வான சாஸ்திரமும் ஜோஸ்யமும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வான சாஸ்திரம் (Astronomy) என்பதாக கிரஹங்களின் நிலைமைகளை மட்டும் ஆராய்ச்சி பண்ணுவதோடு இன்றைய ஸயன்ஸ் நின்றுவிடுகிறது. அவை அந்த நிலைகளில் இருப்பது லோகத்தை எப்படிப் பாதிக்கிறது, நம்மை எப்படிப் பாதிக்கிறது, அவற்றை நமக்கு அநுகூலமாக்கிக் கொள்ள என்ன பண்ண வேண்டும் என்ற விஷயங்களை – அதாவது, “ஜோஸ்யம் பார்ப்பது” என்று நாம் சொல்கிற Astrology சமாசாரங்களையும் Astronomy யோடு சேர்த்துச் சொல்வது ஜ்யோதிஷ சாஸ்திரம்.

கிரஹங்கள், நக்ஷத்ரங்கள், திதி ஆகியன இப்படியிப்படி இருந்தால், அந்த சமயத்தில் செய்யும் கர்மாக்களுக்கு இப்படியாகப்பட்ட பலன்கள் உண்டாகின்றன என்பதைச் சொல்லவே ஜ்யோதிஷ சாஸ்திரம் ஏற்பட்டது. வைதிக கர்மாக்களைச் செய்வதற்குரிய அநுகூலமான காலங்களை நிர்ணயிப்பதற்காகவே வேதாங்கமான ஜ்யோதிஷம் ஏற்பட்டது. இதில் கிரஹ ஸஞ்சாரம் முதலானதுகளை கணக்குப் பண்ண வேண்டியிருந்ததால் கணிதமும் நிறையச் சேர்ந்துவிட்டது.

யாகம் பண்ணும் இடமான யக்ஞவேதி, சயனம் என்பதான யக்ஞபூமி அமைப்பு ஆகியவற்றுக்கு நிர்ணயமான அளவுகள் உண்டு. அந்த அளவுப்படி அமைத்து யக்ஞம் பண்ணினாலே பலன் உண்டு. அதனால் யக்ஞவேதிகளின் அளவுகளைத் தீர்மானமாகக் கணக்குப் பண்ணிக் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்த ரீதியிலும், வேதத்துக்குத் துணையங்கமாக கணிதம் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is கண் என்பது ஏன்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  புராதன கணித நூல்கள்
Next