மங்களமான முடிவே ஸம்ஸ்க்ருத நாடகத்தில் இன்னொரு அம்சம் சொல்லவேண்டும் பொது ஜனங்களின் மனப்பான்மையை அநுசரித்து, நல்ல வழியில் நடக்கிறவன் கடைசியில் நன்

மங்களமான முடிவே

ஸம்ஸ்க்ருத நாடகத்தில் இன்னொரு அம்சம் சொல்லவேண்டும். பொது ஜனங்களின் மனப்பான்மையை அநுசரித்து, நல்ல வழியில் நடக்கிறவன் கடைசியில் நன்மையே அடைவான் என்றுதான் காட்ட வேண்டும் என்று நாடக ஆசிரியர்களுக்கு விதி ஏற்பட்டிருந்தது. அதனால்தான் ‘உத்தர ராம சரித’த்தில்கூட, பவபூதி சோக ரஸத்துக்குப் பேர் எடுத்திருந்தும், முடிவில் ஸீதை பூமிக்குள் போய் அப்படியே மறைந்ததாக இல்லாமல், மறுபடியும் ராமரோடு சேர்ந்ததாக மாறுதல் செய்திருக்கிறார்! “முடிவு மங்களமாக இருக்க வேண்டும்; பொதுஜனங்களுக்குத் தர்மத்தில் பற்றுதல் உண்டாக வேண்டுமானால் தர்மவான் சந்தோஷத்தை அடைந்ததாகவே காட்ட வேண்டும்” என்கிற அபிப்பிராயம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் “ஏற்கனவே ஜனங்களுக்கு இருக்கிற கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அதை மறப்பதற்காகத்தான் ஒரு பொழுது போக்காக நாடகம் பார்க்க வருகிறார்கள். இதிலே சித்திரித்துக் காட்டுகிற துக்கம், துக்கமாக இருக்கும்போதே, அதற்குள்ளேயும் ஏதோ ஓர் ஆனந்தம் இருக்கிறதென்பது வாஸ்தவம்தானானாலும் ரொம்பவும் ரஸிகர்களாக இல்லாமல் சாமானியமாக இருக்கப்பட்டவர்கள் ஒரு நாடகம் பார்த்து முடித்து வீட்டுக்குத் திரும்பும்போது அவர்களுக்குப் பழைய துக்கம் போதாது என்று புதுசாக ஒரு துக்கத்தைக் கொடுக்க வேண்டாம்’ என்ற அபிப்பிராயத்தில் எந்த நாடகமும் மங்களமாக முடிய வேண்டும் என்று சட்டம் மாதிரிப் போட்டு விட்டார்கள். அதனால் பழைய ஸம்ஸ்கிருத நாடகங்களில் ‘ட்ராஜெடி’யே கிடையாது. எல்லாம் ‘காமெடி’தான்.

சோகத்துக்குள்ளும் நம்மை உயர்த்துகிற ஏதோ ஒன்று இருக்கிறது என்பது வாஸ்தவம்தான். அதனால்தான் ஷேக்ஸ்பியர் போன்ற மேல்நாட்டு நாடகாசிரியர்கள் லோகமெல்லாம் கொண்டாடும் பெரிய ட்ராஜெடிகளை எழுதியிருக்கிறார்கள். அது அவர்கள் தேசாரத்துக்குப் பொருத்தம். அவர்கள் மற்ற பொழுதுகளில் சந்தோஷமாக இருக்கத் தெரிந்தவர்கள். ‘பால் ரூம் டான்ஸ்’ என்று ஆடுவார்கள். அதனால் அவர்கள் டிராமாவில் அழுதால் பரவாயில்லை. நம் வாழ்க்கையில் இந்த டான்ஸும் ஆனந்தமும் கேளிக்கையும் இல்லை; அவை நமக்கு இருக்கவும் வேண்டாம். அதோடு நமக்குப் பொதுவாகவே, எத்தனை சௌகரியம் இருந்தாலும், வெளியிலே சந்தோஷமாகக் காட்டிக் கொள்ளாமல் கொஞ்சம் மூக்கால் அழுவதே ஸ்வபாவமாக இருக்கிறது. இந்த அழுகைக்கு நடுவில் பொழுதுபோக்கு என்று ஒரு நாடகத்துக்குப் போனால் அழுகையை ஜாஸ்தியாக்கிக் கொள்ளாமல் அங்கிருந்து ஸந்தோஷமாகத் திரும்ப வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நாடக லக்ஷணம் வகுத்தவர்கள் மங்களமான முடிவே இருக்க வேண்டும் என்று விதித்ததாகச் சொல்லலாம். இதனால், எல்லாம் ஹாஸ்யக்கூத்தாக, ‘காமிக்’காக இருந்துவிட்டது என்று அர்த்தமில்லை. எல்லா உணர்ச்சிகளும் கலந்திருக்க வேண்டும் என்பதால்தான் ‘நவரஸம்’ என்று பிரித்து வைத்து, அவற்றைச் சித்தரிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள்.