இரு விதத்திலும் திருமாலின் மருமகன் ஒரு ஸமாசாரம் ஞாபகம் வருகிறது தேவஸேனையை இந்த்ரனின் குமாரி என்கிறோம் வள்ளியை நம்பிராஜன் குமாரி என்கிறோம் ‘ஸுரமகள

இரு விதத்திலும் திருமாலின் மருமகன்

ஒரு ஸமாசாரம் ஞாபகம் வருகிறது. தேவஸேனையை இந்த்ரனின் குமாரி என்கிறோம். வள்ளியை நம்பிராஜன் குமாரி என்கிறோம். ‘ஸுரமகள், குறமகள்’ என்று சொன்னேன். ஆனால் வாஸ்தவத்தில் இரண்டு பேருமே மஹாவிஷ்ணுவின் குமாரிகள்தான். அவருடைய ஆனந்த பாஷ்பத்திலிருந்து உத்பவித்தவர்கள். அப்புறம் ஒவ்வொரு காரணத்துக்காக ஒருத்தி இந்த்ரனிடமும், மற்றவள் நம்பிராஜனிடமும் பெண்ணாக வளர்ந்தார்கள்.

மஹாவிஷ்ணு யார்? ஸாக்ஷாத் அம்பாளின் உடன் பிறப்பு. அதாவது ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியின் மாமா. மாமா பெண்களைத்தான் இவர் முறை தப்பாமல் கல்யாணம் பண்ணிக் கொண்டு, ‘மருமகன்’ என்ற வார்த்தையை இரண்டு அர்த்தத்திலும் ஜஸ்டிஃபை பண்ணிக் கொண்டிருக்கிறார்! அதனால்தான் போலிருக்கிறது. அருணகிரிநாதர் ‘முருகோனே’ என்று சொல்கிற அளவுக்கு ‘மருகோனே மருகோனே’ என்றும் பாடியிருக்கிறார். பிள்ளையார் கூடத்தான் விஷ்ணுவுக்கு மருமானாயிருந்த போதிலும் ‘மால்மருகோன்’ என்று ஸுப்ரஹ்மண்யரையே சொல்கிறோம்.