“அந்த” ச்லோகத்திற்கு “இந்த” ச்லோகத்தின் அத்தாட்சி : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

அம்பாள் தம்மோடு சேரவேண்டும் என்று ஸ்வாமி விரும்பினார். அவளுக்கு நமஸ்காரம் பண்ணினார். நமஸ்காரம் அவளுக்கு; ஆனால் அவர் விருப்பத்தை நிறைவேற்றியதோ விக்நேச்வரர்! நான் “ந்யாயேந்து சேகர” ச்லோகம் சொல்லி, ‘இந்து சேகர’ ஸம்பந்தத்துக்காகவே “ஸீதா ராவண ஸம்வாத” ச்லோகம் சொல்லப் போக, இதிலேயும் அதில் பார்த்த விஷயத்துக்கு அத்தாட்சி வந்து விடுகிறது! இப்படித்தான் பல நல்ல, ரஸமான ஸமாசாரங்களை எடுத்துப்போட்டுக்கொண்டு கொஞ்சம் அலசினால் எதிர்பார்க்காத புதையல்கள் அகப்படுகின்றன! இப்போது அகப்படும் புதையல், அந்த ச்லோகத்தின் தீர்மானத்திற்கு இந்த ச்லோகத்தில் கிடைக்கும் அத்தாட்சி அல்லது கன்ஃபர்மேஷன். எந்த தேவதையை நாம் ஆராதித்தாலும், அந்த தேவதையும் தன்னுடைய அநுக்ரஹ கார்யத்துக்கு இடையூறு ஏற்படாமலிருப்பதற்காக விக்நேச்வரரிடம்தான் போய்ப் பிரார்த்தித்துக்கொண்டு நிற்குமாதலால், நாம் நேராக அவரொருவரையே எந்த அபீஷ்டம் நிறைவேறுவதற்கும் ஆராதித்துவிட்டால் போதும் என்று அந்த ச்லோகத்தில் பார்த்தோம். இப்போது இங்கே, இந்த ச்லோகத்தில், கவி அந்த உத்தேசத்தில் இதை இயற்றாத போதிலும், என்ன பார்க்கிறோமென்றால் – அம்பாளோடு ஒற்றுமையாய்ப் போகவேண்டுமென்று ஈச்வரன் அவளை ஆராதிக்கிறார். காலிலே விழுவதைவிட என்ன ஆராதனை வேண்டும்? இப்படி அவர் ஆராதனை பண்ணியும் அவள் ஒன்றும் பண்ணவில்லை. கோபமாகவே இருக்கிறாள். அவளுக்கும் உள்ளூர ஒற்றுமையாக வேண்டுமென்றுதான் ஆசை. ஆனாலும் பிகுவை விட்டுக் கொடுப்பதா என்று ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். கடைசியில் விக்நேச்வரர் அவர்களை விளையாட்டாக ஒன்று சேர்த்து விடுகிறார். அதாவது இவருக்கு ஆராதனை பண்ணாமல் அம்பாளைத்தான் ஈச்வரன் ஆராதித்தபோதும்கூட அவள் அந்த ஆராதனா பலனைத் தராமல் இவர்தான் தந்திருக்கிறார்! அதே மாதிரி, ஈச்வரனை ஆராதனை பண்ணாமல் அதற்கு நேர்மாறாக அவள் கோபமாயிருந்தாலும் அவளுக்கு உள்ளூர ஆசை எப்படியாவது அவர் தன்னைச் சேர்த்துக்கொண்டு விடவேண்டுமென்பதுதான். ஈச்வரனிடம் சேரணும், ஈச்வரன் நம்மைச் சேர்த்துக் கொள்ளணும் என்று ஆசைப்படுவது ஆராதனையில்லாமல் வேறே என்ன? வெளியில் கோபம், அவமரியாதை என்று அவள் காட்டினாலும் உள்ளே ப்ரியம், ஆராதனைதான் நிறைந்திருக்கிறது. அப்போது ஈச்வரனும் தாமாக அவளுடைய ஆராதனா பலனைக் கொடுத்துச் சேர்த்துக் கொள்ளவில்லை. விக்நேச்வரர்தான் அவர்களைச் சேர்த்து வைத்து அவர்களுடைய மனோபீஷ்டம் நிறைவேறுமாறு செய்து ஆராதனா பலனைக் கொடுத்திருக்கிறார். இதனால் இவரே எந்தப் பலனும் தர வல்லவர், இவரொருத்தரை நாம் ஆராதித்தாலே போதும் என்று கன்ஃபர்ம் ஆகிவிடுகிறதல்லவா?

மநுஷ்யர்களான நாம் தேவர்களிடம் பெறக்கூடிய அபீஷ்ட பூர்த்திகளுக்காக விக்நேச்வரரைப் பிடித்துவிட்டால் போதும் என்று அந்த ச்லோகம் காட்டிட்டென்றால், இந்த ச்லோகமோ இன்னம் மேலேபோய், தேவர்களுக்குள் உச்சியில் இருக்கப்பட்ட பரமேச்வர தம்பதியுமே தங்களுக்குள்ளே ஒரு விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதுகூட இவருடைய ஸஹாயத்தால் முடிகிறது என்று காட்டுகிறது. குழந்தை விளையாட்டாக அவர் அந்தப் பெரிய கார்யத்தைப் பண்ணிவிடுகிறார்! ஸஹாயம் பண்ணவேண்டும் என்று தாம் உத்தேசித்ததாகக் கூடக் காட்டிக்கொள்ளாமல், ‘இவர் என்னமோ விளையாடினார்! அப்பா அம்மா ஒன்று சேர்ந்து விட்டார்கள்’ என்று நினைக்கும் விதத்தில் பண்ணிவிடுகிறார்!

இவர் நாம் மனஸில் நினைக்கும் எல்லா அபீஷ்டங்களையும் ஸகல புருஷார்த்தங்களையும் (“சிந்திதார்த்தம்” என்பது இவற்றைத்தான்) நிச்சயமாக நிறைவேற்றித் தரும். அநுக்ரஹ மூர்த்தியாகத்தானே இருப்பார்? இப்படி அவர் அருளட்டும் என்று கவி முடிக்கிறார்.

“ஸர்வார்த்தங்களையும் தருவதில் பிள்ளையார் சதுரர்” என்று “ந்யாயேந்து சேகர” ச்லோகம் சொன்னதற்குக் கன்ஃபர்மேஷனாகவே இந்த ச்லோகம் “நம்முடைய சிந்திதார்த்தங்களைப் பிள்ளையார் நிறைவேற்றி வைக்கட்டும்” என்கிறது!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is விளையாட்டில் மறைந்த விரோதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  களபம்
Next