வேதமே ஆதாரம்

வேதமே ஆதாரம்

நம்முடைய வைதிக சனாதன தர்மத்திற்கு ஆதாரங்கள் வேதங்கள்.

வேதங்களில் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதமென நான்கு பிரிவுகள் உள்ளன.

ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களுக்கு முறையே ரிக் வேதத்திற்கு 21

சாகைகள், யஜுர் வேதத்திற்கு 101 சாகைகள், ஸாம வேதத்திற்கு ஆயிரம்

சாகைகள், அதர்வண வேதத்திற்கு ஒன்பது சாகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு

கிளை வேத பாகத்திற்குத் ஸம்ஹிதா பாகம், ப்ராம்மண பாகம் என பிரிக்கப்படும்.

ப்ராம்மண பாகத்தில் உபநிஷத்தும் ஒரு பகுதியில் வருகிறது. உபநிஷத் என்ற

சொல்லுக்கு அர்த்தம் பரமாத்மாவினுடைய சமீபத்துக்கு அழைத்து செல்வது என்று

பொருள். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் வேத அத்யயனம் செய்ய

வேண்டும், அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும், அதன்படி

கர்மானுஷ்டானங்கள் செய்ய வேண்டும் என்பது நியதி.

கர்மாக்கள் நித்ய கர்மா, காம்ய கர்மா, நைமித்திக கர்மா என்று மூன்று

வகைப்படும். நித்ய கர்மா என்றால் நித்யம் செய்வது என்று பொருள் அல்ல,

தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள். சில க்ரமாக்கள் தினந்தோறும் செய்ய

வேண்டியதாக இருக்கும். சில க்ரமாக்கள் பட்சம், மாத, வருஷங்களில் செய்வதாக

இருக்கும். இதைச் செய்தே ஆகவேண்டும் என்பது விதி. நித்ய கர்மா

செய்வதனால் விசேஷ பலன் ஒன்றும் கிடையாது. பாபநிவர்த்தியும்,

மனத்தூய்மையும் கிடைக்கும். நைமித்திக கர்மாவை நிமித்தம் ஏற்படும்போது

செய்ய வேண்டும். நிமித்தம் யாருக்கு ஏற்படுகிறதோ, எப்போது ஏற்படுகிறதோ

அப்போது செய்வதற்கு நிமித்த கர்மா என்று பெயர். நிமித்த கர்மாவிற்கு பலன்

எதன் நிமித்தமாக செய்கிறோமோ அதனுடைய பலனை அடையவே. சூரிய

க்ருஹணம், சந்திர கிருஹணங்கள் வருகின்றன. அப்போது செய்யவேண்டிய

கர்மாக்கள் நிமித்த கர்மாக்கள் என்று சொல்லப்படுகின்றன. ஏனென்றால் சூரிய,

சந்திர கிரஹண நிமித்தத்தை வைத்துச் செய்வதால் அந்தப் பெயர். நிமித்த கர்மா

செய்வதன் மூலம் விசேஷ பாப பரிகாரம் உண்டு - பலனும் உண்டு.

மூன்றாவதாக காம்ய கர்மா. ஒரு பலனை உத்தேசித்து செய்வது காம்ய

கர்மா. மழை பொழிய வேண்டும், சத்ருபாதை தீரவேண்டும், உடல்

ஆரோக்கியமாக இருக்க வேண்டும், போன்ற உலகாயதனமான ஆசைகளை

வைத்துக் கொண்டு செய்யப்படும் கர்மாக்கள் எல்லாம் காம்ய என்று

சொல்லப்படுகிறது. காம்ய கர்மாவிற்கு பலன் நாம் விரும்பிய பலனை அடைவது.

இந்த மூன்று கர்மாக்களையும் செய்வது மனிதனுடைய கடமை. இந்த கர்மாக்களை

செய்வதன் மூலமாக வேதத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களை செய்தவர்களாக ஆகி

விடுவோம்.

இவைகளைப் பற்றி சொல்வது ஸம்ஹிதா பாகம், ப்ராம்மண பாகத்தில் சில

பாகம். இந்த கர்மாக்களை செய்து அதனால் வரக்கூடிய பலனை ஈச்வரனுக்கு

அர்ப்பணம் செய்துவிட்டால், அதனால் நம் வாழ்கையில் துக்கம் ஏற்படாது, சுகம்

கிடைக்கும். மனதுக்கு அமைதி கிடைக்கும். இந்த நிலையோடு நம் வாழ்க்கையில்

நாம் ஈச்வரனைப் பற்றியும், பரமாத்மாவைப் பற்றியும் அறிந்து கொள்வதற்குச்

சாதகமாக பல உபாசனைகளைப் பற்றியும், ஈச்வரனைப் பற்றியும், பரமாத்மாவைப்

பற்றியும் தெரிந்து கொள்வதற்காக, மகரிஷிகள் தவம் செய்த, பரிசீலனை செய்து

நூல்களை எழுதியுள்ளார்கள்.

கர்ம கண்டம் சம்பந்தமான விஷயங்களை அறிந்த கொண்டு,

அதற்கேற்றவாறு சூத்ரங்களை ஜைமினி மகரிஷி எழுதியுள்ளார். அந்த

சூத்ரங்களுக்கு சப்ரசுவாமி போன்றவர்கள் எல்லாம் பாஷ்யங்களையும்

எழுதியுள்ளார்கள். இந்த வேதங்களுக்கு எல்லாம் அர்த்தத்தை வித்யாரண்யர்

என்ற பெரிய சன்யாசி வேதத்துக்கு பாஷ்யங்களை எழுதியுள்ளார்கள்.

உபநிஷத்துக்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள வேதவ்யாசர் ப்ரும்ம சூத்ரம்

என்ற நூலை எழுதியுள்ளார். இதற்கு ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதியுள்ளார். இந்த

ப்ரம்ம சூத்ரத்திற்கு ராமானுஜர், மத்வர், வல்லபர், சைவ சம்பந்தமான ஸ்ரீ கண்டர்

போன்ற பலரும், ஆதிசங்கரரும் பாஷ்யங்கள் எழுதியுள்ளார்கள். ஆனால்

ஆதிசங்கரர் உபநிஷத் மந்திரங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு ப்ரம்ம

சூத்ரத்திற்கு பாஷ்யங்கள் எழுதியுள்ளார். இந்த வேத வாக்யத்திற்கு விரோதமாகச்

சிறிதளவு கூட அவருடைய பாஷ்யத்தில் காண முடியாது.

சங்கராச்சாரியார் தவிர இதர பாஷ்யங்கள் யாவையும் ஆதிசங்கரர் போல்

உபநிஷத் வாக்யங்களோடு பாஷ்யம் எழுதவில்லை. புராணங்களை

அடிப்படையாகவைத்துக்கொண்டு ப்ரும்மசூத்ரத்திற்கு பாஷ்யம் எழுதியுள்ளார்கள்.

இதே போல் தசோபநிஷத்துக்கும், பகவத் கீதைக்கும் ஆதிசங்கரர் பாஷ்யம்

எழுதியுள்ளார்கள். இதைத்தவிர இந்த மூன்று கிரந்தத்தின் சாரமாக விவேக

சூடாமணி போன்ற நூல்களையும் தன்னுடைய சொந்த அனுபவத்தின் மூலமாக

ஆதிசங்கரர் எழுதியுள்ளார்.

இதே போல் குழந்தைகள் படிக்க வசிதயாக விநாயகர் முதல் ஆஞ்சநேயர்

வரை பல ஸ்தோத்ரங்களையும் வேதாந்த கருத்துக்கு ஏற்றவாறு எழுதியுள்ளார்.

பெரியவர்களடைய சதாப்தி நடைபெறகிற சமயத்தில் இது போன்ற நல்ல நூல்களை

படித்து பிறவிப் பயனை அடைய ஆசீர்வதிக்கிறோம்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is உலகின் ஆரம்ப மதம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  காரடையான நோன்பு
Next