குப்புற விழுவது ஏன்? ஒருமுகமாக இந்தக் கார்யத்தைப் பண்ண வேண்டும், அப்போது பராக்குப் பார்க்கப்படாது என

குப்புற விழுவது ஏன்?

ஒருமுகமாக இந்தக் கார்யத்தைப் பண்ண வேண்டும், அப்போது பராக்குப் பார்க்கப்படாது என்பதால்தான் வெளியிலே ஒன்றையும் பார்க்காமல் பூமிப் பக்கமாக தலையைக் குனிந்து கொண்டு குப்புறவாக்கில் நமஸ்கரிப்பது, மற்றவர்களால் தலைகுனிவு ஏற்படுவது அவமானம். நாமே குனிவது பஹுமானம்!

பஹிர்முகமாக (வெளிமுகமாக) ஒரு ஜீவனை இழுக்கிற இந்த்ரியங்களெல்லாமே மல்லாக்குப் பக்கத்தில்தானே இருக்கின்றன? அவை எல்லாவற்றையும் லோகத்தின் திசையிலிருந்து திருப்பவே குப்புற நமஸ்கரிப்பது.

குப்புற விழுகிறது, முதுகு காட்டுகிறது – ‘புற முதுகு காட்டுவது’ என்கிறது – இதெல்லாம் அவமானம். ஆனால் மானம் என்பது ‘நான்’ என்கிற அஹம்பாவம் இருக்கிறபோதுதானே முக்யம்? மநுஷ்ய வாழ்க்கையிலே ‘நான்’-பாவமும் மானமும், அதோடேயே அவமானமும் – அபிமானமுந்தான்! – இந்த எல்லாமும் இல்லாமலிருக்க முடியாதுதான். (இவை) இல்லாமல் மட்டுமிருந்தால் நாமே ராஜாதான். என்ன ராஜா? ஆத்மாவை ஜயித்த ராஜா. ஜீவன் முக்தன் என்னும் ராஜா. அப்போது நமஸ்காரமே இல்லை. ஆனால் நம் மாதிரி நிலையிலே வாழ்க்கை நடத்துகிறதற்கு மானாவமானங்களை அவச்யமான இடங்களில் வைத்துக் கொண்டே இருப்போம். ரொம்பவும் அதைக் கொண்டாடிக் கொண்டில்லாமல் கொஞ்சம் அடக்கி வைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அதை வைத்துக் கொள்ளாமலே இருக்கிற இடங்களும் உண்டு என்று அறிவு பெற்று அங்கே மட்டும் தூக்கிப் போடுவோம். அந்த இடங்கள் என்ன? ஈச்வர ஸந்நிதானம், மஹான்கள், பெரியவர்களின் ஸந்நிதானம்தான். அங்கே மானமே வேண்டாம்! குப்புற விழுவோம்! புறமுதுகு காட்டுவோம்! ஆத்ம ஜயம் என்று சொன்னேனே, அந்த வெற்றிக்கு ஏற்றுகிற முதல் சின்னப் படியாக இங்கே இப்படிப் புறமுதுகு காட்டுவோம். பிற இடங்களிலும் ரொம்பவும் மானாவமானம் கொண்டாடிக் கொண்டில்லாமல் கொஞ்சமாவது அடங்குவதற்கு இதுவே ஸஹாயம் செய்யும்.

மரியாதை ஸ்தானத்திலிருப்பவர்களுக்கு முன்னால் நிற்கிறபோது முதுகு காட்டப்படாதுதான். விடை பெற்றுக் கொள்ளும்போதுகூட முதுகைக் காட்டாமல், முன்னால் பார்த்துக் கொண்டேதான் பின்னுக்குப் போகவேண்டும். செங்குத்தாக நிற்கிறபோது அப்படி. செங்குத்து அஹங்காரம் ஓங்கி நிற்பதற்கு அடையாளம் என்பதால் தானே தரையோடு விழுகிறோம்? இப்படி நேர்மாறாக தரையோடு கிடக்கிறபோது முதுகைத்தான் காட்டணும்.

த்யானம் என்றால் அப்போது செங்குத்துதான். கொஞ்சங்கூட தொய்யப்படாது. விறைப்பாய்  உட்காரணும். தலையும் குனியவேபடாது. ‘தலைகுனிவு’ கூடாது. அது பெரிய விஷயம், பெருமை தருகிற விஷயம். அது ஆத்மாவுக்கு நல்லது செய்கிற பெருமை.

ஆனாலும் அதுவுங்கூட அபக்வ (பக்குவமற்ற) ஸ்திதியில் தப்பான அஹம்பாவப் பெருமைக்குக் கொண்டு விடலாம். அதற்கு சிறுமை மருந்து கொடுக்க வேண்டும். அந்த மருந்துதான் நமஸ்காரம். அப்போது பெருமை உசத்தி கொஞ்சங்கூட கொண்டாடிக் கொள்ளாமல் தலையைக் குனிந்து கொண்டு, முதுகைக் காட்டிக் கொண்டு தாழக் கிடக்க வேண்டும். கிடக்கிறபடி கிடந்து விட்டால் அதுவே நல்ல நெய், பனங்கல்கண்டு போட்ட லேஹ்ய மருந்தாக ருசிக்கும்.