எளிதாகத் தோன்றினாலும் கடினமானது : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஆனால்- பெரிய ‘ஆனால்’- மனஸைக் கழட்டி விட்டால்தானே அந்த அத்வைத ஸித்தி? அப்படிக் கழட்டுவதுதானே மஹா கஷ்டமாயிருக்கும்! கழட்டி விட்டால் உடனே பரம ‘ஈஸி’யாக ப்ரஹ்மானந்த மோக்ஷம் என்பது வாஸ்தவம். ஆனால் கழற்றுவது? தொள தொளவென்று சட்டை போட்டுக் கொண்டிருந்தால் சுலபமாக கழற்றிப் போட்டுவிடலாம். இறுக்கமாக இருந்தால் சிரமம்தான். அதைவிட, ‘மேல் தோலையே கழட்டிப் போடு’ என்றால் எத்தனை கஷ்டம்? அந்த மாதிரி நம் உடம்போடேயே ஒட்டிக் கொண்டு தோல் இருக்கிறது போலத்தான் உள்ளே மனஸ் கெட்டியாக ஒட்டிக் கொண்டிருக்கிறது. துணியில் அழுக்கு அப்படியே சிக்கு பிடித்திருக்கிற மாதிரி! சிக்கு போய்விட்டால் துணி சுத்தமாகிவிடும். புதுசாக சுத்தத் துணியை ஸ்ருஷ்டி பண்ணவில்லை. ஏற்கேனவே இருக்கிற துணியைத்தான் சிக்குப் போக்கிச் சுத்தம் பண்ணுவது. அந்த மாதிரி ஜீவனுக்குப் புதுசாக ப்ரஹ்மம் என்ற ரூபத்தை ஸ்ருஷ்டி பண்ணவில்லை; தற்போது பிடித்திருக்கிற சிக்கான மனஸைத் தேய்த்துச் சிக்கைப் போக்கிவிட்டால் போதும்; அவனே தன்னுடைய நிஜ ஸ்வரூபமான ப்ரஹ்மமாக நிற்பான். ஆனால் அந்த சிக்கு நன்றாக, கெட்டியாகப்பிடித்துக் கொண்டிருப்பதைப் போகப் பண்ணுவதுதான் அஸாத்யமாக இருக்கிறது!

மனஸ் லேசில் அழிய மாட்டேனென்கிறது. மனஸ் என்பது என்ன? எண்ணங்களை உற்பத்தி பண்ணும் கருவி. எண்ணம் நின்று போனால் மனஸும் இல்லாமல் போய்விடும். ஆனால் எண்ணத்தைத்தான் நிறுத்தவே முடியவில்லை. அது ஸதா ஸர்வதா நாலு கால் பாய்ச்சலில் எங்கேயாவது பிய்த்துக்கொண்டு ஓடுவதாகவே இருக்கிறது. எத்தனையோ அநுபவங்கள், அநுபோகங்கள் நாம் கண்டிருக்கிறோம். கண்டு கொண்டேயிருக்கிறோம்; [நமக்குத்] தெரிந்து இந்த ஜன்மாவில்; தெரியாமல் எத்தனையோ பூர்வ ஜன்மாக்களில்! அதுகள் ஒவ்வொன்றின் சுவடும் எண்ணத்தின் வேராக மனஸுக்குள் நன்றாக ஓடி, ஓயாமல் ஒழியாமல் ஏதாவது சிந்தனையை முளைக்கப் பண்ணிக் கொண்டேயிருக்கிறது. பெருங்காயம் செலவானவிட்டும் அது இருந்த பாத்திரத்தில் நெடி விடாமலிருக்கிறதோல்லியோ? அந்த மாதிரி நாம் அநுபோகங்களை அநுபவித்துத் தீர்த்தபின்னும் அதன் நெடி விடாமல் இருக்கிறது. அதைத்தான் வாஸனை, ஜன்மாந்த்ர வாஸனை, ஸம்ஸ்கார வாஸனை என்றெல்லாம் சொல்வது. அது என்ன பண்ணுமென்றால் அந்த அநுபோகத்தைப் பற்றிய எண்ணத்தை மனஸில் கிளப்பிக் கொண்டேயிருக்கும். அதை மறுபடி அடைந்து அநுபவிக்க என்ன வழி என்ற மனஸை ‘ப்ளான்’ போட வைத்துக் கொண்டேயிருக்கும். இந்த நெடி அடங்கினால்தான் – ‘வாஸனாக்ஷயம்’ என்பது இதுதான் – மனஸ் நின்றுபோகும்.

நின்றுபோகும் என்றால் முடிந்து போகும் என்ற அர்த்தம். ஓடுகிற ஒன்று நிற்குமானால் அதுதானே ஓட்டத்திற்கு முடிவு? ஜல ப்ரவாஹம் ஓடிக் கொண்டே இருக்கும் ஒன்று. அணை போட்டு ஜலத்தை நிறுத்துகிறோமென்றால் – நின்று போகும்படிச் செய்கிறோம் என்றால் – அப்போது ஓட்டம் முடிந்து விடுகிறதோல்லியோ? அப்படித்தான் ஸதா ஓடிக்கொண்டேயிருக்கும் மனஸ் நின்றது என்றால் அது முடிந்து போய்விட்டதென்று அர்த்தம்.

ஒரே விஷயத்தில் மனஸ் நிற்பது வேறு; இப்போது நான் சொல்கிற ‘நிற்பது’ வேறு. ஒரே விஷயத்தில் மனஸ் நிற்கும் போது மனஸில் பூராவாக அந்த விஷயமே வ்யாபித்துக் கொண்டிருக்கும். வேறே எந்த விஷயமும் அப்போது மனஸில் முளைக்காது. அப்படி மனஸை ஒன்றிலையே நிறுத்துவதும் மஹா கஷ்டந்தான். மனஸை இல்லாமல் பண்ணி முடித்து விடுகிற நிறுத்தலுக்கு முந்தின படி இப்படி அதை ஒன்றிலேயே நிறுத்துவதுதான். ஒரு க்ரூரமான மிருகம் நாலா திசையிலும் பாய்ச்சுக்காட்டி ஓடிக்கொண்டே இருக்கிறவரையில் அதை எப்படி குறிவைத்து ‘ஷூட்’ பண்ணமுடியும்? அது ஒரு இடத்தில் நிற்கும்படிப் பண்ணினால் அப்போது ‘ஷூட்’ பண்ணிவிடலாமல்லவா? அப்படி, நானா தினுசு சிந்தனைகளில் ஓடிக் கொண்டிருக்கும் மனஸை ஒரே விஷயத்தில் நிறுத்தினால்தான் ‘ஷூட்’ பண்ணமுடியும். இப்படி ஒரே விஷயத்தில் நிற்கிறபோது மனஸ் என்பதே இல்லாமல் போய் விடவில்லை. அது இருக்கிறது. ஆனால் பல எண்ணங்களில் வாய் வைப்பதாக இல்லாமல் ஒரே எண்ணத்தில் தன்மயமாகியிருக்கும். நான் சொல்கிற மனஸின் அழிவாகிய நின்று போதலுக்கு இது பூர்வாங்கம். இதற்கு அப்புறம் மனஸே இல்லாமல் போய்விடவேண்டும். அப்போதுதான் ஆத்ம ஸாக்ஷாத்காரம் உண்டாகும். அதாவது, ஜீவபாவம் போய், தான் ப்ரஹ்மமே என்பது தெரியும்.

ஆனால் இப்படி ஒன்றிலேயே மனஸை நிறுத்துவது, அப்புறம் ஒன்று என்ற எண்ண வேரையும் பிடுங்கிப் போட்டுவிட்டு, மனஸையே ஸமூலம் [வேரோடு] அழிப்பது என்றால் – என்ன ப்ரம்ம ப்ரயத்னம் பண்ணினாலும் முடியுமா என்றிருக்கிறது. காரணம், “அநாத்யவித்யா வாஸநயா ப்ரவர்த்தமானே” என்று சொன்னபடி, எப்போது ஆரம்பித்தது என்றே சொல்ல முடியாத காலத்திலிருந்து ஜன்ம ஜன்மாவாக மனஸுத் துணியின் மேலே ஏறிவிட்ட அஞ்ஞான வாஸனைச் சிக்கு அத்தனை தடிப்பாக ஆகியிருப்பதுதான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அத்தனைக்கும் வித்தியாஸமான அத்வைதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஈச்வராநுக்ரஹத்தினால் மோக்ஷம்
Next