கறவா மடநாகு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

கறவா மடநாகு

திருநறையூர்-8

பிறவிப் பெருந்துயரை நீக்கித் தமக்கு அருள் புரியுமாறு திருநறையூர் நம்பியை ஆழ்வார் ஈண்டு வேண்டுகிறார். அப்பெருமானை ஆழ்வார் எப்படி மறப்பார்?

கலி விருத்தம்

நம்பி!பிறவா வரம் அருள்வாய்

1548. கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல்,

மறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன்,

நறவார் பொழில்சூழ் நறையூர் நின்றநம்பி,

பிறவாமை யெனிப்பணி யெந்தை பிரானே! 1

நம்பி!நான் உன்னையே அழைக்கின்றேன்

1549. வற்றா முதுநீரொடு மால்வரை யேழும்,

துற்றா முன்துற்றிய தொல்புக ழோனே,

அற்றே னடியே னுன்னையே யழைக்கின்றேன்,

பெற்றே னருள்தந்திடு என்எந்தை பிரானே! 2

நம்பி!நான் உன்னையே உகந்தேன்

1550. தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,

ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,

காரேய் கடலே மலையே திருக்கோட்டி

யூரே, உகந்தா யையுகந் தடியேனே. 3

நம்பி!நான் உன்னை எப்படி மறப்பேன்?

1551. 'புள்வாய் பிளந்த புனிதா!'என் றழைக்க,

உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா,

கள்வா!கடன்மல்லைக் கிடந்த கரும்பே,

வள்ளால்!உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே. 4

நம்பி!உன்னைத் தொழும் விதத்தைச் சொல்

1552. வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்நீயும்,

கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே,

நல்லாய் நரநா ரணனே!எங்கள்நம்பி,

சொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே. 5

நம்பி!உன்னைக் கண்டு நான் உய்ந்தேன்

1553. பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே,

முனியே திருமூழிக் களத்து விளக்கே,

இனியாய்!தொண்டரோம் பருகின் னமுதாய

கனியே, உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே. 6

நம்பி!தொண்டர்கட்கு நீதான் கதி

1554. கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு,

நிதியே!திருநீர் மலைநித் திலத்தொத்தே,

பதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக்

கதியே, உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே. 7

நம்பி!நான் எப்படி விடுவேன்?

1555. 'அத்தா!அரியே!'என்றுன் னையழைக்க,

பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,

முத்தே!மணிமா ணிக்கமே!முளைக்கின்ற

வித்தே,உன்னையெங் ஙனம்நான் விடுகேனே! 8

நம்பி!உயிர்க்கெல்லாம் நீதான் தாய்

1556. தூயாய்!சுடர்மா மதிபோ லுயிர்க்கெல்லாம்,

தாதாய் அளிக்கின்ற தண்டா மரைக்கண்ணா,

ஆயா!அலைநீ ருலகேழும் முன்னுண்ட

வாயா, உனையெங் ஙனம்நான் மறக்கேனே? 9

துயரமே இல்லை:விண்ணுலகு கிடைக்கும்

1557. வண்டார் பொழில்சூழ் நறையூர்நம் பிக்கு,என்றும்

தொண்டாய்க் கலிய னொலிசெய் தமிழ்மாலை,

தொண்டீர்!இவைபாடு மின்பாடி நின்றாட,

உண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே. 10

அடிவரவு:கறவா வற்றா தாரேன் புள் வில் பனி கதி அத்தா தூயாய் வண்டார் -- புள்ளாய்.









 





 










 







 


 


 












 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கிடந்த நம்பி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  புள்ளாயேனமுமாய்
Next