்த்தினீ ' என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது. ''நாராயண என்ற நாமா இருக்கிறது;நாக்கும் நம் வசத்தில் இருக்கிறது. ஆகவே இப்பொழுதே பகவானுடைய நாமாவை உச்சரிக்க வேண்டும்.''
நாம் செய்யும் கர்மாக்கள் அனைத்தையும் பகவத் தியானத்துடன் ஆரம்பிக்க வேண்டும். அங்ஙனம் ஆரம்பித்தச் செய்த கர்மாக்களை ஈசுவரனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும். தினமும் நாம் இறைவனுக்கு அன்னம் நிவேதனம் செய்கிறோம். அவ்வாறு நிவேதனம் செய்த அன்னத்தை ஈசுவரப் பிரசாதமாக ஏற்றுக்கொள்கிறோம். அவ்வாறே ஈசுவரார்ப்பணமாகச் செய்த கர்மாக்களின் பலனைப் பகவத் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே கர்மாக்களைச் செய்து முடிப்பதில்தான் நமக்கு அதிகாரம் இருக்கிறது; பலனை நிர்ணயிப்பதில் அல்ல. நம்முடைய கர்மாக்களின் பலனை நிர்ணயிப்பவன் இறைவனே.
இதைத்தான் கண்ணபிரான் பகவத்கீதையில், 'கர்மண்யேவ அதிகாரஸ் தே, மா பலேஷ§ கதாசந'என்று கூறுகிறார்.
இங்ஙனம் உடல் பொருள் ஆவி ஆகியவற்றை இறைவனுக்கு அர்ப்பித்து, மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினையும் ஈசனிடம் ஈடுபடுத்தியவர்களின் தோற்றத்தைத் திருமூலர் பின்வரும் பாட்டில் விளக்குகிறார்-
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காரை மணிவிளக்கே
தன்னைச் சரணடைந்தவர்களின் துயரை நீக்கும் கருணாமூர்த்தி பகவான். தன் பக்தர்கனுக்கு உண்டான துன்பத்தைத் தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதிப் பக்தர்களைக் காப்பாற்றுகிறார். இதனையே ஒரு பக்தர் சாதுர்யமாக ஒரு ஸ்லோகத்தில் கூறுகிறார்:-
அபூதபூர்வம் மம பாவி கிம்வா ஸர்வம் ஸஹஜம் U து:கம்மி
கிந்து த்வதக்ரே சரணாகதாநாம் பராபவோ நாத ந தேநுரூப:மிமி
''நான் முன்பு துக்கங்களை அநுபவித்துவிட்டேன்;இன்னும் வருகிற துக்கங்களையும் சகித்துக் கொள்கிறேன். துக்கம் ஏற்படுவது சகஜம்தான். ஆனாலும் தலைவனே உன்னைச் சரணடைந்தவர்களுக்கு அவமானம் ஏற்படுவது உனக்குப் பொருந்தாது.''
கீதையிலும் பகவன்,
ஸர்வதர்மாநு பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜமி
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:மிமி
''எல்லாத் தர்மங்களையும் அறவே விட்டு என்னையே சரணடைவாய். பாவங்கள் அனைத்தினின்றும் உன்னை நான் விடுவிப்பேன். வருந்தாதே''என்று அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார்.
ஆகவே நாமும், தனக்குவமை இல்லாத அந்த இறைவனின் தாள் சேர்ந்து மனக்கவலை நீக்கி வாழ்வோமாக.