திருப்பாவை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீ:
ஆண்டாள் அருளிச்செய்த

திருப்பாவை

பெரியாழ்வார் திருமகளார் ஆண்டாள். பெரியாழ்வாருக்குக் கண்ணன்மீது ஆசை. அதைவிட மிகுதியான ஆசை ஆண்டாளுக்கு. கண்ணனையே மணாளனாகப் பெற ஆசைப்பட்டாள். அவனுக்குக் குற்றவேல் அந்தரங்கக் கைங்கர்யம் செய்ய விரும்பினாள். கைங்கர்யமே சிறந்த புருஷார்த்தம். அதுவே நீங்காத செல்வம். அவனுக்குக் கைங்கர்யம் செய்ய நினைப்பதும் செய்வதும் அவனுடைய அருளால்தான். ஸ்ரீமந் நாராயணனே நமக்குக் கைங்கர்ய செல்வம் தருவான் என்பதை ஆண்டாள் அறுதியிட்டு அனைவரையும் பகவத் கைங்கர்யத்தில் ஈடுபடுத்துகிறாள். பக்தர்கள் திருப்பாவையையேனும் அறிந்து தினமும் அநுஸந்திக்கவேண்டும்.

இயல்தரவிணைக் கொச்சகக் கலிப்பா

நாராயணனே பறை தருவான்

474. மார்கழித் திங்கள் மதிநிறைந் நன்னாளால்,

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்,

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்,

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன் குமரண்,

ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்,

கார்மேணிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாராயணனே நமக்கே பறைதருவான்,

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். 1

நோன்பு நோற்போர் மேற்கொள்ள வேண்டியவை

475. வையத்து வாழ்வீர்காள்!நாமும்நம் பாவைக்குச்,

செய்யும் கிரிசைகள் கேளீரோ,பாற்கடலுள்

பையத் துயின்ற பரம னடிபாடி,

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி,

மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்,

செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்,

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி,

உய்யுமா றெண்ணி யுகந்தேலோ ரெம்பாவாய். 2

உத்தமன் பேர்பாட நீங்காத செல்வம் நிறையும்

176. ஓங்கி யுலகளந்த உத்தமன் பேர்பாடி,

நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்,

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து,

ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயலுகள,

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக், குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்,

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். 3

யாங்கள் வாழ மழைபொழியச் செய்

477. ஆழி மழைக்கண்ணா!ஒன்றுநீ கைகரவேல்,

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,

ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்து,

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்,

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்,

வாழ வுலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். 4

தாமோதரனைச் சொல்லு

478. மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,

தூய பெருநீர் யமுனைத் துறைவனை,

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,

தாயைக் குடல்விளக்கஞ் செய்ததா மோதரனை,

தூயோமாய் வந்துநாம் தூமலர்தூ வித்தொழுது,

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க,

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,

தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய். 5

அரி என்று எங்கும் பேரொளி

479. புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்,

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ,

பிள்ளாய்!எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு,

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை,

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்,

மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்,

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். 6

பொழுது புலர்ந்து விட்டதே!எழுந்திரு

480. கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்,கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே,

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து,

வாச நறுங்குழ லாய்ச்சியர்,மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ,

நாயகப் பெண்பிள்ளாய்!நாரா யணன்மூர்த்தி,

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ,

தேச முடையாய்!திறவேலோ ரெம்பாவாய். 7

பாவாய்! எழுந்திரு

481. கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு,

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்,

போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து, உன்னைக்

கூவுவான் வந்துநின்றோம்,கோது கலமுடைய

பாவாய்!எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய,

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,

ஆவாவென் றாய்ந் தருளேலோ ரெம்பாவாய். 8

மாதவன் திருநாமங்களைச் சொல்

482. தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,

தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்,

மாமான் மகளே!மணிக்கதவம் தாள்திறவாய்,

மாமீர்!அவளை யெழுப்பீரோ? உன்மகள்தான்,

ஊமையோ, அன்றிச் செவிடோ, அனந்தலோ,

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ,

மாமாயன் மாதவன் வைகுந்த னென்றென்று,

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய். 9

பறைதரும் புண்ணியன் நாராயணன்

483. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்,

மாற்றமும்தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாரா யணன்,நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால்,பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்,

தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ,

ஆற்ற அனந்த லுடையாய்!அருங்கலமே,

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். 10

யாவரும் வந்தனர், c எதற்காக உறங்குகிறாய்?

484. கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்,

குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே,

புற்றர வல்குல் புனமயிலே!போதராய்,

சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து,நின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டி,நீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய். 11

மனத்துக்கு இனியவனைப் பாடுகிறோமே!நீயும் வா

485. கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி,

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர,

நனைத்தில்லம் சேறாக்கும் நல்செல்வன் தங்காய்,

பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றி,

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற,

மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்,

இனித்தா னெழுந்திரா யீதென்ன பேருறக்கம்,

அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய். 12

பிள்ளைகள் யாவரும் வந்தனர்:நீயும் நீராட வா

486. புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனை,

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்,

வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று,

புள்ளும் சிலம்பினகாண் போ தரிக் கண்ணினாய்,

குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே,

பள்ளிக் கிடத்தியோ பாவாய்!நீ நன்னாளால்,

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். 13

எங்களை எழுப்புவதாக அன்றோ c சொன்னாய்!

487. உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்,

செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண்,

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்,

எங்களை முன்ன மெழுப்புவான் வாய்பேசும்,

நங்காய்!எழுந்திராய் நாணாதாய்!நாவுடையாய்,

சங்கொடு சக்கர மேந்தும் தடக்கையன்,

பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெமம்பாவாய். 14

நீயும் வந்து மாயனைப்பாடு

488. எல்லே!இளங்கிளியே!இன்ன முறங்குதியோ,

சில்லென் றழையேன்மின் நங்கைமீர்!போதர்கின்றேன்,

வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்,

வல்லீர்கள் நீங்களே நானேதா னாயிடுக,

ஒல்லைநீ போதா யுனக்கென்ன வேறுடையை,

எல்லாரும் போந்தாரோ போந்தார்போந் தெண்ணிக்கொள்,

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். 15

திருப்பள்ளி எழுச்சி பாடவா

489. நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய

கோயில்காப் பானே,கொடித்தோன்றும் தோரண

வாயில்காப் பானே, மணிக்கதவம் தாள்திறவாய்,

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்,

வாயால்முன் னமுன்னம் மாற்றாதே யம்மா,நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். 16

யாவரும் உறங்காது எழுமின்

490. அம்பரமே தண்ணீரே சோறே யறஞ்செய்யும்,

எம்பெருமான் நந்தகோ பாலா!எழுந்திராய்,

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே!குலவிளக்கே,

எம்பெரு மாட்டி யசோதாய்!அறிவுறாய்,

அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த,

உம்பர்கோ மானே!உறங்கா தெழுந்திராய்

செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா,

உம்பியும் நீயு முறங்கேலோ ரெம்பாவாய். 17

நம்பின்னை நங்காய்!மகிழ்ந்து வந்து கதவைத்திற

492. குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மெலேறி,

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்,

வைத்துக் கிடந்த மலர்மார்பா!வாய்திறவாய்,

மைத்தடங் கண்ணினாய்!நீயும் மணாளனை,

எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்,

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,

தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய். 19

விமலா? நப்பின்னை நங்காய்!எழுந்திருங்கள்

493. முப்பத்து மூவ ரமர்க்கு முன்சென்று,

கப்பம் தவிர்க்கும் கலியே!துயிலெழாய்,

செப்ப முடையாய்!திறலுடையாய்,செற்றார்க்கு

வெப்பங் கொடுக்கும் விமலா!துயிலெழாய்

செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்,

நப்பின்னை நங்காய்!திருவே!துயிலெழாய்,

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை,

இப்போதே யெம்மைநீ ராட்டேலோ ரெம்பாவாய். 20

போற்றிப் புகழ்ந்து வந்தோம்!துயிலெழாய்

494. ஏற்ற கலங்க ளெதிர்பொங்கி மீதளிப்ப,

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே!அறிவுறாய்,

ஊற்ற முடையாய்!பெரியாய், உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே!துயிலெழாய்,

மாற்றா ருனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்,

ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே,

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். 21

கண்கள் இரண்டும் கொண்டு எங்களை நோக்கு

495. அங்கண்மா ஞாலத் தரசர், அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே,

சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்,

கிங்கிணி வாய்செய்த தாமரைப் பூப்போலே,

செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ,

திங்களு மாதித் தியனு மெழுந்தாற்போல்

அங்க ணிரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாப மிழிந்தேலோ ரெம்பாவாய். 22

யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்க

496. மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்,

சீரிய சிங்க மறிவுற்றுத் தீவிழித்து

வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு,

போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணா,உன்

கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரிய சிங்கா சனத்திருந்து, யாம்வந்த

காரிய மாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். 23

உன் சேவகம் போற்றி வந்தோம்!இரங்கு

497. அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி,

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி,

பொன்றச் சகட முதைத்தாய் புகழ்போற்றி

கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி,

குன்று குடையா வெடுத்தாய் குணம்போற்றி,

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,

என்றென்றுன் சேவகமே யேத்திப் பறைகொள்வான்,

இன்றுயாம் வந்தோ மிரங்கேலோ ரெம்பாவாய். 24

நெடுமாலே!பறை தருதி

498. ஒருத்தி மகனாய்ப் பிறந்து,ஓ ரிரவில்

ஒருத்தி மகனா யளித்து வளர,

தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த,

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,

நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்,

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி,

வருத்தமுந் தீர்ந்து மகிழ்நதேலோ ரெம்பாவாய்.25

ஆலினிலையாய்!அருள்

499. மாலே!மணிவண்ணா!மார்கழிநீ ராடுவான்,

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,

ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன,

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே,

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே,

சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே,

கோல விளக்கே கொடியே விதானமே,

ஆலி னிலையாய்!அருளேலோ ரெம்பாவாய். 26

பறைதருக:யாங்கள் சன்மானம் பெறுவோம்

500. கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா,உன்றன்னைப்

¢ பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்,

நாடு பகழும் பரிசினால் நன்றாக,

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே,

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்,

ஆடை யுடுப்போ மதன்பின்னே பாற்சோறு,

மூடநெய் பெய்து முழங்கை வழிவார,

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். 27

உறவை ஒழிக்கமுடியாது

501. கறவைகள் பின்சென்று கானஞ்சேர்ந் துண்போம்,

அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து, உன்றன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்,

குறைவொன்று மில்லாத கோவிந்தா, உன்றன்னோ

டுறவேல் நமக்கிங் கொழிக்க வொழியாது,

அறியா பிள்ளைகளோ மன்பினால்,உன்றன்னைச்

சிறுபே ரழைத்தனவும் YP யருளாதே,

இறைவா!நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். 28

உனக்கே நாம் ஆட்செய்வோம்

502. சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து,உன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்,

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து,நீ

குற்றேவ லெங்களைக் கொள்ளாமற் போகாது,

இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் கோவிந்தா,

எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும், உன்றன்னோ

டுற்றோமே யாவோ முனக்கேநா மாட்செய்வோம்,

மற்றைநங் காமங்கள் மாற்றேலோ ரெம்பா வாய். 29

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்

503. வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை,

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட வாற்றை, அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன,

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே,

இங்கிப் பரிசுரைப்பா ரீரிரண்டு மால்வரைத் தோள்,

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்,

எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய். 30

அடிவரவு:மார்கழி வையத்து ஓங்கி ஆழி மாயனை புள்ளும் கீசு கீழ்வானம் தூமணி நோற்று கற்று கனைத்து புள்ளின் உங்கள் எல்லே நாயகன் அம்பரம் உந்து குத்து முப்பத்து ஏற்ற அங்கண் மாரி அன்று ஒருத்தி மாலே கூடாரை உறவை சிற்றம் வங்கம் -- தை.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.




 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is திருப்பாவைத் தனியன்கள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  நாச்சியார் திருமொழித் தனியங்கள்
Next