“மங்கள” ச்லோகம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இந்தப் புஸ்தகத்தில் – “ஸீதா ராவண ஸம்வாத”த்தில் – கவி கணேச ஸ்துதி ஆரம்பத்தில் கூறியிருக்கிறார். அதில்தான் சந்த்ரமௌலி ஸம்பந்தமாக ஒரு கணேச லீலை வருகிறது. அது ப்ரணய கலஹத்தில் ஊடியிருந்த பார்வதீ பரமேச்வராளை ஒன்று சேர்த்து வைத்து, நம் மனஸில் பரம மங்களமான ஒரு உணர்ச்சியை உண்டாக்குகிறது. ‘மங்கள ச்லோகம்’ என்பது நிஜமாகவே ரொம்பவும் மங்களமாயிருக்கிறது. ஆனால் இந்த ச்லோகம் சித்ரகவியாக இல்லை. ஸ்வாபாவிகமான (இயற்கையான) கவிதா ரஸத்தோடு அமைந்திருக்கிறது.

க்ரீடாருஷ்டாத்ரிஜாங்க்ரி ப்ரணத – சிவ – சிரச் – சந்த்ரகண்டே கராக்ரம்

லீலாலோலம் ப்ரஸார்ய ஸ்புர தம லபிஸாசங்கயா (ஆ)க்ரஷ்டுகாம: |

உத்யத் ஹ்ருத்ய ஸ்மிதாப்யாம் அஹமஹமிகயா (ஆ)லிங்க்யமாந: சிவாப்யாம்

கச்சிந் – நச்சிந்திதார்த்தம் கலயது களபோ பால லீலாபிராம: ||

குட்டியானையான கணபதி குழந்தை விளையாட்டில் களிக்கிறது: “களபோ பாலலீலா அபிராம:”

அந்த ஆனந்தக் குழந்தை நாம் விரும்பி நினைக்கிற பொருளையெல்லாம் நமக்கு அருளட்டும் : “ந: சிந்தித அர்த்தம் கவயது.”

இது கடைசி வரி,

முதல் மூன்று வரிகளில் அது பண்ணும் விளையாட்டு போக்கிரித்தனம் என்று சொல்வதா, நிஷ்கபடமாக விளையாடுகிறது என்று சொல்வதா, என்று புரியாத விளையாட்டு எப்படியானாலும் ரஸித்து மகிழும்படியாக இருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is சித்ர கவிதை
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஊடல்-கூடலின் தத்வார்த்தம்
Next