ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாந்திருவந்தாதி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பூதத்தாழ்வார் அருளிச்செய்த

இரண்டாந்திருவந்தாதி

முதலாழ்வார்களில் நடுநாயகமாக விளங்குகிறவர் பூதத்தாழ்வார். இவர் மாமல்லபுரம் என்ற திருக்கடல்மல்லையில் மாதவிப் பந்தலில் உள்ள ஒரு குருக்கத்தி மலரில் தோன்றினார்;எம்பெருமானின் குணங்களைச் சொல்லிக்கொண்டே ஸத்தைப் பெற்றவர். இவரது நட்சத்திரம் ஐப்பசி அவிட்டம். இவர் அன்பைத் தகளியாகவும், ஆர்வத்தை நெய்யாகவும், பகவானைப் பற்றிய சிந்தையை இடுதிரியாகவும் கொண்டு ஞான விளக்கு ஏற்றியவர். இவரும் ஒரு யோகியாக விளங்கினார்.

தனியன்

திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்தது

நேரிசை வெண்பா

பூதத்தாழ்வார் திருவடிகளை வணங்கினேன்

என் பிறவி தீர இறைஞ்சினேன் இன்னமுதா

அன்பே தகளி யளித்தானை, - நன்புகழ்சேர்

சீதத்தார் முத்துகள் சேரும் கடல்மல்லைப்

பூதத்தார் பொன்னங் கழல்.

ஞான விளக்கை நான் ஏற்றினேன்

2182. அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,

இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி

ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான். 1

நாரணன் பேர் சொன்னால் தேவராகலாம்

2183. ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,

தானத்தால் மற்றவன்பேர் சாற்றினால், - வானத்

தணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நங்கள்

பணியமரர் கோமான் பரிசு? 2

பரமன் பாதம் பணிவோர் புகழ் பெறுவர்

2184. பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,

புரிவார் புகழ்பெறுவர் போலாம், - புரிவார்கள்

தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து

நல்லமரர் கோமான் நகர். 3 மலர்கொண்டு பணிந்தேன்

2185. நகரிழைத்து நித்திலத்து நாண்மலர்கொண்டு, ஆங்கே

திகழும் அணிவயிரம் சேர்த்து, - நிகரில்லாப்

பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,

அங்கம்வலம் கொண்டான் அடி. 4

திருமாலே!நின்னடி எங்குள்ளது?

2186. அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்

அடிமூன் றிரந்தவனி கொண்டாய்,- படிநின்ற

நீரோத மேனி நெடுமாலே நின்னடியை

ஆரோத வல்லார் அறிந்து? 5

ஐம்புலனடக்கி அருச்சித்தால் அவனடி காணலாம்

2187. அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம்

செறிந்த மனத்தராய்ச் செவ்வே, - அறிந்தவன்றன்

பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே,

காரோத வண்ணன் கழல். 6

ஆழியான் மலரடியை நினை

2188. கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்

அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, - தழலெடுத்த

போராழி ஏந்தினான் பொன்மலர்ச் சேவடியை,

ஒராழி நெஞ்சே!உகந்து. 7

பேய்ச்சியிடம் பாலுண்ட பான்மை என்னே!

2189. உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை

அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, - உகந்து

முலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும்

அலைபண்பா லானமையால் அன்று. 8

யசோதைக்கு என்ன கைம்மாறு உண்டு?

2190. அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி,

நின்று முலைதந்த இந்நீர்மைக்கு, - அன்று

வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்,

பெருமுறையா லெய்துமோ பேர்த்து? 9

உயிர்க் காவலன் நீயே

2191. பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து

காத்தனை பல்லுயிரும் காவலனே, - ஏத்திய

நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்

காவடியேன் பட்ட கடை. 10

நெடுமாலே!நின்னை வணங்கினால் பேரின்பம் கிட்டும்

2192. கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்

இடைநின்ற இன்பத்த ராவர், - புடைநின்ற

நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை

ஆரோத வல்லார் அவர்? 11

அரவணையான் பாதமே ஏத்து

2193. அவரிவரென் றில்லை அரவணையான் பாதம்,

எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், - பலரும்

செழுங்கதிரோ னொண்மலரோன் கண்ணுதலோன் அன்றே

தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து? 12 கஜேந்திரன் பேருள் பெற்றானே!

2194. தொடரெடுத்த மால்யானை சூழ்கயம்புக் கஞ்சிப்

படரெடுத்த பைங்கமலம் கொண்டு,அன் - றிடரடுக்க

ஆழியான் பாதம் பணிந்தன்றே வானவர்கோன்

பாழிதா னெய்திற்றுப் பண்டு? 13

மக்களே!பரமனை வணங்கிப் பரிசுத்தம் அடையுங்கள்

2195. பண்டிப் பெரும்பதியை யாக்கி, பழிபாவம்

கொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, - எண்டிசையும்

பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்,

தீர்த்தகரர் ஆமின் திரிந்து. 14

தேரோட்டி, மானைத் துரத்தினான்:ஓய்வு தேவை தானே!

2196. திரிந்தது வெஞ்சமத்துத் தேர்தடவி, அன்று

பிரிந்தது சீதையைமான் பின்போய், - புரிந்ததுவும்

கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்

தண்பள்ளி கொள்வான் றனக்கு. 15

மனத்தில் திருமாலை வை

2197. தனக்கடிமை பட்டது தானறியா னேலும்

மனத்தடையை வைப்பதாம் மாலை, - வனத்திடரை

ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,

மாரியார் பெய்கிற்பார் மற்று? 16

குறைதீர்ப்பவன் திருமால்

2198. மற்றா ரியலாவார் வானவர்கோன் மாமலரோன்,

சுற்றும் வணங்கும் தொழிலானை, - ஒற்றைப்

பிறையிருந்த செஞ்சடையான் பின்சென்று, மாலைக்

குறையிரந்து தான்முடித்தான் கொண்டு. 17

தாமரைக் கண் மால் செய்த செயல்கள்

2199. கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,

ஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது - உண்டதுவும்

தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,

வான்கடந்தான் செய்த வழக்கு. 18

சகடாசுரனை வென்றாயே!

2200. வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,

வழக்கென்று நீமதிக்க வேண்டா, - குழக்கன்று

தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,

பார்விளங்கச் செய்தாய் பழி. 19

நாரணன் நாமங்களை ஏத்தி வாழ்வு பெறுக

2201. பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,

வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, - வழுவின்றி

நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,

காரணங்கள் தாமுடையார் தாம். 20

வாமனன் தாள் சேர்ந்தால் நரகம் இல்லை

2202. தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே, தாமரையின்

பூவுளதே யேத்தும் பொழுதுண்டே, - வாமன்

திருமருவு தாள்மருவு சென்னியரே, செவ்வே

அருநரகம் சேர்வ தரிது. 21

முயன்றால் பரமன் அருள் கிட்டும்

2203. அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,

பெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர்

வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,

தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து? 22

ஞாலம் அளந்தவன் யாவரையும் வாழ்விப்பான்

2204. தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்,

வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும், - தாழ்ந்த

விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய், ஞாலம்

அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன். 23

பஞ்ச பூதங்களாகவும் இருப்பவன் பரமனே

2205. அவன் கண்டாய் நன்னெஞ்சே!ஆரருளும் கேடும்,

அவன் கண்டா யைம்புலனாய் நின்றான், - அவன்காண்டாய்

காற்றுத்தீ நீர்வான் கருவரைமண் காரோத,

சீற்றத்தீ யாவானும் சென்று. 24

இராமபிரான் நின்ற இடம் வேங்கடமே

2206. சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்,

கொன்ற திராவணனைக் கூறுங்கால் - நின்றதுவும்

வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்

வாயோங்கு தொல்புகழான் வந்து. 25

தேவர்கட்கும் வாழ்வளிப்பவன் பரமனே

2207. வந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம்,

ஐந்தும் அகத்தடக்கி யார்வமாய், - உந்திப்

படியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த,

படியமரர் வாழும் பதி. 26

மனம் திருமாலையே தேடியோட வேண்டும்

2208. பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,

மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி - கதிமிகுத்தங்

கோல்தேடி யோடும் கொழுந்ததே போன்றதே,

மால்தேடி யோடும் மனம். 27

கண்ணனே வேங்கடத்திலும் அரங்கத்திலும் உள்ளான்

2209. மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலால், மற்றும்

நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்

தேவாதி தேவ னெனப்படுவான்,முன்னொருநாள்

மாவாய் பிளந்த மகன். 28

இலங்கையை அழித்தவனே கண்ணன்

2210. மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,

அகனார வுண்பனென் றுண்டு, - மகனைத்தாய்

தேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை

நீறாக எய்தழித்தாய் c. 29

திருமாலின் திருவளையாடல்கள்

2211. நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே,

நீயன் றுலகிடந்தா யென்பரால், - நீயன்று

காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை,

பேரோத மேனிப் பிரான்! 30

அருச்சனை செய்தால் அரியின் உருவைக் காணலாம்

2212. பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,

குராநல் செழும்போது கொண்டு, - வராகத்

தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,

மணியுருவம் காண்பார் மகிழ்ந்து. 31

திருமாலே!நின்னைப் போற்றி மகிழ்வுற்றேன்

2213. மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்

மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, - மகிழ்ந்த

தழலாழி சங்க மவைபாடி யாடும்,

தொழிலாகம் சூழ்ந்து துணிந்து. 32

வேங்கடவனையே நான் பணிந்தேன்

2214. துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்

அணிந்தவன்பே ருள்ளத்துப் பல்கால், - பணிந்ததுவும்

வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,

வாய்திறங்கள் சொல்லும் வகை. 33

என் பாக்கியத்தால் உனக்கு அடிமைப் பட்டேன்

2215. வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,

புகையால் நறுமலரால் முன்னே, - மகிவாய்ந்த

அன்பாக்கி யேத்தி யடிமைப்பட் டேனுனக்கு,

என்பாக்கி யத்தால் இனி. 34

நின் பெருமையை விரும்பினால் க்ஷேமம் உண்டாகும்

2216. இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,

இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், - இனிதென்று

காமநீர் வேளாது நின்பெருமை வேட்பரேல்,

சேமநீ ராகும் சிறிது. 35

மனமே!மண்ணுண்டானையே நினை

2217. சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,

அறியாரும் தாமறியா ராவர், - அறியாமை

மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,

எண்கொண்டென் நெஞ்சே!இரு. 36

பாவங்கள் நீங்கும் வழி நின்னைப் பணிதலே

2218. இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,

திருந்து திசைமுகனைத் தந்தாய், - பொருந்தியநின்

பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்

ஏதங்க ளெல்லா மெமக்கு. 37

எப்பொழுதும் மாதவன் பேர் ஓது

2219. எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே,

தமக்கென்றும் சார்வ மறிந்து, - நமக்கென்றும்

மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர்

ஓதுவதே நாவினா லோத்து. 38

வேதம் ஓதுக:இல்லையேல் மாதவன் பேர் ஓதுக

2220. ஒத்தின் பொருள்முடிவும் இத்தனையே, உத்தமன்பேர்

ஏத்தும் திறமறிமி னேழைகாள், - ஒத்ததனை

வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்

சொல்லுவதே ஒத்தின் சுருக்கு. 39

விரைவில் திருமாலை நினையுங்கள்

2221. சுருக்காக வாங்கிச் சுலாவிநின்று, ஐயார்

நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், - திருப்பொலிந்த

ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத

போகத்தா லில்லை பொருள். 40

மணிவண்ணன் பாதங்களை நினை

2222. பொருளால் அமருலகம் புக்கியல லாகாது,

அருளா லறமருளு மன்றே, - அருளாலே

மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,

நீமறவேல் நெஞ்சே!நினை. 41

திருமாலையே யான் என்றும் நினைப்பேன்

2223. நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண,

நினைப்பார் பிறப்பொன்றும் நேரார், - மனைப்பால்

பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்,

துறந்தார் தொழுதாரத் தோள். 42

வீராதி வீரனும் முடிவில் பரமனடியில் வீழ்வான்

2224. தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,

தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான் - தாளிரண்டும்,

ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே,என்

சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு? 43

மாதவன் பேரையே ஓதி நினை

2225. சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்,

மறந்தாரை மானிடமா வையேன், - அறம்தாங்கும்

மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்

ஓதுவதே நாவினா லுள்ளு. 44

யாவரும் வேங்கடவனையே வணங்குவர்

2226. உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று,

தளர்தல் அதனருகும் சாரார், - அளவரிய

வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்

பாதத்தான் பாதம் பயின்று. 45

திருமால் எழுந்தருளியுள்ள திருத்தலங்கள்

2227. பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்

பயின்றதுவும் வேங்கடமே பன்னாள், - பயின்ற

தணிதிகழும் சோலை யணிநீர் மலையே

மணிதிகழும் வண்தடக்கை மால். 46

அரியின் பாதம் தொழுது எழுமின்

2228. மாலை யரியுருவன் பாத மலரணிந்து,

காலை தொழுதெழுமின் கைகோலி, - ஞாலம்

அளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்,

உளங்கிடந்த வாறறா லுணர்ந்து. 47

திருமாலிருஞ் சோலையைத் திருமால் விரும்பினான்

2229. உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் cF,

மணந்தாய் மலர்மகள்தோள் மாலே!- மணந்தாய் போய்

வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,

மாயிருஞ் சோலை மலை. 48

நெஞ்சே!கண்ணனையே அழை

2230. மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,

குலைசூழ் குரைகடல்க ளேழும், - முலைசூழ்ந்த

நஞ்சுரத்துப் பெண்ணை நவின் றுண்ட நாவனென்று,

அஞ்சாதென் னெஞ்சே!அழை. 49

திருமாலே ஆயவனும் யாதவனும்

2231. அழைப்பன் திருமாலை ஆங்கர்கள் சொன்ன,

பிழைப்பில் பெரும்பெயரே பேசி, - 'இழைப்பரிய

ஆயவனே!யாதவனே!'என்றவனை யார்முகப்பும்,

மாயவனே என்று மதித்து. 50

ஆழிவண்ணன் பாதத்தை நினை

2232. மதிக்கண்டாய் நெஞ்சே!மணிவண்ணன் பாதம்,

மதிக்கண்டாய் மற்றவன்பேர் தன்னை, - மதிக்கண்டாய்

பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த

நீராழி வண்ணன் நிறம். 51

திருமாலை உள்ளவாறு அறிவார் யார்?

2233. நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன்,

அறம்பெரிய னார தறிவார்? - மறம்புரிந்த

வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து,

நீளிருக்கைக் குய்த்தான் நெறி. 52

நான் விரும்புவது திருவேங்கடமே

2234. நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து,

அறியா திளங்கிரியென் றெண்ணி, - பிறியாது

பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும்,

வேங்கடமே யாம்விரும்பும் வெற்பு. 53

திருமாலை உள்ளத்தே இருத்தினேன்

2235. வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்

நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல், - நிற்பென்

றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன், 'வெள்ளத்

திளங்கோயில் கைவிடேல்'என்று. 54

ஆழியானை என்றும் மறந்தறியேன்

2236. என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,

நின்று நினைப்பொழியா நீர்மையால் - வென்றி

அடலாழி கொண்ட அறிவனே, இன்பக்

கடலாழி நீயருளிக் காண். 55

திருமகள் திருமாலை அடையாளம் காட்டுவாள்

2237. காணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால்,

நாணப் படுமென்றால் நாணுமே? - பேணிக்

கருமாலைப் பொன்மேனி காட்டாமுன் காட்டும்,

திருமாலை நங்கள் திரு. 56

திருமகள் மணாளனை வாழ்த்துங்கள்

2238. திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்,

கருமம் கடைப்பிடிமின் கண்டீர் - உரிமையால்

ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்,

நாற்றிசையும் கேட்டீரே நாம்? 57

ஆழியானையே பாடு

2239. நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து,

ஒம்பி யிருந்தெம்மை ஓதுவித்து - வேம்பின்

பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று,

அருள்நீர்மை தந்த அருள். 58

திருமாலை மனமார நோக்கு:அஞ்ஞானம் நீங்கும்

2240. அருள்புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,

பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது - இருள்திரிந்து

நோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம்,

ஒக்கினே னென்னையுமங் கோர்ந்து. 59

ஒளியுருவமே நாரணன் உருவம்

2241. ஒருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,

ஈருருவன் என்பர் இருநிலத்தோர், - ஒருருவம்

ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,

நீதியால் மண்காப்பார் நின்று. 60

திரிவிக்கிரமனைத் துதித்தால் பெரும்பேறு கிட்டும்

2242. நின்றதோர் பாதம் நிலம்புதைப்ப, நீண்டதோள்

சென்றளந்த தென்பர் திசையெல்லாம், - அன்று

கருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப்

பிரமாணித் தார்பெற்ற பேறு. 61

ஆயர்களின் ஏற்றையே வணங்கினேன்

2243. பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்,

மாறென்று சொல்லி வணங்கினேன், - ஏறின்

பெருத்தெருத்தம் கோடொசியப் பெண்நசையின் பின்போய்,

எருத்திருந்த நல்லாயர் ஏறு. 62

ஏழு எருதுகளை அடர்த்தவனே யாவர்க்கும் அருள் செய்பவன்

2244. ஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து

ஏறேறிப் பட்ட இடுசாபம் - பாறேறி

உண்டதலை வாய்நிறையக் கோட்டங்கை ஒண்குருதி,

கண்டபொருள் சொல்லின் கதை. 63

கண்ணா!உன்னைப் பாட எனக்கு அருள் செய்

2245. கதையும் பெரும்பொருளும் கண்ணா!நின் பேரே,

இதய மிருந்தவையே ஏத்தில், - கதையும்

திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்,

பருமொழியால் காணப் பணி. 64

கண்ணா!நின் சேவடியில் பணிந்தேன்

2246. பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்

அணிந்தேனுன் சேவடிமே லன்பாய், - துணிந்தேன்

புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே

இருந்தேத்தி வாழும் இது. 65

நாரணன் பேர் ஓது:நரகம் இல்லை

2247. இதுகண்டாய் நன்னெஞ்சே!இப்பிறவி யாவது,

இதுகண்டா யெல்லாம்நா முற்றது, - இதுகண்டாய்

நாரணன்பே ரோதி நரகத் தருகணையா,

காரணமும் வல்லையேல் காண். 66

கனவில் திருமேனி கண்டேன்:வினைகள் ஓடிவிட்டன.

2248. கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்

கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்

உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து,பின்னும்

மறுநோய் செறுவான் வலி. 67

கண்ணனே பாற்கடல் கடைந்த பரமன்

2249. வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள,

வலிமிக்க வாள்வரைமத் தாக, வலிமிக்க

வாணகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான்,

கோணாகம் கொம்பொசித்த கோ. 68

யாராக இருந்தாலும் திருமாலையே வணங்குவர்

2250. கோவாகி மாநிலம் காத்து,நங் கண்முகப்பே

மாவேகிச் செல்கின்ற மன்னவரும் - பூவேகும்

செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும்,

தண்கமல மேய்ந்தார் தமர். 69

எந்தை எழுந்தருளியுள்ள இடங்கள்

2251. தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,

தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்

மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,

ஏவல்ல எந்தைக் கிடம். 70

திரிவிக்கிரமாவதாரத்தின் காட்சி

2252. இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான்

றடங்கா ரொடுங்குவித்த தாழி, - விடங்காலும்

தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்,

பூவா ரடிநிமிர்த்த போது. 71

திருப்பதியில் வானரங்களும் வேங்கடவனையே பூசிக்கும்

2253. போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த

போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம் - போது

மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல,

அணிவேங் கடவன்பே ராய்ந்து. 72

மாலுக்கு அடிமையாகவிரும்பி அருச்சிப்பேன்

2254. ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்,

வாய்ந்த மலர்தூவி வைகலும், - ஏய்ந்த

பிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான்,

இறைக்காட் படத்துணிந்த யான். 73

தவம் செய்தே இந்தப் பாமாலை பாடினேன்

2255. யானே தவம்செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,

யானே தவமுடையேன் எம்பெருமான், - யானே

இருந்தமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,

பெருந்தமிழன் நல்லேன் பெரிது. 74

எம்பெருமானின் இருப்பிடம் திருவேங்கடமலை

2256. பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்று,

இருக ணிளமூங்கில் வாங்கி, - அருகிருந்த

தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்,

வான்கலந்த வண்ணன் வரை. 75

அறிவன் அடிகளை ஓதிப்பணிக

2257. வரைச்சந்த னக்குழம்பும் வான்கலனும் பட்டும்,

விரைப்பொலிந்த வெண்மல லிகையும் - நிரைத்துக் கொண்டு

ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே

ஓதிப் பணிவ துறும். 76

உத்தமண் பெயரை ஓராயிரம் முறை நாள்தோறும் உரை

2258. உறுங்கண்டாய் நன்னெஞ்சே!உத்தமன்நற் பாதம்,

உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால், - உறுங்கண்டாய்,

ஏத்திப் பணிந்தவன்பேர் ஈரைஞ்ஞூ றெப்பொழுதும்,

சாற்றி யுரைத்தல் தவம். 77

எல்லா மூர்த்திகளும் திருமாலையே வணங்குவர்

2259. தவம்செய்து நான்முகனே பெற்றான், தரணி

நிவந்தளப்ப நீட்டியபொற் பாதம், - சிவந்ததன்

கையனைத்து மாரக் கழுவினான், கங்கைநீர்

பெய்தனைத்துப் பேர்மொழிந்து பின். 78

திருமாலின் செயல்கள் நிகரற்றவை

2260. பின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள்

முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் - சொல்நின்ற

தோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவளைந்த

நீணிலந்தான் அத்தனைக்கும் நேர். 79

திருமாலே!நின் சேவடிமேல் அன்பு கொண்டேன்

2261. நேர்ந்தேன் அடிமை நினைந்தேன தொண்கமலம்,

ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய், - ஆர்ந்த

அடிக்கோலம் கண்டவர்க் கென்கொலோ, முன்னைப்

படிக்கோலம் கண்ட பகல்? 80

சோதிவடிவு கொண்டவன் திருமதால்

2262. பசற்கண்டேன் நாரணனைக் கண்டேன், கனவில்

மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே - மிகக்கண்டேன்

ஊன்திகழும் நேமி ஒளிதிகழும்சேவடியான்,

வான்திகழும் சோதி வடிவு. 81

மலர்மங்கை திருமாலை விட்டுப்பிரியமாட்டாள்

2263. வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்

படிக்கோலம் கண்டகலாள் பன்னாள், - அடிக்கோலி

ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,

கோலத்தா லில்லை குறை. 82

பரமன் அருளையே நான் எதிர்பார்த்திருந்தேன்

2264. குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,

மறையாங் கெனவுரைத்த மாலை, - இறையேனும்

ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்,

மாயன்கண் சென்ற வரம். 83

நரசிம்மன் திருவடிகளே உலகத்தில் அமிழ்தம்

2265. வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,

உரம்கருதி மூர்க்கத் தவனை, - நரம்கலந்த

சிங்கமாய்க் கீண்ட திருவன் அடியிணையே,

அங்கண்மா ஞாலத் தமுது. 84

ஆழியானையே நான் ஏத்தித் தொழுதேன்

2266. அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,

அமுதன்று கொண்டுகந்தான் என்றும், - அமுதன்ன

சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,

நன்மாலை யேத்தி நவின்று. 85

மேக மணிவண்ணனை நான் எங்ஙனம் காண்பேன்?

2267. நவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே

பயின்றதனால் பெற்றபயன் என்கொல், - பயின்றார்தம்

மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,

எத்தவத்தால் காண்பன்கொல் இன்று? 86

திருக்கோட்டியூர்ப் பெருமானைத் தொழுதேன்

2268. இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்

சென்றாங் களந்த திருவடியை, - அன்று

கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டேன்,

திருக்கோட்டி எந்தை திறம். 87

அரங்கனை வழிபடுவார்க்கே அமரருலகு கிடைக்கும்

2269. திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,

திறம்பா வருசென்றார்க் கல்லால், - திறம்பாச்

செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்

கடிநகர வாசற் கதவு. 88

வாமனனாய் மண் கொண்ட பான்மை என்னே?

2270. கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,

அதவிப்போர் யானை ஒசித்து, - பதவியாய்ப்

பாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை,

மாணியாய்க் கொண்டிலையே மண். 89

எம்பெருமானைத் தொழுவதே பெரும் பேறு

2271. மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,

விண்ணுலகம் தன்னகத்து மேவேனே, - நண்ணித்

திருமாலைச் செங்க ணெடியானை, எங்கள்

பெருமானைக் கைதொழுத பின். 90

உலகளந்தவன் அடிகளையே வணங்குக

2272. பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்,

முன்னால் வணங்க முயல்மினோ, - பன்னூல்

அளந்தானைக் கார்க்கட ல்சூழ் ஞாலத்தை, எல்லாம்

அளந்தா னவன்சே வடி. 91

நெடியானின் திருநாமம் ஏத்துக

2273. அடியால்முன் கஞ்சனைச் செற்று,அமர ரேத்தும்

படியான் கொடிமேல்புள் கொண்டான், - நெடியான்றன்

நாமமே ஏத்துமின்க ளேத்தினால், தாம்வேண்டும்

காமமே காட்டும் கடிது. 92

கண்ணனை ஏத்துக:நரகம் இல்லை

2274. கடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை,

கொடிதென் றதுகூடா முன்னம், - வடிசங்கம்

கொண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை, கொங்கைநஞ்

சுண்டானை ஏத்துமினோ உற்று. 93

பாடகத்தானையே ஏத்திப் தொழுமின்

2275. உற்று வணங்கித் தொழுமின், உலகேழும்

முற்றும் விழுங்கும் முகில்வண்ணம், - பற்றிப்

பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்

இருந்தானை, ஏத்துமென் நெஞ்சு. 94

அந்தியூரான் என் உள்ளத்தில் உள்ளான்

2276. என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை

வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன், - முன்னம்சேய்

ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும்

ஆழியான் அத்தியூ ரான். 95

அந்தியூரானே யாவர்க்கும் தலைவன்

2277. அத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின்

துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ

மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும்,

இறையாவான் எங்கள் பிரான். 96

தேவர்கட்கெல்லாம் தலைவன் நெடுமால்

2278. எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,

செங்க ணெடுமால் திருமார்பா, - பொங்கு

படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்,

குடமூக்கில் கோயிலாக் கொண்டு. 97

எனது நெஞ்சில் இருப்பவன் கண்ணன்

2279. கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது,

உண்ட துலகேழு முள்ளடுங்க, - கொண்டு

குடமாடிக் கோவலனாய் மேவி,என் னெஞ்சம்

இடமாகக் கொண்ட இறை. 98

தேவர்கள் யாவரும் திருமாலைப் பூசிப்பர்

2280. இறையெம் பெருமான் அருளென்று, இமையோர்

முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ, - அறைகழல

சேவடியான் செங்க ணெடியான், குறளுருவாய்

மாவடிவில் மண்கொண்டான் மால். 99

கண்ணனிடம் யான் கொண்ட அன்பு அளவற்றது

2281. மாலே!நெடியோனே!கண்ணனே, விண்ணவர்க்கு

மேலா!வியன் துழாய்க் கண்ணியனே, - மேலால்

விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே,என்றன்

அளவன்றால் யானுடைய அன்பு. 100

தசகம்:அன்பு கடை தாம் பிரான் பொருள் மதி நின்றது இடங்கை பகல் பின்னால் - திரு.

பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்