பல ஜனகர்கள் ஸீதையுடைய அப்பாவின் பேர் – ஜனகர் இல்லை! ஜனகர் என்பது மிதிலையைத் தலைநகராகக் கொண்டு விதேஹம் என்ற ராஜ்யத்தை ஆண்ட ஸுர்ய வம்சக்கிளைப் பிரிவினர

பல ஜனகர்கள்

ஸீதையுடைய அப்பாவின் பேர் – ஜனகர் இல்லை! ஜனகர் என்பது மிதிலையைத் தலைநகராகக் கொண்டு விதேஹம் என்ற ராஜ்யத்தை ஆண்ட ஸுர்ய வம்சக்கிளைப் பிரிவினரில் நிமி என்பவரின் வழியில் வந்த எல்லாருக்கும் உரிய குடிப் பெயர். ஸீதையுடைய அப்பாவின் பேர், அதாவது இயற்பெயர், ஸீரத்வஜர் என்பது. குடிப் பெயரைச் சேர்த்து அவரை ஸீரத்வஜ ஜனகர் என்று சொல்ல வேண்டும். ஸீரம் என்றால் கலப்பை. ஸீரத்வஜர் என்றால் கலப்பைக் கொடியை உடையவர். இந்தக் கலப்பைக் கொடிக்காரருக்குப் பொருத்தமாகக் கலப்பை கிளறிவிடும். உழுபாதையிலேயே ஸீதை அகப்பட்டாள். “ஸீதா” என்றாலே கலப்பை முனையின் பாதைதான்.

மிதிலை ராஜவம்சத்தைச் சேர்ந்த அநேக ஜனகர்களில் கேசித்வஜ ஜனகர், காண்டிக்ய ஜனகர் என்று இரண்டு பேர். அந்த இரண்டு பேரும் பெரியப்பா – சித்தப்பா பிள்ளைகள். தர்மத்வஜ ஜனகர் என்பவர் இவர்களுடைய பாட்டனார். அவருக்கு அமிதத்வஜர், க்ருதத்வஜர் என்று இரண்டு பிள்ளைகள். க்ருதத்வஜரின் பிள்ளை கேசித்வஜர், அமிதத்வஜரின் பிள்ளை காண்டிக்யர்.

தர்மத்தையே ஜீவித லக்ஷ்யமாகக் கொண்டு, கொடியைத் தூக்கிப் பிடிக்கிற மாதிரி உசத்திக் காட்டுகிறவந்தான் தர்மத்வஜன். ஆனால் ‘தர்மத்வஜன்’ என்ற வார்த்தைக்கு ‘ஆஷாடபூதி’, ‘ஹிபாக்ரிட்’ என்றும் கேலியாக ஓர் அர்த்தம் உண்டு. தர்மாநுஷ்டானத்தை அடக்கமாகப் பண்ணாமல் பகட்டாகக் கொடி பிடித்துக் காட்டுகிறவன் போலியாகத்தான் இருப்பான் என்ற அபிப்ராயத்தில் இப்படி அர்த்தம் ஏற்பட்டது. நான் சொன்ன தர்மத்வஜ ஜனகர் இம்மாதிரி போலி இல்லை. இந்த விஷயம் இருக்கட்டும்.

முழு ராஜ்யத்தையும் தலைப் பிள்ளைக்கே பட்டம் கட்டுவதுதான் பொது வழக்கம். ஆனாலும் சில ஸமயங்களில் இளைய பிள்ளைகளுக்கும் ராஜ்யத்தில் ஸ்வதந்திரமான பங்கு தருவதுண்டு. ஒரு கனிஷ்ட புத்ரன் மஹாசூரனாக யுத்தங்கள் பண்ணிப் புது ராஜ்யங்கள் பிடித்துக் கொடுக்கும்போது பிதாவான ராஜா ஜ்யேஷ்ட புத்ரனுக்கு மட்டுமில்லாமல் இவனுக்கும் மூத்தவனுக்கடங்கிய குறுநில அரசாக இல்லாமல், ஸ்வதந்திரமானதாகவே ராஜ்யத்தில் பங்கு தருவதுண்டு. ராஜ்ய ஆசையேயில்லாமல், தம்பி ஆண்டால் அது தாம் ஆளுவதற்கு மேலே என்று நினைத்தவர் ஸ்ரீராமசந்த்ர மூர்த்தி. முடிவிலே அவர் கோஸல தேசத்தை இரண்டாகப் பிரித்துக் குசன், லவன் இரண்டு பேருக்கும் பட்டம் கட்டினார். அது மட்டுமில்லாமல், கோஸலத்துக்கு அப்பாற்பட்ட ராஜ்யங்களை லக்ஷ்மண, பரத, சத்ருக்கனர்களின் எல்லாப் பிள்ளைகளுக்கும் பாகம் போட்டுக் கொடுத்தார்.

கேசித்வஜருக்கும் காண்டிக்யருக்கும் தகப்பனார்களாக இருந்த அண்ணா-தம்பி ஜனகர்கள் இரண்டு பேருமே தனித்தனி ராஜ்யங்களுக்கு ராஜாக்களாக இருந்தவர்கள். அதனால் அவர்களுக்கப்புறம் பிள்ளைகளான கேசித்வஜர், காண்டிக்யர் இரண்டு பேரும் அந்தந்த ராஜ்யங்களுக்கு வார்ஸாக ஆட்சி பெற்றார்கள்.

பழைய கால ராஜாக்கள் க்ஷத்ரிய தர்மப்படி வீர புருஷர்களாக யுத்தங்கள் செய்து ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டு போவார்கள். தர்ம சாஸ்த்ரப்படி நல்ல நிர்வாஹம் நடத்துவார்கள். அதோடு யாக யஜ்ஞாதிகளும் நிறையப் பண்ணுவார்கள். இப்படிக் கர்ம மார்க்கத்தில் சிறப்பாக ஈடுபட்டிருந்தாலும் அவர்களுக்கு வேதாந்த ஞானமும் இருக்கும். புத்ரன் வயசுக்கு வந்ததும் அவனுக்குப் பட்டம் கட்டி விட்டு, ராஜபோகத்தை எல்லாம் விட்டுக் காட்டுக்குப் போய் தபஸ் பண்ணிப் பரமாத்மாவோடு சேர்ந்து விடுவார்கள். ஆள்கிறபோதே தாமரை இலைத் தண்ணீராக இருந்து கொண்டு நிரம்ப வேதாந்த விசாரம் செய்த ராஜாக்களும் இருந்திருக்கிறார்கள். இப்படியிருந்த ஒரு ஜனகரைப் பற்றி ப்ருஹதாரண்யக உபநிஷத்திலே நிறைய வருகிறது.