வாலிப மாணவர்களுக்கு உணர

வாலிப மாணவர்களுக்கு

உணர்ச்சி வெள்ளமும் கட்டுப்பாட்டு அணையும்

யௌவனம், வாலிபம் என்பது உணர்ச்சி வேகங்கள் கட்டறுத்துக் கொண்டு  புரளுகிற பருவம். தற்காலத்தில் மிதமிஞ்சிய சக்தியுடன் ஸர்வ ஜனங்களின் மேலும் ஆளுகை செலுத்திக் கொண்டிருக்கிற பாலிடிக்ஸ், ஸினிமா, பத்திரிகைகள், ஸ்போர்ட்ஸ் ஆகியவை அத்தனை பேரையுமே உணர்ச்சி வேகங்களில் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கையில், தன்னியற்கையாகவேறு அந்த வேகங்களின் எழுச்சிக்கு ஆளாகியிருக்கிற வாலிய வயசு மாணவர்கள் – கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள் – ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப் பட்டிருப்பது இரண்டு பங்கு (மடங்கு) சிரமம்தான். ஆனாலும் தங்களுடைய எதிர்காலத்துக்கான வளர்ச்சியை முன்னிட்டு அவர்கள் இந்த சிரமத்தை சமாளித்தே தீர வேண்டும். அதிலேயேதான் தேசத்தின் தற்கால அமைதி, எதிர்கால அமைதி ஆகியவையும் அடங்கியிருக்கின்றன. வாலிப வயஸுக்காரர்கள் கட்டுப்பாடு இழந்தால் அவர்களும் கெட்டுப் போய், வீட்டிலும் அமைதி குலைந்து கெட்டுப் போய், நாட்டிலும் அமைதியின்மையே அடிவேர் வரை பரவிக் கெடுத்து விடும்.

கட்டறுத்துப் புரளுகிற இந்த உணர்ச்சி வெள்ளத்துக்கு அணைபோட்டு வைப்பதாகத்தான் நம்முடைய முன்னோர்களான பெரியவர்கள் பாலப்பிராயத்தில் அக்ஷராப்யாஸம் ஆன நாளிலிருந்து தெய்வ பக்தியையும், குரு பக்தியையும், அந்த பக்தியிலிருந்து விளைகிற விநயம் என்கிற அடக்க குணப் பண்பையும் விதித்து, குருகுலத்தில் அதைப் பசங்களுக்கு நடைமுறையாக்கிக் கொடுத்தார்கள்.