ஒற்றுமை ஒங்கட்டும்

ஒற்றுமை ஓங்கட்டும் !

உலகில் எத்தனை விதமான உயிரினங்கள் உள்ளனவோ அத்தனை விதமான வாழ்க்கை முறைகளும் உள்ளன. ஒவ்வொரு பிராணியும் ஒவ்வொரு விதமாக வளருகின்றது. சிங்கம், கரடி போன்ற பிராணிகளும் பல்லி, ஒணான் போன்ற உயிரினங்களும் மற்ற பிராணிகளை ஆகாரமாக உட்கொண்டு வளருகின்றன. கீரிப்பிள்ளை, பாம்பு போன்ற உயிரினங்கள் பரஸ்பரம் விரோதிகளாக வளர்ந்து வரும். ஒரு சர்க்கரைத் துகள் பூமியில் கிடைத்தாலும், அதை வரிசையாக எல்லா எறும்புகளும் சேர்ந்து வந்து பகிர்ந்து கொள்ளும். காக்கைக்குச் சிறிதுணவு அளித்தாலும், 'கா, கா' என்று கூவி எல்லாக் காக்கைகளையும் உண்ண அழைக்கும்.

மனித உறுப்புகள் பல பணிகள் செய்வதற்குப் பல வகையாக இருந்தாலும் உடல் வளர்ச்சிக்கு எல்லா உறுப்புகளும் சேர்ந்து ஒன்றாக ஒத்தழைத்தாக வேண்டும். ஒரு உறுப்பில் தவறு ஏற்பட்டாலும் உடம்பின் ஆரோக்கியம் குறையும். அடிப்படையில் மனிதர்கள் எல்லாரும் ஒரே மாதிரி படைக்கப் பெற்றிருந்த போதிலும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையாக வாழ்கிறான். ஒரு குடும்பத்தில் பிறந்த அண்ணன், தம்பிகளிடையில் வெவ்வேறு எண்ணங்கள், செயல்கள் இருக்கின்றன. ஒரு மனிதனுடைய உடலுக்கு ரத்தம் தேவைப்பட்டால் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளின் ரத்தம்கூட ஒத்துப் போவதில்லை. எங்கோ பிறந்தவர்களின் ரத்தத்தை உடல் ஏற்கிறது!ஒவ்வொரு மனிதனுடைய கையிலும் 5 விரல்கள் இருக்கின்றன. ஐந்தும் சமமாக இருப்பதில்லை. ஆனபோதிலும் ஐந்து விரல்களும் ஒன்றாகச் சேர்ந்தால்தான் உணவைக் கையில் எடுத்து உண்ண முடியும். ஒரு மனிதனுக்கு ஐந்து ஏக்கர் பூமி இருக்கலாம். ஆனால் பயிர் செய்வதற்கு ஏற்றவாறு வரப்புகளைக் கட்டி அநேக வயல்களாகத் தடுத்துக் கொள்ள அவசியம் நேர்கிறது. அப்படிச் செய்தால்தான் ஒவ்வொரு பகுதியாகத் தண்ணிர் தேக்கி நன்றாக உழுது, பயிரிட்டுப் பயனடைய முடியும். ஐந்து ஏக்கராவும் தனது என்ற எண்ணம் இருக்கவேண்டும். வரப்புக் கட்டிப்பல வயல்களாகப் பிரக்கவும் வேண்டும். அதுபோல உயிரினங்கள் அனைத்தும் இறைவனுடைய படைப்பில் ஒன்றே. என்ற எண்ணம் சதா இருக்க வேண்டும். ஆனால் உலக ரீதியல் பார்க்கும்போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும். வேற்றுமையில் ஒற்றுமையே இந்து சமயத்தின் சிகரம். ஒரு குடும்பத்தில் நான்கைந்து பிள்ளைகள் இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பணி செய்து வருவார்கள். அவர்கள் செய்யும் பணிகளெல்லாம் குடும்ப நலனுக்கே. வித்தியாசமான பணிகள் செய்தாலும் வெவ்வேறு இடத்தில் வசித்து உழைத்தாலும் அவர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. தாய் தந்தையரின் மக்களே. இதேபோல் ஒவ்வொரு மாநிலத்தில் வெவ்வேறு மொழிகள் பேசுவார்கள். வெவ்வேறு விதமாக உடைகள்கூட அணிந்து கொள்வார்கள். ஆனால் எல்லா மக்களும். இந்திய மக்களே.

வட கோடி அயோத்தியிலிருந்து ஸ்ரீராமபிரான் இலங்கை சென்று திரும்பி தென்கோடி இராமேஸ்வரத்தில் சிவபிரானைப் பிரதிஷ்டை செய்தார்.

வடகோடியிலே உள்ள காசி க்ஷேத்ரத்தில் விஸ்வ ஈஸ்வரராக விளங்கும் பரமசிவன் எந்த இராமச்சந்திரமூர்த்தி இராமேஸ்வரத்தில் தன்னைப் பிரதிஷ்டை செய்தாரோ அந்த இராமபிரானுடைய மந்திரத்தை தாரக மந்திரமாக உபதேசம் செய்கிறார். கேரளத்தில் காலடியில் தோன்றிய ஆதிசங்கரர் பாரத நாடு முழுவதும் யாத்திரை செய்து பத்திரி நாராயணத்தில் நம்பூதிரி பரம்பரையை பூஜை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார். ஆன்மீகத்தின் அடிப்படையில் வடக்கு தெற்கு என்ற பேதமே கிடையாது. பல வேற்றுமைகளிலும் ஓர் ஒற்றுமையைக் காண்பதுதான் பாரதீய கலாச்சாரம், வேற்றுமைகள் இயற்கை. அதிலே ஒற்றுமை காண்பதுதான் வாழ்க்கையின் உன்னதமான நிலை. நாட்டிலே பிரிவினைவதாதம் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் ஆன்மீகத்தின் மூலமாக, பாரதீய கலாசாரத்தின் மூலமாக, பாரதம் ஓரு நாடு என்ற உணர்வைப் பெற்று ஒற்றுமை காண்போம்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is தீயகுணங்களை நீக்குவோம் தீபஒளி ஏற்றுவோம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  கண்ணனை உள்ளத்தில் குடியேற்றுவோம்
Next