தவறான தனித்தமிழ் நாகரிகப் பிரிவினை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இந்தக் காலத்தில் தமிழ்ப் பண்பாடு வேறே, வைதிக நாகரிகம் வேறே என்று தப்பாக அபிப்பிராயப் பட்டுக்கொண்டு முடிந்த மட்டில் தமிழ் தேசத்தில், முன்காலத்தில் உசந்ததாக எந்த விஷயம் இருந்தாலும், அல்லது எந்த மநுஷ்யர்கள் இருந்தாலும், அந்த விஷயம் அல்லது மநுஷ்யர் வைதிக நாகரிகத்தில் வராமல், தமிழினம் என்று ஏதோ ஒன்றை இவர்கள் பிரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அதில் வந்ததாகவே ஜோடனை பண்ணிக் காட்டுவதாக ஏற்பட்டிருக்கிறது! நல்ல அறிவும் ஆராய்ச்சித் திறமையும் உள்ளவர்கள், நாவல் எழுதுகிறவர்கள் எல்லோருமே இப்படித்தான் தமிழ் நாகரிகமென்று ஏதோ ஒன்று தனியாக இந்த திராவிட தேசத்தில் வைதிகத்துக்கு வித்யாஸமாக, அதை அமுக்கிக் கொண்டு, பிரகாசமாக இருந்ததாக ஜோடித்து எழுதுகிறார்கள். ஆனால் அந்த அந்தக் காலத்துக் கல்வெட்டுகளைப் பார்த்தாலும் சரி, கவிகளும் புலவர்களும் பாடி வைத்துவிட்டுப் போயிருக்கும் தமிழ் நூல்களைப் பார்த்தாலும் சரி. இந்தப் புது அபிப்ராயத்துக்கு ஒரு ஆதாரமும் இல்லை. இதிலே ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருக்கிறது. இன்னொரு பக்கம் கஷ்டமாகவும் இருக்கிறது. [வேடிக்கைக் கஷ்டம்] என்னவென்றால், வைதிகம் வேறே, த்ராவிடம் வேறே என்ற தப்பான அபிப்ராயம் பொது ஜனங்கள் மனஸில் அசைக்க முடியாமல் வேரோடி விட்டதாக நினைத்துக்கொண்டு, அவர்களுடைய ஆதரவைத் தாங்கள் ஸம்பாதிக்க வேண்டுமென்று பிராம்மணர்களிலேயே அறிவாளிகளாக இருக்கப்பட்ட சிலபேர் இந்த பேதத்துக்கு பலம் கொடுத்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்! தமிழ் தேசத்தில் பூர்வத்தில் ஆட்சி செலுத்தி வந்த மூவேந்தர்களும் ஸரி, பல்லவர்களும் ஸரி, வேத வித்யைகளுக்கும் வேத கர்மாக்களுக்கும் வேத ப்ராம்மணர்களுக்கும் பண்ணியிருக்கும் பெரிய தொண்டுகளை அடியோடு மறைத்துவிட்டு, அவர்கள் தமிழ் நாகரிகம் என்று ஏதோ தனியாக இருந்த ஒன்றைப் போஷித்த மாதிரியே எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். சரித்திரத்தை base பண்ணிக் கதை எழுதுகிறவர்கள் மாத்திரமில்லாமல் சரித்திர புஸ்தகமே எழுதுகிறவர்கள், தமிழிலக்கிய வரலாறு எழுதுகிறவர்கள், பண்டைத் தமிழ் நூல்களுக்கு இப்போது உரை எழுதுகிறவர்கள் ஆகியவர்களிலும் ரொம்பப் பேர் இந்த ரீதியில் எழுதுவதுதான் மிகவும் கவலையாயிருக்கிறது. இதனால் இவர்கள் இதுவரை ஜனங்களுக்கு இல்லாமலிருந்த பேத எண்ணங்களை உண்டாக்கி, வலிவு கொடுத்து வருகிறார்கள்.

பொதுவான பாரத கலாச்சாரத்துக்குள்ளேயே தான் அங்கங்கே வித்யாஸங்களிருப்பது. இது ‘ரீஜினல்’ (பிராந்திய) வித்யாஸம் தானே தவிர ‘ரேஷியல்’ (இன) வித்யாஸம் இல்லவேயில்லை. தமிழ் ஜனங்களுக்குள்ளேயே பழக்க வழக்கங்களிலும் பேச்சிலும் தென்பாண்டி நாடு, கொங்குதேசம், சோழ தேசம், வடார்க்காடு – தென்னார்க்காடு – செங்கல்பட்டு சேர்ந்த பழைய நடுநாட்டு – தொண்டை நாட்டுப் பகுதிகள் ஆகியவற்றுக்குள் எத்தனை வித்தியாஸங்களிருக்கின்றன? எதிலும் சேராமல், அத்தனையையும் அவியலாக்கி, இன்னும் சிலதையும் சேர்த்ததாகப் சென்னப் பட்டணத்தில் இருக்கிறது. ஸ்மார்த்தப் பொம்மனாட்டிகளின் (மடிசார்) கட்டிலேயே மூன்று நான்கு தினுஸு சொல்வார்கள்! அதனாலே வேறே வேறே ரேஸ் என்றாகிவிடுமா என்ன? அத்தனையையும் சேர்த்துக் கவிந்து கொண்டு ஒரே பாரத நாகரிகம்தான் இருக்கிறது. அதற்குள்ளேயே பாஷையிலே, ஸங்கீதத்திலே, சில்ப சித்ர பாணிகளிலே, பழக்க வழக்கங்களிலே வித்யாஸங்கள் இருக்கிறது. அதனால்தான் ‘போர்’ அடிக்காமல் வைசித்ரிய ருசி — வெரெய்டி அழகு — இருக்கிறது.

ஆனால் வெள்ளைக்காரர்கள் இரண்டு வெவ்வேறே ‘ரேஸ்’ என்று தங்களுடைய divide and rule policy [பிரித்து ஆளும் கொள்கை] யிலே அதி ஸாமர்த்தியமாகக் கட்டி விட்டதில் நம் ஜனங்களுக்கே வைதிக வடக்கு, அவைதிகத் தெற்கு என்ற அபிப்ராயங்கள் வேரூன்றி, நம் பக்கத்தில் சிலபேருக்கு வைதிகாசாரமே கரித்துப்போய், தமிழ் மக்களுக்கு அந்த வாடையே முடிந்த மட்டும் காட்டாமலிருக்க வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு வைதிகாச்சாரம் பிடிக்காமலே இருக்கட்டும். இவர்கள் வேதம் வேதியர்களுக்கு எதுவும் பண்ணால் போகட்டும். அது அவர்கள் இஷ்டம். ஆனால் இவற்றுக்காகவே அநேக மான்யங்கள் நிவந்தங்கள் விட்டும், இன்னும் வேறே தினுஸிலும் அந்தப் பூர்வ கால ராஜாக்கள் என்றைக்கோ பண்ணிவிட்டுப் போனதைக் கூடச் சொல்லாமல், மறைப்பதும், அது போதாதென்று அவர்கள் ஸ்வதந்த்ரமான ஒரு தமிழ்ப் பண்பாட்டுக்கே ஆதரவு கொடுத்து வளர்த்ததாகக் கல்பித்தும் சொல்வதும் கொஞ்சங்கூட நியாயமில்லை.

பழைய ராஜாக்களின் ‘இன்ஸ்க்ரிப்ஷன்’களில் — சிலா சாஸனங்களிலும், அதைவிட ஜாஸ்தியாக தாம்ர சாஸனங்களிலும் — பாதிக்கு மேல் ப்ராம்மணர்களுக்கும் [வேத] பாடசாலைகளுக்கும் ராஜமான்யங்கள் விட்டதைப் பற்றித்தானிருக்கும். அவர்களுடைய யுத்த வெற்றிகளைப் பற்றிக் கூட அவ்வளவு இல்லை. இந்த தான சாஸனங்களிலேயேதான் அந்த யுத்த வெற்றிகளையும் சொல்லியிருக்கும். தெய்வங்களுக்கு அல்லது பூதேவர்கள் என்னும் ப்ராம்மணர்களுக்குப் பண்ணிய தொண்டுகளைத்தான் கல்லிலும் செம்பிலும் அவர்கள் முக்கியமாக வெட்டி வைத்தார்கள்.

‘பிரமதேயம்’ என்று பிராமணர்களுக்கு தானமாகப் பழைய தமிழ் மன்னர்கள் நிறையக் கொடுத்திருக்கிறார்கள். ஆகாசத்தை ஆகாயம் என்றும், வசத்தை வயம் என்றும் சொல்வது மாதிரி ‘தேச’த்தைத் ‘தேயம்’ என்று சொல்வதுண்டு. இங்கே அப்படித்தான் சொல்லியிருக்கிறதென்று நினைத்து பிராமணருக்குக் கொடுத்த தேசப்பகுதி ‘பிரமதேயம்’ என்று சில பேர் தப்பாகச் சொல்கிறார்கள். இங்கே வரும் தேயத்துக்கும் தேசத்துக்கும் ஸம்பந்தமில்லை. ‘தேயம்’ என்ற [ஸம்ஸ்கிருத] வார்த்தைக்கு ‘தானமாகக் கொடுக்கப்படுவது’ என்று அர்த்தம். அத்யயனம் பண்ணினவர்களுக்கு ‘ச்ரோத்ரிய கிராமங்கள்’ என்று அநேக கிராமங்களைப் பண்டைத் தமிழ் மன்னர்கள் ஸர்வமான்யமாக விட்டிருக்கிறார்கள். ‘சதுர்வேதி மங்கலம்’ என்று முடிகிற பல ஊர்கள் இருக்கின்றன. இவையெல்லாம் தமிழ் ராஜாக்கள் ‘நான்மறையாளர்’ எனப்பட்டவர்களுக்கு தானம் பண்ணினவைதான். ‘அகரம்’ என்று அநேக ஊர்ப் பெயர்கள் முடிகிறதல்லவா? ‘அக்ரஹாரம்’ தான் சுருங்கி ‘அகர’மாயிற்று. இவையும் பிராமணர்களுக்குக் கொடுத்த ராஜமான்ய கிராமங்களே.

அந்தக்கால ராஜ சாஸனங்களில், கல்வெட்டுக்களாகவும், செப்பேடுகளாகவும் இருக்கிற சாஸனங்களில், எங்கேயாவது ஒரு இடத்திலாவது ஒரு ராஜா — அவன் சோழனோ, சேரனோ, பாண்டியனோ, வேறே சிற்றரசனோ, யாரானாலும் — தமிழினம், தமிழ் மரபு, தமிழி நாகரிகம், தமிழ்ப் பண்பாடு என்ற வார்த்தைகளைச் சொல்லி, தான் அதைப் போஷிப்பதாகச் சொல்லியிருக்கிறானா என்றால், அப்படி ஒன்றுகூட இல்லை. நான் ஒரளவுக்கு எனக்கு தெரிந்த மட்டில்1 துருவி துருவிப் பார்த்தும் அப்படி ஒன்றும் அகப்படவில்லை. “மனுநீதி விளங்க”, “மனுவாறு விளங்க” (ஆறு என்றால் மார்க்கம்) “அந்தணர் ஆகுதிக்கனல் ஓங்க”, “சாதி ஒழுக்கம் பிறழாது நிற்க”த் தாங்கள் ராஜ்யபாரம் செய்ததாகவே அந்த ராஜாக்கள் சாஸனங்களில் வெட்டி வைத்திருக்கிறார்கள்.

ஆரிய அரசர்களை எதிர்த்துச் செங்குட்டுவன் போராடி ஜயித்தான் என்பது போன்ற விஷயங்களைச் சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் சொல்லும்போதுகூட ‘ஆரிய’ என்பது ரேஸைக் குறிப்பதாக இல்லவே இல்லை. தமிழ் மூவேந்தர்களுக்குள்ளேயே ஒருத்தரோடொருத்தர் சண்டை போட்டுக் கொள்ளவில்லையா? அப்போது அவர்கள் ஆண்ட ப்ரதேசத்தை வைத்து ‘பாண்டிய நாட்டு ராஜாவை எதிர்த்தான்’, ‘சோழ நாட்டு ராஜாவை எதிர்த்தான்’ என்று சொல்கிறது போலவும், திராவிட தேசத்திலேயே அடங்கும் தெலுங்கு, கன்னட ராஜாக்களை எதிர்த்தான் என்பது போலவுந்தான் ஆர்யாவர்த்தம் என்ற பேரை வட இந்தியா முழுவதற்கும் விஸ்தரித்து அந்தப் பிரதேசத்தில் இருந்த ராஜாக்களை எதிர்த்ததை ‘ஆரிய அரசர்களை எதிர்த்தான்’ என்று சொல்லியிருக்கிறது. ரேஸை வைத்துச் சொல்லியிருந்தால், அந்த வட நாட்டிலே இருந்த ப்ராம்மணர்களும் நம்முடைய தெற்கத்தி ராஜாவுக்குச் சத்ருவாகத்தான் இருந்திருப்பார்கள். இப்போது தனித் தமிழ் நாகரிகத்தைச் சொல்கிறவர்களின் அபிப்பிராயப்படி ஆர்ய ராஜாக்களை விடவும் அந்த ப்ராம்மணர்கள்தான் தமிழரசர்களுக்குப் பரம சத்ருவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் சிலப்பதிகாரத்தைப் பார்த்தாலோ, சேர ராஜா செங்குட்டுவன் வடக்கத்தி ராஜாக்களோடுதான் யுத்தம் பண்ணினானே தவிர அங்கே இருந்த ப்ராம்மணர்களுக்கு ஒரு ஹானியும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டான் என்று ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. தேவ ரிஷிகள் — ‘விசும்பு முனிவர்’2 என்று இருக்கிறது — அவனுக்கு முன்னே வந்து, “ஹிமயமலை ராஜ்யங்களில் ‘அருமறை அந்தணர்கள்’ இருக்கிறார்கள். அவர்களைப் பேணல் உன் கடமை” என்று சொன்னதாக இருக்கிறது.3 அந்த ப்ராம்மணர்களுக்குச் சேர ராஜா செங்குட்டுவன் ஹானி பண்ணவில்லை என்பது மாத்திரமில்லை. தன் ஸைன்யத்திடம் அவன், “வட திசையில் வேள்வித் தீ அவியாமல் மறை காத்து வருகிறவர்கள் அருள் குணத்தினால் தண்ணென்று இருக்கும் பெருவாழ்க்கை வாழ்பவர்கள். அவர்களைப் போற்றி ரக்ஷிக்க வேண்டும்” என்று ஆக்ஞையிட்டதாகவும் இருக்கிறது.4

வடக்கத்தி ராஜாக்களை ஜயித்து, ஹிமயமலையிலிருந்து கண்ணகி சிலை பண்ணுவதற்காகக் கல்லெடுத்து, அதைத் தோற்றுப்போன ராஜாக்களுடைய தலையில் ஏற்றி, சேர நாட்டுக்குத் திரும்பி வந்தவுடன் செங்குட்டுவன் யாகமே பண்ணினதாகவும் வருகிறது. யாகம் செய்யவேண்டுமென்று அவனுக்குத் தமிழ்நாட்டு ப்ராம்மணன் ஒருத்தன் [மாடல மறையோன் என்பவன்] எடுத்துச் சொன்னதை அவன் மனஸாரக் கேட்டுக் கொண்டானென்பதை, “அந்த ப்ராம்மணன் ராஜாவின் காது என்கிற வயலில் உத்தமமான அர்த்தமுள்ள (“வான்பொருள்” என்று இருக்கிறது) தன் யோசனையாகிய விதைகளைத் தன்னுடைய வேதமயமான நாக்கு என்ற ஏறினால் உழுது விதைத்தான். அதிலிருந்து விளைகிற ஸ்வர்க்கவாஸம் அல்லது மோக்ஷம் என்ற பெரும் பதத்தை அறுவடை செய்து அநுபவிக்கணுமென்ற வேட்கை ராஜாவுக்கு ஏற்பட்டு, உடனே அவன் நான்மறை மரபாகிற வேத ஸம்ப்ரதாயத்தின் ஸூக்ஷ்மங்கள் தெரிந்த யஜ்ஞ ப்ராம்மணர்களைக் கொண்டு சாந்தி ப்ரதமான யாகம் ஆரம்பித்தான்” என்று சிலப்பதிகாரத்தில் விவரமாகச் சொல்லியிருக்கிறது.5

இதிலே ஆச்சர்யமென்னவென்றால், சிலப்பதிகாரம் எழுதினவர் “வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்”கிறவர்களென்று ஞானஸம்பந்தர் கண்டனம் பண்ணும் ஜைனர்களின் மதத்தைச் சேர்ந்த பிக்ஷு!

அப்புறம் அவர் கண்ணகி விக்ரஹம் ப்ரதிஷ்டையானதைச் சொல்கிறபோதும் —

இந்த நாளில், “வேதமந்திரம் சொல்லித்தான் ப்ரதிஷ்டை பண்ணணுமா? அன்போடு தமிழில் சொன்னால் தெய்வசக்தி விக்ரஹத்தில் ஏறாதா?” என்றெல்லாம் கேட்கிறார்கள். ஆனால் இவர்கள் தனித் தமிழ்த் தெய்வமாகச் சொல்லும் கண்ணகிக்கே செங்குட்டுவன் மூர்த்தி ப்ரதிஷ்டை செய்தபோது, ‘அறக்களத்து அந்தணரைக்’ கொண்டு பண்ணியதாகவே இளங்கோ – அவர்தான் சிலப்பதிகாரம் எழுதியவர் சொல்லியிருக்கிறார். ‘அறக்களத்து அந்தணர்’ என்பது ரொம்ப அழகான பதப் பிரயோகம். “யுத்தம் என்கிற மறக்களத்தில் சேர ராஜா வீர தீரம் பண்ணி, கண்ணகி சிலைக்கான கல்லெடுத்து அதை வடக்கத்தி ராஜாக்கள் தலையில் வைத்துக் கொண்டுவந்தாச்சு. இனிமேல் அந்தக் கல் தெய்வமாக வேண்டும். இதற்கு ராஜாவின் மறக்கள ஸாமர்த்தியங்கள் பிரயோஜனப்படாது. வேத தர்மமான அறக்களத்தைச் சேர்ந்த அந்தணர்களால்தான் அதைப் பண்ண முடியும்” என்ற இத்தனை அபிப்ராயத்தை ரத்னச் சுருக்கமாக அடக்கித்தான் ‘அறக்களத்தந்தணர்’ என்று போட்டிருக்கிறார். முதலில் அவர்களைச் சொல்லி, அப்படிப்பட்ட அந்தணர், தன்னுடைய குரு (அதாவது புரோஹிதர் : அவரும் ப்ராம்மணர்) ‘பெருங்கணி’ என்கிற ஜோஸ்யன், சில்பி ஆகியவர்களைக் கொண்டு மூர்த்திப் பிரதிஷ்டை பண்ணினான் என்று இருக்கிறது.6

இத்தனைக்கும் சிலப்பதிகாரம் எழுதியவர் வேத பாஹ்யமான [வேதத்திற்குப் புறம்பான] சமண மதத்தைச் சேர்ந்த துறவி! இப்போது என்னடாவென்றால் வைதிகாச்சாரத்தில் வந்த புலவர்கள், ஆராய்ச்சிக்காரர்கள், எழுத்தாளர்கள் முதலியவர்களே அந்தக் கால ராஜாக்களின் வைதிகப் பற்றை அடியோடு மறைத்துவிட்டு அது போதாதென்று அவர்கள் ஒரு நாளும் நினைத்துக் கூடப் பார்க்காத ஒரு தனித் தமிழ் கலாச்சாரத்தை அவர்கள் வளர்த்ததாக வேறு ஜோடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸத்யத்தை மறைக்கிறதும் மாற்றுகிறதும் ரொம்பத் தப்பு. சரித்ரம் சொல்லும்போது அன்றைக்கு வாஸ்தவத்தில் இருந்ததை அடியோடு black-out [இருட்டடிப்பு] பண்ணி விட்டு, இன்றைக்குள்ள கொள்கைகளை அன்றைக்கிருந்தவர்கள் மீது ஆரோபித்து [ஏற்றி வைத்து] எழுதுவது நியாயமேயில்லை.

பிரதேச காலாசாரம் என்று அங்கங்கே கொஞ்சம் வித்யாஸமாகத்தான் இருக்கும். பேசுகிற பாஷையினாலும், வாழ்க்கைப் போக்குகளாலும், சீதோஷணாதிகளைப் பொறுத்தும் பொதுவான பாரத மரபு என்ற ஒரே அடிமரத்திலிருந்து வெவ்வேறு கிளை மரபுகள் தோன்றத்தான் செய்யும். வேரும் அடிமரமும் ஒன்றேத்தான். மேம்போக்கானதுதான் மற்ற பிராந்திய வித்தியாஸங்கள்.

ஆனால் இன்றைக்கு நம்முடைய பண்டைய கலாசாரப் பெருமைகளைப் பிரகாசப்படுத்துவதாகச் சொல்லி அநேக மஹாநாடுகள், ஸெமினார்களெல்லாம் நடத்துகிறார்களே, இதிலே அநேகமாக வேராகவும், அடிமரமாகவும் இருக்கும் பொதுவான வைதிக கலாசாரத்தை மறைத்தே விடுகிறார்கள். பிராந்திய கலாசாரங்களையே ஒரு தனியான முழு மரபு மாதிரி ஜோடித்து, ‘ஆர்யன்-ட்ராவிடியன்’ என்ற கல்பிதமான பரஸ்பர-குஸ்தி நாகரிகங்களில் ட்ராவிடியனைத்தான் தூக்கிக் காட்ட வேண்டும் என்ற அபிப்ராயத்தில் இல்லாததையெல்லாம் ஸ்ருஷ்டி பண்ணிச் சேர்த்துப் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்.

பழைய சரித்திர புருஷர்களையும் ஸம்பவங்களையும் வைத்துக் கதை, கிதை அழகாகக் கட்டி ஜனங்களைக் கவரும்படியாக எழுதுகிறவர்களும் உண்மை நிலையை எழுதுவதில்லை. நிரம்ப ‘மாஸ்-அப்பீல்’ உள்ள துறையிலிருப்பவர்கள் இப்படி இருக்கிறார்களே என்று இருக்கிறது. இன்றைக்கு ஜனங்களில் பல பேர் புராணம், இதிஹாஸம், பழைய காலக் காவியங்கள் எல்லாம் பொய்க் கதை என்று தள்ளிவிட்டு, ‘ஆராய்ச்சி பண்ணி எழுதியது’ எனப்பட்ட இந்த நவீன காலக் கதைகளையே ‘அதாரிடி’யாக நினைப்பதால், நம்முடைய பூர்வகால சரித்திரத்தைப் பற்றி அவர்கள் தப்பாக — distorted ஆக — புரிந்து கொள்ளும்படி ஆகியிருக்கிறதே என்று கஷ்டமாயிருக்கிறது. ‘இன்றைக்கு நம் அபிப்ராயம் எப்படி வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் பூர்வ விஷயங்களைச் சொல்வதாக நாம் புறப்படும்போது அன்றைக்கு எப்படி இருக்கிறதோ அதைத்தான் உள்ளபடிச் சொல்லணும். நம்முடைய இக்கால அபிப்ராயங்களைப் பூர்வ காலத்தவர்கள் மேல் ஆரோபித்துச் சொல்லப்படாது’ என்ற அடிப்படை நியாயங்கூடத் தெரியாமலிருக்கிறார்களே என்று கஷ்டமாயிருக்கிறது.

ஒரு ராஜபாட்டை நீளநெடுகப் போகிறதுபோல வேத சாஸ்திர வழிதான் ஆதியிலிருந்தே இந்த பாரத தேசம் முழுதும் பரவலாக இருந்திருக்கிறது. அதிலிருந்தே கிளைச் சாலைகள் மாதிரிப் பிரதேச கலாசாரங்கள், ரொம்பவும் ஆதியிலேயே தமிழ்நாட்டினராக, தமிழ்மொழி பேசுபவர்களாக இருந்த தமிழர்களும் வைதிகாச்சாரத்தை ஏற்றவர்கள்தான். அதே சமயத்தில் இவர்கள்தான் கிளை மரபு என்றேனே, அப்படி தமிழ் நாட்டுக்கு மட்டும் உரிய சில பழக்க வழக்கங்கள், கலையம்சங்கள் முதலியவை ரூபமாவதற்கும் காரணமாக இருந்தவர்கள். இந்த ரீதியில் பார்க்கிற போது சங்ககாலம் முடிய இருந்த முற்கால சேர சோழ பாண்டிய மூவேந்தர்களை வேண்டுமானால் தமிழ்க்கிளை மரபைப் பேணியவர்கள் என்று சொல்ல நியாயமுண்டு. அதுவும் கிளை மரபாகத்தான் இவற்றைப் பேணினார்கள். மூல மரபான மரமாக அவர்களும் பாரத தேசத்திற்கே பொதுவான வைதிக கலாசாரத்தைத்தான் பேணினார்கள். மரத்திலிருந்து தனியாகத் துண்டித்து கிளை வரள முடியாது. இயற்கையாக கிளை வந்தது. அதையும் பேணினார்கள். தனித் தமிழ்ப் பண்பாடு என்று ஒன்றை அவர்கள் நினைக்கவேயில்லை.

ஆனால் இன்றைக்கு எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள் அந்த மூவேந்தர்களுக்கும் அப்புறம் வந்த பல்லவர்களையும் தனித் தமிழ்ப்பண்பாட்டை வளர்த்தவர்களாகவே சித்தரிப்பதுதான் ரொம்ப ஆச்சர்யம்! மூவேந்தர்களும் தங்களை ஸூர்ய வம்சம், சந்த்ர வம்சம், சிபியின் பரம்பரை என்றெல்லாந்தான் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் அவர்களில் பலருடைய பெயராவது நெடுஞ்சேரலாதன், சேரமான் பெருமாள், கரிகால் வளவன், கிள்ளி வளவன், நெடுஞ்செழியன், நெடுமாறன் என்றெல்லாம் தமிழ்ப் பெயர்களாக இருக்கின்றன. ஆனால் பல்லவ ராஜாக்களுக்கோ ஸ்கந்தசிஷ்யன், குமார விஷ்ணு, ஸிம்ஹவர்மா, ஸிம்ஹ விஷ்ணு, மஹேந்திரன், நரஸிம்ஹன், பரமேச்வரன், நந்திவர்மா, தந்திவர்மா என்று எல்லாம் ஸம்ஸ்கிருதப் பெயர்களாகவே இருக்கின்றன. குடுமியாமலையில் ஸங்கீத விஷயமாக உள்ள மஹேந்திரவர்மாவின் கல்வெட்டும், இன்னும் அவர்களுடைய அநேக சாஸனங்களும் ஸம்ஸ்கிருதத்திலேயே இருக்கின்றன. அவர்கள் தங்களை ‘பரம ப்ரஹ்மண்யர்’ என்று இந்த சாஸனங்களில் பொறித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஸம்ஸ்கிருத கடிகைகளை நிறையப் போஷித்திருக்கிறார்கள். பிராம்மணனை ‘சர்மா’ என்கிற மாதிரி க்ஷத்ரியரை ‘வர்மா’ என்று சொல்ல வேண்டும். அந்தப்படி பல்லவர்கள் மஹேந்திர வர்மா, நரஸிம்ஹ வர்மா, பரமேச்வர வர்மா, நந்தி வர்மா என்று ‘வர்மா’ போட்டுக் கொண்டவர்கள். தங்களை பாரத்வாஜ கோத்ரத்தினர் என்று சொல்லிக் கொண்டவர்கள்.

அவர்கள் காலத்தில்தான் அப்பர், ஸம்பந்தர், திருமங்கையாழ்வார் முதலியவர்களுடைய தெய்விகமான தமிழ்ப் பாட்டுகளும் தோன்றிற்றென்பது வாஸ்தவந்தான். ஆனால் இந்தப் பாட்டுகளை அநுக்ரஹம் பண்ணிய பெரியவர்களும் வைதிக வழியை வளர்க்க வந்தவர்களே. ‘வேதநெறி தழைத்தோங்க’ வைத்தவர்களே. அவர்களையும் சரி, அந்தப் பல்லவ ராஜாக்களையும் சரி, இந்த நாளில் ‘ஆர்யன் வெர்ஸஸ் ட்ராவிடியன்’ என்கிற ‘வெர்ஸ’ஸில் கொண்டுவிட்டுத் தனித் தமிழ் நாகரிகத்தை வளர்த்தவர்கள் என்று சொல்வது கொஞ்சங்கூட ஸரியில்லை.

வேத ஸம்ப்ரதாயந்தான் உசத்தி என்று நிலை நாட்டுவதற்காக இதையெல்லாம் நான் சொல்ல வரவில்லை. வேதமோ, வேறே ஒன்றோ, எதுவானாலும் இந்த தேசம் பூராவுக்கும் ஒரே ஸம்பிரதாயந்தான் என்று எல்லாரும் புரிந்துகொண்டு பேதமில்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்ற ஆசையில்தான் சொல்கிறேன். வேதம் வேணும் என்பதைவிட, ‘நமக்குள் பேதம் வேண்டாம், வேண்டவே வேண்டாம். வெள்ளைக்காரர்கள் அவர்கள் கார்யம் நடப்பதற்காக கட்டி விட்ட ‘ரேஸ் தியரி’யை நாமும் அப்படியே நம்பிக் கட்சிகளாக உடைந்து நின்றுகொண்டு, த்வேஷமும் போட்டியுமாக இருக்க வேண்டாம். அல்லது இப்படி சண்டை வேண்டாமே என்பதற்காக ஸத்யத்தை விட்டுக் கொடுத்து இல்லாத ஒரு மரபை இருந்ததாகப் பெருமைப் படுத்திப் பிரகடனம் பண்ண வேண்டாம். தமிழ் மரபுக்காரர்கள் நடுவாந்தரத்தில் ஏதோ அசட்டுத்தனமாக ஏமாந்து போய் வேத மரபிலிருந்து அநேகம் எடுத்துக் கொண்டு விட்டதாகவும், இப்போது நாம் அதையெல்லாம் உரித்துப் போட்டுவிட்டுக் கலப்பில்லாத ஸ்வய மரபாகப் பண்ண வேண்டுமென்றும் முயற்சிகள் பண்ண வேண்டாம். கைலாஸத்திலிருந்து ராமேச்வரம் வரை உள்ள நாம் அத்தனை பேரும் அந்த இரண்டு இடத்திலேயும் ப்ரபுவாக உள்ள ஒரே பரமேச்வரனுடைய குழந்தைகளாக, ஸஹோதரர்களாக இருக்க வேண்டும்’ என்பதற்காகத்தான் சொல்கிறேன். இந்த உசந்த தமிழ் தேசத்தில் — உலகத்திலேயே அதிகமான கோவில்களையும், பக்தி நூல்களையும் கொண்ட தேசத்தில் எத்தனையோ ஆயிரம் வருஷமாக ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்தவர்களுக்கிடையில் பேத எண்ணம் வலுக்காமல் ஒன்று சேர்ந்து வாழணும்; அதே ஸமயம் ஸத்தியத்தை விட்டுக் கொடுக்காமல் யதார்த்தங்களை ஒப்புக் கொள்ளும் ஸத்யஸந்தர்களாக ஒன்று சேரணும் என்பதே என் ப்ரார்த்தனையாக இருக்கிறது. ‘லோகம் முழுக்க நன்றாக இருக்கணும்’ என்று வேண்டிக் கொள்ளும்போதே குறிப்பாக இந்த தமிழ் தேசத்திலே எல்லா ‘ஒழிக!’ சப்தமும் போய் ‘ஒன்றுக!’ சப்தமே, சப்தமாக மட்டுமில்லாமல் கார்யமாக நடக்க வேண்டுமென்றுதான் சந்த்ரமௌளீச்வரரிடம்7 ஒவ்வொரு வேளையும் முறையிடுகிறேன்.

இப்போது நான் அலசினதில் யாரையாவது கண்டித்து, கிண்டித்துச் சொல்லியிருந்தால்கூட அந்தக் கண்டனத்தையெல்லாம் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். கண்டிக்கிறதும் பிரிந்து நிற்காமல் ஒன்றாக சேர்க்கிற நோக்கத்தில்தான். இல்லாததைச் சொல்லித்தான் ஒன்று சேரணும் என்றில்லை; ஒரு பெரிய உண்மையை ஒளித்துத்தான் ஒன்று சேரணும் என்றில்லை; ஸத்தியம் வேண்டும், ஐக்கியமும் வேண்டும். ஸத்தியத்தோடேயே ஐக்கியம் ஏற்படட்டும் என்றுதான் சொல்வது. விபரீதமாகச் சிலது பண்ணுகிறபோது கண்டித்துச் சொன்னால்தான் எடுபடும் என்றே அப்படிச் சொல்வது. அடிப்படையில் ஆசை, நோக்கமெல்லாம் அத்தனை பேரும் அரன்குடி மக்களாக அன்போடு ஒன்று சேரணும் என்பதுதான்.

அரனுடைய மூத்த மகனைப் பற்றி சொல்ல ஆரம்பித்தது, நாம் எல்லோரும் அரன் குடி மக்களாக சேர அந்த மகனுடைய அருள் ரொம்ப முக்கியம். நமக்குத் தெரியாமலே அவர் இதைப் பண்ணிக் கொண்டுத்தானிருக்கிறார். எப்படியென்றால், அவருக்குத் ‘தமிழ் தெய்வம்’ என்று இதுவரை யாரும் முத்திரை குத்தவில்லை. ஆனாலும் தமிழ் நாட்டில் அவருக்கு இருக்கிற அளவுக்கு வேறே எந்த ஸ்வாமிக்கும் கோவிலில்லை. அவருக்கு தமிழ்நாட்டிலிருக்கும் அளவுக்கு வேறே எந்த மாகாணத்திலும் கோவிலில்லை. ‘ரேஸ்’ எண்ணங்கள் எழும்புவதற்கே இடம் கொடுக்காமல் நம் எல்லோரையும் அவர் பக்தியில் சேர்த்துப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார். அறிவுக்கும் தெய்வமாக இருக்கப்பட்ட அவரே ஸரியான ஸத்தியமான ஒற்றுமை வழியில் நம்முடைய ஆராய்ச்சிகள் போவதற்கும், விபரீதமான முடிவுகள் பண்ணாமலிருப்பதற்கும் வழிகாட்ட வேண்டும்.


1 ஸ்ரீசரணர்கள் தன்னடக்கத்துடன் இவ்விதம் கூறியுள்ளார்கள். “பெரியவர்கள் அறிந்த அளவுக்கு எபிக்ராபிகா இண்டிகாவில்கூட சாஸன விவரங்கள் இருக்குமா என்பது சந்தேகம்!” என்று தொல்பொருள் ஆய்வுத்துறை தலைமை இயக்குநராயிருந்த நிபுணர் டி.என். ராமசந்திரன் வியந்து கூறுவார்.

2 “விசும்பியங்கு முனிவர்” (சிலம்பு-வஞ்சி-கால்கோள் காதலி 92)

3 அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர்
பெருநில மன்ன பேணல் நின்கடன்
(சிலம்பு-வஞ்சி-கால்கோள் காதலி 102-103)

4 வடதிசை மருங்கின் மறைகாத் தோம்புநர்
தடவுத்தீ அவியாத் தண்பெரு வாழ்க்கை
காற்றூ தாளரைப் போற்றிக் காமின்
(சிலம்பு-வஞ்சி-கால்கோள் காதலி 248-250)

5 மறையோன் மறைநா உழுது வான்பொருள்
இறையோன் செவிசெறு வாக வித்தலின்
வித்திய பெரும்பதம் விளைந்து பதமிகுத்துத்
துய்த்தல் வேட்கையிற் சூழ்கநல் வேந்தன்

நான்மறை மரபின் நயம்தெரி நாவின்
கேள்வி முடிந்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி

(சிலம்பு-நடுகற்காதை 187-194)

6 அறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி
சிறப்புடைக் கம்மியர் ….

(சிலம்பு-வாழ்த்துக் காதலி 222-3)

7 ஸ்ரீமடத்தின் ஆராதனா மூர்த்தி

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is மாமாத்திரர், அமாத்தியர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  மஹேந்திர பல்லவன் கலப்பு ஜாதியா ?
Next