உலகம் எப்படிப் பொய் ? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

அத்வைதத்தில் உலகம் பொய், மாயை என்று சொல்லியிருப்பது பல பேருக்குப் புரிவதில்லை. அதை ஆக்ஷேபிக்கிறார்கள். கண்டனம் பண்ணுகிறார்கள். “இத்தனை ஜீவ‍-ஜந்துக்களுக்கும் லோகம் தெரிகிறது. அதில் இப்படி ஒரு காரியம் செய்தால் இப்படி விளைவு ஏற்படுகிறது என்று ஏராளமான காரண காரிய விதிகள் இருப்பதால்தான் நாம் அநேக விதமான காரியங்களை செய்யமுடிகிறது. பலனை அடைய முடிகிறது. பொய், மாயை என்றால் எப்படி ஒப்புக்கொள்வது?” என்று கேட்கிறார்கள்.

ஆசார்யாள் [அத்வைத ஸ்தாபகரான ஸ்ரீசங்கர பகவத்பாதாசாரியாள்] லோகத்தைப் பொய் என்று சொன்னார் என்றால், அது அப்படியே அஸத்யம் என்று சொன்னார் என்று தப்பாக அர்த்தம் பண்ணிக் கொள்வதால்தான் இப்படிப்பட்ட கண்டனம் எழுகிறது.

“இதென்ன வேடிக்கையாயிருக்கிறது! அப்படியானால் லோகம் பொய், ஆனால் அஸத்தியமில்லை என்றா ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்? இப்படி சொல்வது கொஞ்சம்கூடப்புரியாத விசித்திரமாக இருக்கிறதே!” என்று தோன்றும்.

ஸத்யம்-அஸத்யம்-பொய் என்ற மூன்றைப் பற்றி ஆசார்யாளின் அபிப்பிராயத்தை, அவர் செய்திருக்கிற பாகுபாட்டைப் (distinction) பார்க்கலாம்.

ஸத்ய வஸ்து என்றால் அது அவருக்கு ஏகமான ஆத்மா ஒன்றுதான். பிரம்மம் என்றும் அதையே சொல்வது. ஒரே ஸத்ய வஸ்துவைத்தான் ஒரு ஜீவனுக்கு ஆதாரமாக இருக்கிற போது ஆத்மா என்றும், ஸர்வ ஜீவராசிகளுக்கும் ஸர்வ லோகத்துக்கும் ஆதாரமாக இருக்கிறபோது பிரம்மம் என்றும் சொல்வது. எக்காலும் மாறாமல் இருப்பது அது ஒன்றுதான். அதனால் ஸத்யம்.

லோகம் மாறிக்கொண்டேதானே இருக்கிறது? நாம் மாறிக் கொண்டேதானே இருக்கிறாம்? நம் மனஸ், எண்ணங்கள் க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிக் கொண்டேதானே இருக்கின்றன? அதனால் இவற்றுக்கு ‘ஸத்யம்’ என்ற லக்ஷணத்தை (definition) ஆசார்யாள் தரமாட்டார்.

அஸத்யம் என்பாரா? அப்படியும் சொல்ல மாட்டார். ஸத்யத்துக்கு முன்னாடி ‘அ’ போட்டு ‘அஸத்யம்’ என்று சொன்ன்னல், இது ஸத்யத்துக்கு முற்றிலும் எதிரானது என்றாகிவிடும். அதாவது அடியோடு இல்லை என்று ஆகிவிடும். லோகத்தை இப்படி அடியோடு இல்லாத அஸத்யம் என்று ஆசார்யாள் சொல்லவே இல்லை. அதே சமயத்தில் அது ஸத்யமும் அல்ல, சாச்வதமான உண்மையும் அல்ல என்பதால், மித்யை, மித்யை என்றார். மித்யை என்றால் பொய் என்று நாம் எடுத்துக் கொள்கிறோம். உண்மையில் அது சாச்வத ஸத்தியமாகவும் இல்லாமல் அடியோடு அஸத்யமாகவும் இல்லாமலிருக்கிற நடுவாந்தர நிலை.

நம்முடைய ஸ்ரீ ஆசார்யர்கள் ஸத்யத்தை மூன்று விதமாகப் பிரித்திருக்கிறார்கள். இந்த மூன்றிலும் சேராததையே அஸத்யம் என்று அடியோடு தள்ளி விட்டார்கள். (1) பாரமார்த்திக ஸத்யம், (2) வ்யாவஹாரிக ஸ‌த்யம் , (3) ப்ராதிபாஸிக ஸத்யம் என்று ஸத்யத்தை மூன்றாக பிரித்தார்கள். (4) அஸத்யம் என்பது இந்த மூன்றிலும் சேராது.

இவைகளுக்குள் பாரமார்த்திக ஸத்தியமென்பதுதான் சாச்வத உண்மையான பிரம்ம ஸ்வரூபம்.

வ்யாவஹாரிக ஸத்யம் என்ன என்றால், நடைமுறையில், விவகாரத்தில் நிஜம் என்று நாம் நினைப்பதுதான். லோக வாழ்க்கை நிஜம் என்று நாம் நினைப்பதுதான் வ்யாவஹாரிக ஸத்யம். தகர டப்பியின் மூடி கீழே வெயிலில் கிடந்தால் அது வெள்ளி ரூபாயைப் போலத் தோன்றுகிறது. அது ப்ராதிபாஸிக ஸத்யம். கொஞ்ச நாழிகை அப்படித் தோன்றுகிறது. ஆனால் அது உண்மையல்ல. கனவும் இப்படியே. இந்த மூன்று மாதிரியின்றி, ஒரு நாளும் இல்லாதது அஸத்யம். மலடி மகன், குதிரைக் கொம்பு முதலியவை ஒரு நாளும் ஸம்பவிக்காதவை. இவை அஸத்யம். இதை விகல்பமென்று யோக ஸூத்திரம் சொல்லும்:

சப்த ஞானானுபாதீ வஸ்து சூன்யோ விகல்ப: |

‘மலடி மகன்’ என்கிற சப்தம் (வார்த்தை) மாத்திரம் இருந்து, அதற்கான வஸ்து இல்லாதது விகல்பம் என்று சொல்லப்படுகிறது. இந்த அஸத்தியத்தைத் துச்சமென்றும் அத்யந்த அஸத்தென்றும் சொல்லுவார்கள்.

வைக்கோலால் செய்யப்பட்ட பழுதை சாயங்கால அரை இருட்டில் பாம்பாகத் தோன்றுகிறது. அது பாம்பு என்பது பொய். ஆனால் பாம்பு மாதிரியாகத் தெரிவது நிஜம். அப்ப்படித் தெரியும்போது பொய்யும் நிஜமும் கலந்திருக்கின்றன. கிட்டே போனால் பொய்யகி விடுகிறது. ஆனால் நடுவில் கொஞ்ச நாழி நிஜம் மாதிரியே இருந்தது. அது ப்ராதிபாஸிக ஸத்யம்.

வ்யாவஹாரிக ஸத்தியமும் ப்ராதிபாஸிக ஸத்தியமும் உண்மையறிவு ஏற்படுகிறபோது பொய்யாகி விடுபவை.உண்மை அறிவு இல்லாதபோது மெய்யாக இருப்பவை. வேதாந்தத்தில் இப்படிப்பட்ட பொய்க்கு மித்யை என்று பெயர். ஒரு போதும் மெய்யாகத் தெரியாதது மட்டுமே அஸத்யம்.

விவகார ஸத்யம் (வ்யாவஹாரிக ஸத்யம்) என்று நாம் சொல்கிற லோகமும் உண்மையில், நமக்கு ஞானம் வந்தால் ப்ராதிபாஸிகமாக மறைந்து விடும் என்கிறார் ஆசார்யாள். பாஸம் என்றால் ஒளி. ப்ரதிபாஸம் என்றால், ஒளி ஒன்றிலே பட்டு அங்கே பிரதிபலிப்பால் ஏற்படுகிற சிறிது பிரகாசம் (reflection). தகர மூடியில் சூரிய வெளிச்சம் ஏற்பட்டது. அதனால் அது வெள்ளி மாதிரித் தெரிந்தது. ஆனாலும் வெள்ளியில்லை. இது பிராதிபாஸிகம். அப்படியே லோகம் என்பது பிரம்மத்தின் சைதன்யத்தால் ஸத்யம் மாதிரி மினுமினுக்கிறது. வெயிலில் கிடந்த ஒரு கிளிஞ்சலில் வெள்ளியின் மினுமினுப்பு வாஸ்தவமாகத்தான் தெரிந்தது. அது முழுப் பொய்யில்லை; நம் கற்பனை இல்லை. அது வெள்ளியென்று நினைத்தபோது, நிஜ வெள்ளி ஏற்படுத்துகிற எண்ணத்தையெல்லாம் அடைந்தோம். அவ்வளவு ஸந்தோஷம் அடைந்தோம். அந்த வெள்ளியைக் கொண்டு இன்ன நகை பண்ணலாம், அல்லது விற்று இவ்வளவு பணம் பண்ணலாம் என்றெல்லாம் ப்ளான் போட்டோம். இதே மாதிரிப் பழுதையைப் பாம்பாக பார்த்தபோது நிஜப் பாம்பை பார்க்கிற அதே பயப் பிராந்தி, மயக்கம், வயிற்றுக் கல‌க்கல் எல்லாம் உண்டாகிவிட்டது. மலடி மகன், முயல் கொம்பு என்று சொன்னால், அது இப்படிப்பட்ட உணர்ச்சிகளை உண்டாக்குமா? அடியோடு பொய் என்று தள்ளிவிடுவோம். அது நம்மை இன்னொன்று மாதிரித் தோன்றி ஏமாற்றாது.

இப்படி இன்னொன்று மாதிரித் தோன்றி ஏமாற்றுவதற்குத்தான் மாயா சக்தி என்று பெயர். வெயிலில் தகரம் வெள்ளியாகத் தெரிந்தது போல, அரையிருட்டிலே பழுதை பாம்பாகத் தெரிந்தாற் போல, மாயாசக்தியால் பிரம்மம் ஜகத்தாகத் தெரிகிறது.

பிரம்மம் லோகம் மாதிரித் தோன்றுகிறது. இந்த லோகமே பரம ஸத்யம் என்று ஏமாந்து போகிறோம். நமக்கு ஞானம் வந்துவிட்டால் என்ன ஆகிறது? ‘பிரம்மத்தைத் தவிர இரண்டாவதாக எதுவுமே இல்லை. அதைத் தவிர இந்த லோகமும் இல்லை. இது அது மாயையால் போட்டுக்கொண்ட வேஷம்தான்’ என்று தெரிந்து விடுகிறது. பழுதைக்குக் கிட்டே போனால் அது பாம்பு என்று நினைத்த எண்ணம் ஓடிப்போய் விடுகிற மாதிரி, தகர மூடியையோ, கிளிஞ்ச‌லையோ எடுக்கப் போய் அது வெள்ளியில்லை என்று தெரிந்து கொள்கிற மாதிரி, ஞான நிலையில் அதற்கு முன்னாடி லோகம் நிஜம் என்று நினைத்தது ஓட்டம் பிடிக்கிறது. வெள்ளியாகத் தெரிந்தவரையில் தகர மூடியும் பாம்பாகத் தெரிந்தவரையில் பழுதையும் ஏற்படுத்திய எண்ணங்கள் எல்லாம் அப்புறம் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிற மாதிரி, ஞானம் வந்துவிட்டால் லோகம் நிஜம் என்று நினைத்தபோது நமக்கு ஏற்பட்ட அத்தனை எண்ணமுமே நின்று போய்விடுகிறது. அதாவது, அனேக விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டதால் விவகார ஸத்யம் என்று நாம் ஒத்துக் கொண்ட லோகம், அத்வைதமாக ஸமாதி நிலையில் இருக்கிற போது பிராதிபாஸிகம் மாதிரியே மறைந்து விடுகிறது. ஆனாலும் இப்படி ஞானியானவன் தவிர, மற்ற அத்தனை பேருக்கும் அது காரியம்-விளைவு என்கிற விதிகளோடு தெரிந்து கொண்டு, அதிலே அவர்கள் பல தினுஸான பிரயத்தனங்களைப் பண்ண முடிவதால், லோகத்தை வ்யாவஹாரிக ஸத்யம் என்று ஒரு Status கொடுத்து வைத்திருக்கிறார்.

விவகார-பிரதிபாஸ ஸத்யங்களைத் தவிர “ஸத்யதரம்” ஒன்று இருக்கிறது. அதுவே எப்போதும் ஸத்தியமான பிரம்மம்.ஆகவே ஸத்தியமானது ஒன்று, அஸத்யம் ஒன்று. பொய் இரண்டு உள்ளன. ஸத்தியமாவது பிரம்மம் என்கிற ஸ்வாமி, அஸத்யம் மலடிமகன். ஈச்வரன் ஒரு நாளும் இல்லையென்று போகமாட்டார். அவர் ஸத்யம். மலடிமகன் ஒரு நாளும் இருப்பவனாக மாட்டான். அவன் அஸத்யம். சில பதார்த்தங்கள் முந்தி இல்லாமல் போகும்; பிந்தி வரும்; இப்பொழுது இல்லாமல் அப்புறம் உண்டாகும். அவைகள் எப்பொழுதாவது இல்லை என்ற ஒரு காலம் இருக்கும். எப்பொழுதுமே இல்லை என்பதில்லாமல் இருக்கிறது ஸத்யம். அப்படியிருப்பவர் பரமாத்மா. அஸத்யம் முக்காலத்திலும் இருக்கிறது என்பது இல்லாதது‍ அதாவது ஒரு நாளும் இல்லாதது. நடுவில் உள்ள இரண்டு விதமான மித்யைகள் ஸத்திய அம்சம் கொஞ்சம், அஸத்திய அம்சம் கொஞ்சம் கலந்து உள்ளவை. அவைதான் பொய். வியாவஹாரிகம், பிராதிபாஸிகம் என்பவை இரண்டும் மித்யை அல்லது பொய். அவை ஒரு காலத்தில் மட்டும் இருக்கிறாற்போல இருந்து இன்னொரு காலத்தில் இல்லாமல் போய்விடுபவை.

நாமெல்லாம் எப்படிப்பட்டவர்கள்? நம் தேஹம் கொஞ்ச நாளுக்கு முன்பு இல்லை, பின்பும் இது இல்லாமல்தான் போகப்போகிறது. ஸத்யம் இல்லை. கொஞ்சகாலம் இருப்பதால் அஸத்தியமும் இல்லை. முழு ஸத்தியமாக இருந்தால் முக்காலத்திலும் நாசம் அடையாமல் இருக்க வேண்டும். அப்படியும் இல்லை. இது “சுக்தி ரூப்யம்” போன்ற‌து. அதாவது வெயில் அடிக்கும்போது கிளிஞ்சலில் (சுக்தி) வெள்ளி (ரூப்யம்) தோன்றுவதைப் போன்றது. ரூப்யம் என்பது வெள்ளி. அதிலிருந்து ரூபாய் (Rupee) என்ற வார்த்தை வந்தது. கிளிஞ்சலில் வெள்ளி தோன்றுவ‌து ஸத்தியமா? அஸத்தியமா?

கிளிஞ்சல் மினுமினு என்று மின்னும்போது ஒரு நிமிஷமாவது அதிலே வெள்ளி இருக்கிறதென்று தோன்றுகிறது. மலடிமகன் ஒரு ஸெகண்டாவது தோன்றுவதுண்டோ? இல்லை. அதைப் போன்றதில்லை இது. “இருக்கிறது” என்னும் அம்சம் இதில் கலக்கிறது. அது குதிரைக்கொம்பு என்பதில் கலக்காது. குதிரைக் கொம்பு என்பதை வார்த்தையாக மட்டும் சொல்லலாம். வஸ்துவே கிடையாது. இதுவோ இருக்கிறதென்ற அம்சம் கொஞ்சம் தோன்றுவதனால் அஸத்யம் அல்ல. சரி, ஸத்தியமா என்றால் ஸத்தியமானால் இந்தத் தோற்றம் எப்பொழுதும் இருக்க வேண்டும். கிளிஞ்சலென்று தெரிந்தால், வெள்ளியானது இல்லாமற் போய்விடுகிறது. எப்போதும் அந்த வெள்ளி இல்லை.ஆனாலும் அப்படித் தோற்றம் மட்டும் உண்டாயிற்று. வெயில் போன பிறகு தோற்றமும் போயிற்று. வெள்ளி போனாலும் அதற்கு ஆதாரமாகக் கிளிஞ்சல் இருக்கிறது. பாம்பு என்ற ஒரு தோற்றம் அதற்குக் காரணமான வஸ்து‍-அதாவது பழுதை-தோன்றியவுடன் போய்விட்டது. அந்தத் தோற்றம் ஸத்தியமாக இருந்தால் பின்னால் இல்லாமல் போகாது. ஆகையால் இது ஸத்தியத்துக்கு வேறானது. அதுதான் பொய். இந்த மித்யைக்கு ஆதாரமாக ஒரு ஸத்யம் உண்டு. பாம்புத் தோற்றம் என்ற மித்யைக்கு பழுதை ஆதாரம். பாம்புத் தோற்றம் போன பின்பும் பழுதை நிற்கிறது. இப்படியே வெள்ளி என்ற எண்ணம் போன பின்பும், ஆதாரமாக கிளிஞ்சல் இருக்கிறது. பழுதை, கிளிஞ்சல் என்ற ஸத்தியங்களை ஆதாரமாகக் கொண்டே பாம்பு, வெள்ளி ரூபாய் என்ற தோற்றங்கள் ஏற்பட்டன. அப்படியே மித்யா லோகத்துக்கு ஆதாரம் பிரம்மம். லோகத் தோற்றம் போனால் எல்லாம் சூன்யமாகி விடாது. ஆதாரமான பிரம்மம் அப்போதும் ஸத்யமாக இருக்கும். பாம்பு பொய் என்ற எண்ணம் போன பிறகும் ப‌ழுதை இருந்ததல்லவா?

ஸத்ய பிரம்மத்தை மித்யலோகம் மாதிரிக் காட்டுவது மாயை. மாயையை “அநிர்வசனீயம்” என்று ஆசார்யாள் சொல்லுவார்கள். “விளக்க வொண்ணாதது” என்று அர்த்தம். அது ஸத்தும் அன்று. அஸத்தும் அன்று. இன்ன‌தென்று சொல்ல முடியாதது; உள்ளதென்றும் இல்லதென்றும் சொல்ல முடியாதது. ஒரு சமயம் தோன்றுகிறது. அப்புறம் ஞானம் வந்துவிட்டால் இல்லாமாலும் போகிறது.“பொய்ம்மாயப் பெருங்கடலில்” என்று தமிழ் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது*. மாயை என்றால் பொய் என்று அது சொல்லுகிறது. ஸத்தியமும் இல்லாமல் அஸத்தியமும் இல்லாத மூன்றாவது பொருளாக இருக்கிறது அது. இல்லையென்று சொல்லிவிட்டால் தோன்றுகிறதே! அதற்கு என்ன செய்வது? இருக்கிறது என்றால், போய்விடுகிறதே!

இது பரமாத்வாவைவிட வேறு என்றால், அவருக்கு வேறாக ஏதும் இல்லையாதலால் அப்படிச் சொல்ல முடியாது. பரமாத்மாவேதான் மாயை என்பதும் ஸரியல்ல. ஞானம் வந்தால் மாயை போய்விடுகிறதே! பெளத்தர்கள் சொல்லுகிற சூனியமும் அன்று. பரமார்த்திக ஸத்தியமுமன்று. அதனால்தான் விளக்கவொண்ணாத ‘அநிர்வசனீயம்’ என்று சொல்லுகிறார்கள்.

பழுதை தோன்றினால் பாம்பு போய்விடும். பழுதை அதிஷ்டானம். பாம்பு ஆரோப்யம். அதிஷ்டானம் நமக்கு ஸாக்ஷாத்காரமானால் ஆரோப்யம் போய்விடும். எதில் ஒரு தோற்றத்தை ஏற்றி வைத்திருக்கிறோமோ அது தெரிந்தால், ஏற்றி வைத்திருந்த தோற்றம் போய்விடும். இந்தத் தோற்றமே பிராதிபாஸிக ஸத்யம். நாம் அடியோடு எப்பொழுது இல்லாமல் போவோம்? நம்மை எந்த வஸ்துவின்மேல் ஆரோபித்து வைத்திருக்கிறோமோ அது தெரிந்தால், ‘நாம்’ என்பது போய்விடும். ஸூர்ய சந்திராதிகள், பஞ்ச பூதங்கள், பிரபஞ்சம் முதலியவைகளை நாம் எதில் வைத்திருக்கிறோமோ அந்த ஸத்தியமான வஸ்து தெரிந்தால், இந்தப் பிரபஞ்சமெல்லாம் போய்விடும். அப்போது லோகம் பொய் ஆகிறது. நாமும் பொய்யாகிறோம். இதுதான் ஆசார்யாள் சொன்னது. “விவகார தசையில் லோகம் நிஜமே; ஞான தசையில் அது மறைந்துவிடும்” என்றார். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாததாலேயே, ‘கண்ணுக்குத் தெரிகிற – காரிய, காரணச் சட்டத்துக்குக் கட்டுப்பட்ட – லோகத்தை அவர் எப்படிப் பொய் என்று சொல்லலாம்?’ என்று சண்டைக்கு வருகிறார்கள். அடியோடு புளுகாக உள்ள அஸத்யமாகவும் இல்லாமல், முழுக்க நிஜமாக இருக்கிற ஸத்யமாகவும் இல்லாமல், இரண்டும் கலந்திருக்கிற விவகார ஸத்யமாகவே லோகத்தை அவர் வைத்து, இதற்கே மித்யை அல்லது பொய் என்று பேரைக் கொடுத்தார் என்று புரிந்து கொண்டால் சண்டை வராது.


*அப்பர் ஸ்வாமிகளின் திருவாரூர் திருத்தாண்டகம்.