ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
திருமழிசையாழ்வார் அருளிச்செய்த
நான்முகன் திருவந்தாதி
இவ்வாழ்வார் திருமழிசை என்னும் ஊரில் அவதரித்தார். இவருக்கு பக்தி ஸாரர் என்றும் திருநாமம். ஸ்ரீ சுதர்சன ஆழ்வானே திருமழிசையாழ்வாராக அவதரித்தார். ஸ்ரீமந் நாராயணனின் பரத்துவத்தை அனைவருக்கும் அறிவிப்பவர்
'நான்முகன்'என்று இந்த அந்தாதி தொடங்குவதால் இதற்கு 'நான்முகன் திருவந்தாதி'என்று பெயர் ஏற்பட்டது. இவரது அவதார நன்னாள் தையில் மகம்.
தனியன்
சீராப்பிள்ளை அருளிச்செய்தது
நேரிசை வெண்பா
திருமழிசைப்பிரானடி வாழ்த்து
நாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக்
சேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் - சீரார்
மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து.
இநத் அந்தாதியின் உட்பொருளைக் கொள்க
2382. நான்முகனை நாரா யணன்டைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான்முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து. 1
ஆழியானே ஆதியந்தமானவன்
2383. 'தேருங்கால் தேவன் ஒருவனே,'என்றுரைப்பர்
ஆரு மறியார் அவன்பெருமை, - ஓரும்
பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்,
அருள்முடிவ தாழியான் பால். 2
நாராயணனை யானே நன்கறிந்தேன்
2384. பாலிற் கிடந்ததுவும் பண்டரங்கம் மேயதுவும்,
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், - ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்
அருபொருளை யானறிந்த வாறு? 3
எல்லாப் பொருள்களுமானவன் நாரணன்
2385. பாலிற் கிடந்ததுவும் பண்டரங்கம் மேயதுவும்,
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், - ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்
அருபொருளை யானறிந்த வாறு? 3
எல்லாப் பொருள்களுமானவன் நாரணன்
2385. ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, - வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து. 4
நான்மறையானவன் நரசிம்மனே
2386. தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்,
வகிர்த்த வளையுகிர்தோள் மாலே, - உகத்தில்
ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே,
அருநான்கு மானாய் அறி. 5
மாதவனைத் துதியாதார் ஈனர்கள்
2387. அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்,
சிறியார் சிவப்பட்டார் செப்பில், - வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்,
ஈனவரே யாதலால் இன்று. 6
நாரணனே!நான் உன்னையன்றியிலேன்
2388. இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே!
நீயென்னை யன்றி யிலை. 7
மனமே!மாலே நமக்குத் துணை
2389. இலைதுணைமற் றென்னெஞ்சே!ஈசனை வென்ற
சிலைகொண்ட செங்கண்மால் சேரா, - குலைகொண்ட
ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த,
கூரம்பன் அல்லால் குறை. 8
எல்லோரும் நாரணன் அடிகளையே வாழ்த்துவர்
2390. குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து,
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, - கறை கொண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்,
அண்டத்தான் சேவடியை ஆங்கு. 9
திருமாலின் மேனியை யானே காணவல்லவன்
2391. ஆங்கார வாரம் அதுகேட்டு, அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி, - யாங்காண
வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான்,
வல்லரே யல்லரே? வாழ்த்து. 10
திருமாலையே வாழ்த்தித் தொழுக
2392. வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவி,மகுடம்
தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், - சூழ்த்த
துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் தன்னை,
வழாவண்கை கூப்பி மதித்து. 11
ஆழியானையே மதி
2393. மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ
மதித்தாய் மதிகோள் விடுத்தாய், - மதித்தாய்
மடுக்கிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி
விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு. 12
வேதமுதற்பொருள் நாராயணனே
2394. வீடாக்கும் பெற்றி யறியாது, மெய்வருத்திக்
கூடாக்கி நின்றுண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும்
மெய்ப்பொருள்தான் வேத முதற்பொருள்தான், விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா யணன். 13
நரகத்தைத் தவிர்ப்பவன் நாராயணனே
2395. நாரா யணனென்னை யாளி, நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால்தன், - பேரான
பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு,
ஆசைப்பட் டாழ்வார் பலர். 14
தேவதேவனின் திருவடிகளையே வாழ்த்துக
2396. பலர்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்,
மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்,
நீர்க்கண்டன் கண்ட நிலை. 15
கண்ணனையே யான் எண்ணுவேன்
2397. நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
தலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய,
தேராழி யால்மறைத்தா ரால். 16
ஆழியானையே வணங்குக
2398. ஆல நிழற்கீழ் அறநெறியை, நால்வர்க்கு
மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன், - ஞாலம்
அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல்
வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு. 17
நரசிம்மனை ஏத்துவோரே வெற்றி பெறுவர்
2399. மாறாய தானவனை வள்ளுகிரால், மார்விரண்டு
கூறாகக் கீறிய கோளரியை, - வேறாக
ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்வரைச்
சார்த்தி யிருப்பார் தவம். 18
வைகுந்தம் தருபவன் ஆழியான்
2400. தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை,
அவம்செய்த ஆழியா யன்றே, - உவந்தெம்மைக்
காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்
ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் c. 19
தேவதேவனே எல்லாமாக இருப்பவன்
2401. நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்,
நீயே தவத்தேவ தேவனும், - நீயே
திருசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இவை. 20
நரசிம்மனின் அழகுத் தோற்றம் பிரமாதம்
2402. இவையா பிலவாய் திறந்தெரி கான்ற,
இவையா எரிவட்டக் கண்கள், - இவையா
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,
அரிபொங்கிக் காட்டும் அழகு? 21
நரசிம்மனின் தாள்களையே பணிமின்
2403. அழகியான் தானே அரியுருவன் தானே,
பழகியான் தாளே பணிமின், - குழவியாய்த்
தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே,
மீனா யுயிரளிக்கும் வித்து. 22
பக்தி உழவனுக்குத் திருமால் அருள்புரிவார்
2404. வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த
பத்தி யுழவன் பழம்புனத்து, - மொய்த்தெழுந்த
கார்மேக மன்ன கருமால் திருமேனி,
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து. 23
திருமாலையே புகழ்க
2405. நிகழ்ந்தாய்பால் பொன்பசுப்புக் கார்வண்ணம் நான்கும்,
இகழ்ந்தா யிருவரையும் வீயப், - புகழ்ந்தாய்
சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய்,
மனப்போர் முடிக்கும் வகை. 24
மண்ணளந்த பான்மை என்னே?
2406. வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும்
வகையால் வருவதொன் றுண்டே, - வகையால்
வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்,
வயிர வழக்கொழித்தாய் மற்று. 25
கடல் வண்ணா!நின்னையே தொழுவேன்
2407. மற்றுத் தொழுவா ரொருவரையும் யானின்மை,
கற்றைச் சடையான் கரிகண்டாய், - எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக்
கண்டுகொள் கிற்குமா று. 26
திருமாலை நினைக:அதுவே பெரும்பேறு
2408. மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள், - நீறாடி
தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை
யான்காண வல்லேற் கிது? 27
திருமாலுக்கு உகந்த இடம் என் மனம்
2409. இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,
இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, இதுவிலங்கை
தானொடுங்க வில்நுடங்கத் தண்தா ரிராவணனை,
ஊனொடுங்க எய்தான் உகப்பு. 28
ஒளியுருவனே திருமால்
2410. உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,
மகப்புருவன் தானே மதிக்கில், - மிகப்புருவம்
ஒன்றுக்கொண் றோசனையான் வீழ, ஒருகணையால்
அன்றிக்கொண் டெய்தான் அவன். 29
என் உள்ளத்தில் உறைபவன் திருமால்
2411. அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்
அவனென்னை எய்தாமல் காப்பான், - அவனென்ன
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,
வெள்ளத் தரவணையின் மேல். 30
நாராயணனையே ஏத்துக
2412. மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்,
தான்நா ரணனொழித்தான் தாரகையுள், - வானோர்
பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும்
கருமாயம் பேசில் கதை. 31
கண்ணன் திருவடிகளை அடைக
2413. கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள,
உதைப்பளவு போதுபோக் கின்றி, - வதைப்பொருள்தான்
வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ,
ஆய்ந்த குணத்தான் அடி. 32
கண்ணனின் திருவிளையாடல்கள்
2414. அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை
பிடித்தொசித்துப் பேய்முலைநஞ் சுண்டு, - வடிப்பவள
வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,
கோப்பின்னு மானான் குறிப்பு. 33
திருக்கோட்டியூர்க் கோமானையே ஏத்துவேன்
2415. குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,
குறிப்பெனக்கு நம்மை பயக்க, - வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,
தான்கடத்தும் தன்மையான் தாள். 34
அரவணையான் ஓய்வு கொள்கின்றானோ?
2416. தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான், - நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை? 35
பக்தர் உள்ளத்தில் உறைபவன் திருமால்
2417. நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத்தனா வான். 36
திருமாலே எல்லாவற்றையும் படைத்தவன்
2418. வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,
தானுலவு வெங்கதிரும் தண்மதியும், - மேனிலவு
கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்,
அண்டந் திருமால் அகைப்பு. 37
நீர்வண்ணனே நம்மை ஆட்டுவிப்பவன்
2419. அகைப்பில் மனிசரை யாறு சமயம்
புகைத்தான், பொருகடல்நீர் வண்ணன், - உகைக்குமேல்
எத்தேவர் வாலாட்டு மெவ்வாறு செய்கையும்,
அப்போ தொழியும் அழைப்பு. 38
திருவேங்கடவனையே அழைப்பேன்
2420. அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,
இழைப்பன் திருக்கூடல் கூட, - மழைப்பே
ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை
வெருவி யரவொடுங்கும் வெற்பு. 39
வேங்கடவன் கால்வலையில் சிக்கினேன்
2421. வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், - கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்,
கால்வலையில் பட்டிருந்தேன் காண். 40
என் உள்ளம் புகுந்தவன் வேங்கடவன்
2422. காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,
ஓண விழவில் ஒலியதிர, - பேணி
வருவேங் கடவா!என் னுள்ளம் புகுந்தாய்,
திருவேங் கடமதனைச் சென்று. 41
வினை கெடுப்பவன் வேங்கடவனே
2423. சென்று வணங்கமினோ சேணுயர் வேங்கடத்தை,
நின்று வினைகெடுக்கும் நீர்மையால், -என்றும்
கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும்,
அடிக்கமலம் இட்டேத்து மங்கு. 42
எல்லாத் தெய்வங்களும் வேங்கடவனையே தொழும்
2424. மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை,
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், - திங்கள்
சடையேற வைத்தானும் தாமரைமே லானும்,
குடையேறத் தாம்குவித்துக் கொண்டு. 43
எல்லோரும் வேங்கட மலைக்கே செல்லுங்கள்
2425. கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,
தண்ட அரக்கன் தலைதாளால் -பண்டெண்ணி,
போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,
போம்குமர ருள்ளீர் புரிந்து. 44
யாவரும் பூசிப்பதற்கு ஏற்றவன் வேங்கடவனே
2426. புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,
பரிந்து படுகாடு நிற்ப, -தெரிந்தெங்கும்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே,
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு. 45
வேங்கடவனை நினைத்தலே நன்று
2427. வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென்
றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, - எப்பாடும்
வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே,
நாடுவளைத் தாடுமேல் நன்று. 46
வேங்கடமே மணிவண்ணனின் ஊர்
2428. நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்,
பொன்மணியும் முத்தமும் பூமரமும், - பன்மணிநீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடு, முடைவேங் கடம். 47
வினை தீர்க்கும் மலை வேங்கடமே
2429. வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், - வேங்கடமே
தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை. 48
நாராயணன் நாமத்தையே சொல்க
2430. மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலையாமை தானொருகை பற்றி, - அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திருநாமம்,
கூறுவதே யாவர்க்கும் கூற்று. 49
கண்ணனை எண்ணுவதே உய்யும் வழி
2431. கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா,தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன், - ஆற்றங்
கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன்
உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு. 50
கண்ணனே!நின்னையே நினைந்து உயர்ந்தேன்
2432. எனக்காவா ராரொருவ ரே,எம் பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால், - புனக்காயா
வண்ணனே!உன்னைப் பிறரறியார், என்மதிக்கு
விண்ணெல்லா முண்டோ விலை? 51
கண்ணபிரானையே ஏத்துக
2433. விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர்,
தலைக்காட் பலிதிரிவர் தக்கோர் - முலைக்கால்
விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார்,
சுடமுண்டார் கல்லா தவர். 52
காகுத்தனே என் தெய்வம்
2434. கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன்
அல்லா லொருதெய்வம் யானிலேன், - பொல்லாத
தேவரை தேவரல் லாரை, திருவில்லாத்
தேவரைத் தேறேல்மின் தேவு. 53
எல்லாத் தெய்வங்களுமாக இருப்பவன் திருமாலே
2435. தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்
மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், - யாவராய்
நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,
கற்கின்ற தெல்லாம் கடை. 54
திருமாலே!நின் திருவடிப் பெருமைதான் என்னே!
2436. கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்,
இடைநின்ற இன்பத்த ராவர், - புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே,நின்னடியை
யாரோத வல்லா ரவர்? 55
திருமாலுக்கு இணையே இல்லை
2437. அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,
எவரு மெதிரில்லை கண்டீர், - உவரிக்
கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்
குடனின்று தோற்றா னொருங்கு. 56
நல்வினை தீவினைகளாக இருப்பவன் கண்ணனே
2438. ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்,
பெருங்குருந்தம் சாய்த்தவனே பேசில், - மருங்கிருந்த
வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம்
ஆனவர்தா மல்லாத தென்? 57
திருமாலிடமே யான் அன்பு காட்டினேன்
2439. என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,
மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், - என்னெஞ்ச
யோனை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்
தாயானுக் காக்கினேன் அன்பு. 58
கேசவா!நான் உன் அடிமை:ஆண்டுகொள்
2440. அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை
கேள்வா!கிளரொளியென் கேசவனே, கேடின்றி
ஆள்வாய்க் கடியேன்நான் ஆள். 59
அரங்கா!உன்னையே நான் விரும்புவேன்
2441. 'ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள்'என்று,நின்
தாட்பார்த் துழிதருவேன் தன்மையை, - கேட்பார்க்
கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம். 60
மதுசூதனனைச் சரணடை:துன்பம் வராது
2442. மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,
தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில், - எனக்கேதான்
இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,
சென்றொன்றி நின்ற திரு. 61
திருத்துழாய் சூடிப் பிறப்பை அறுமின்
2443. திருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,
கருநின்ற கல்லார்க் குரைப்பர், - திருவிருந்த
மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,
தார்தன்னைச் சூடித் தரித்து. 62
திருமாலைப் பூசித்தே பொழுது போக்குக
2444. தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,
விரித்துரைத்த வெந்நாகத் துன்னை, - தெரித்தெழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்,
பூசித்தும் போக்கினேன் போது. 63
நாரணனையே பூசித்துத் துதியுங்கள்
2445. போதான் இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்
காதானை யாதிப் பெருமானை, - நாதானை
நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்
சொல்லானை, சொல்லுவதே சூது. 64
மாதவனையே எண்ணுக:வைகுந்தம் கிடைக்கும்
2446. சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை, - யாதானும்
வல்லவா சிந்தித் திருப்பேற்கு, வைகுந்தத்
தில்லையோ சொல்லி ரிடம்? 65
நெடுமாலுக்கு இடம் என் நெஞ்சம்
2447. இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு
படநா கணைநெடிய மாற்கு, - திடமாக
வையேன் மதிசூடி தன்னோடு, அயனைநான்
வையேனாட் செய்யேன் வலம். 66
எது நேர்ந்தாலும் ஏத்துக நாரணனை
2448. வலமாக மாட்டாமை தானாக, வைகல்
குலமாக குற்றம்தா னாக, - நலமாக
நாரணனை நம்பதியை ஞானப் பெருமானை,
சீரணனை யேத்தும் திறம். 67
நாரணன் பக்தர்க்கு யமபயம் இல்லை
2449. 'திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்,
மறந்தும் புறந்தொழா மாந்தர், - இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள்,'என்றான், நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு. 68
வேதப் பொருளாக இருப்பவன் மாதவனே
2450. செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும் புவியதுவே கண்டீர், - கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான். 69
வராகனை யான் நன்கு அறிவேன்
2451. தானொருவ னாகித் தரணி யிடந்தெடுத்து,
ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும், - யானொருவன்
இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்
சென்றாங் கடிப்படுத்த சேய். 70
பகவத்கீதை கற்க:மெய்ஞ்ஞானம் பெறலாம்
2452. சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற - மாயன்,அன்
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில். 71
நாரணனே நல்லறமும் வேதமும் தவழும்
2453. 'இல்லறம் இல்லேல் துறவறமில்'என்னும்,
சொல்லற மல்லனவும் சொல்லல்ல, - நல்லறம்
ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே
யாவதீ கன்றென்பா ரார்? 72
ஆழியான் பெருமையை அறிவார் யார்?
2454. ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த,
பேராழி யான்றன் பெருமையை, - கார்செறிந்த
கண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன்வைத்த
பண்டைத்தா,னத்தின் பதி. 73
மாயவனையே என் நாக்கு ஏத்தும்
2455. பதிப்பகைஞர்க் காற்றாது பாய்திரைநீர்ப் பாழி,
மதித்தடைந்த வாளரவந் தன்னை, - மதித்தவன்றன்
வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,
அல்லாதொன் றேத்தாதென் நா. 74
வைகுந்தச் செல்வனையே நான் பாடுவேன்
2456. நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் - பூக்கொண்டு
வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்
செல்வனார் வேடிமேல் பாட்டு. 75
சாஸ்திரங்களுக்குத் தலைவன் திருமால்
2457. பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்
ஈட்டிய தீயும் இருவிசும்பும், - கேட்ட
மனுவும் சுருதி மறைநான்கும், மாயன்
றனமாயை யிற்பட்ட தற்பு. 76
கடல் வண்ணன் என் தீவினைகளைப் போக்கினான்
2458. தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், - எற்கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,
எவ்வினையும் மாயுமால் கண்டு. 77
நாரணன் நாமமே கேட்டிரு
2459. கண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல்
கொண்ட தவத்தாற்கு உமையுணர்த்த, - வண்டல்பும்
தாரலங்கல் நீண்முடியான் றன்பெயரே கேட்டிருந்து, அங்
காரலங்க லானமையா லாய்ந்து. 78
ஆதிப் பெருமானை நினைக:வைகுந்தம் காணலாம்
2460. ஆய்ந்துகொண் டாதிப் பெருமானை, அன்பினால்
வாய்ந்த மனத்திருந்த வல்லார்கள், - ஏய்ந்ததம்
மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து. 79
கண்ணன் லீலைகளையே கேளுங்கள்
2461. விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,
கரந்துலகம் காத்தளித்த கண்ணன், - பரந்துலகம்
பாடின ஆடின கேட்டு, படுநரகம்
வீடின வாசற் கதவு. 80
எனக்குத் தமிழ் கற்பித்தவன் கண்ணன்
2462. கதவு மனமென்றும் காணலா மென்றும்,
குதையும் வினையாவி தீர்ந்தேன், - விதையாக
நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய்,
கற்றமொழி யாகிக் கலந்து. 81
கண்ணன் என் மனத்தில் கலந்துவிட்டான்
2463. கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை,
நலந்தானு மீதொப்ப?, - அலர்ந்தலர்கள்
இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள்
விட்டேத்த மாட்டாத வேந்து. 82
எல்லோர்க்கும் இறைவன் திருமால்தான்
2464. வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்,
மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், - சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்,
பின்னால்தான் செய்யும் பிதிர். 83
கண்ணனைத் தொழுதலே தொழில்
2465. பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,
எதிர்வன் அவனெனக்கு நேரான், - அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில். 84
இராமபிரான் என் மனத்தில் உள்ளான்
2466. தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த,
பொழுதெனக்கு மற்றதுவே போதும், - சுழிசினத்த
வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த,
வில்லாளன் நெஞ்சத் துளன். 85
உள்ளுவார் உள்ளத்துள்ளவன் திருமால்
2467. உளன்கண்டாய் நன்னெஞ்சே!உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், - துளன்கண்டாய்
தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,
என்னொப்பார்க் கீச னிமை. 86
எல்லாவற்றையும் உண்டவன் கண்ணன்
2468. இமயப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,
சமய விருந்துண்டார் காப்பார், - சமயங்கள்
கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு,
உண்டா னுலகோ டுயிர். 87
துயர் தீர்ப்பானைப் பாடுக:அதுவே வாழ்வு
2469. உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,
அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, - செயல்தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது. 88
பாற்கடலான் பாதமே நினைக
2470. பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவாரை,
கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து,
விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு. 89
விண்ணாள வேண்டுமா? வேங்கடவனைப் பூசியுங்கள்
2471. வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்
பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், - மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே
தாழ்வா யிருப்பார் தமர். 90
தேவர்கள் யாவரும் திருமாலையே பூசிப்பர்
2472. தமராவார் யாவர்க்கும் தாமரைமே லாற்கும்,
அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும், - அமரர்கள்
தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன்
தாள்தா மரையடைவோ மென்று. 91
சிரீதரனுக்கே நான் அடிமை
2473. என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து,
நின்று மிருந்தும் நெடுமாலை - என்றும்
திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்,
கருவிருந்த நாள்முதலாக் காப்பு. 92
கண்ணா!நின்னை யாரும் மறக்கமாட்டார்
2474. காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்,
ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், - ஆக்கை
கொடுத்தளித்த கோனே!குணப்பரனே, உன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம். 93
அரவணையாய்!அடியேனுக்கு அருள்
2475. மெய்தெளிந்தா ரென்செய்யார்? வேறானார் நீறாக,
கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, - பைதெளிந்த
பாம்பின் அணையாய்!அருளாய் அடியேற்கு,
வேம்பும் கறியாகும் ஏன்று. 94
திருமாலே!நின் அடிமை நான்:வைகுந்தம் அளி
2476. ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை,
ஆன்றேன் அமரர்க் கமராமை, - ஆன்றேன்
கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை
இடநாடு காண இனி. 95
நாரணனே ஆதி காரணன்:எனக்குத் தெரியும்
2477. இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்,
இனியறிந்தேன் எம்பெருமான்!உன்னை, - இனியறிந்தேன்
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான். 96
தசகம் :நான்முகனை வாழ்த்துக இவையா மேல் காணல் எனக்கு மனக்கேதம் சேயன் கதவு தமர் - பொய்ந்நின்ற.
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்