ருத்ரன் – சிவன் (சிவம், நடராஜா) – மஹேச்வரன் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

த்ரிமூர்த்திகள், அவர்களுக்கும் ஆதாரமான பரப்ரஹ்மம் என்று குருவைக் கொண்டாடும் விஷயமாகக் கொஞ்சம் அலசிப் பார்க்கலாமென்று ஆரம்பித்தேன். முதல் மூர்த்தியான ப்ரஹ்மா விஷயத்தின் அலசல் நீண்டு விட்டது.

த்ரிமூர்த்திகளை முதலில் சொல்லியிருக்கிறது: குருர் – ப்ரஹ்மா, குருர் – விஷ்ணு, குருர் தேவோ மஹேச்வர:

ப்ரஹ்ம – விஷ்ணு – ருத்ரர் என்று சொல்வார்கள். ப்ரஹ்ம – விஷ்ணு – சிவன் என்பதில்லை. சிவபக்தர்கள் சிவன் மும்மூர்த்திகளில் ஸம்ஹார மூர்த்தியாக இருப்பவன் அல்ல என்பார்கள். சிவனுடைய அநேக ரூபங்களில் ஒன்றுதான் ருத்ரன் என்பார்கள். சிவன்தான் பரமாத்மா. ஸரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆண்பாலில் சிவன் என்று சொல்லாமல் அஃறிணையாக சிவம் என்றே சொல்வார்கள். அந்த சிவம்தான் ஸகல க்ருத்யங்களுக்கும் காரணமான முழுமுதற் கடவுள். ஸகல க்ருதயமும் அடங்கிப்போன சாந்தமும் அதுதான். அதிலிருந்தே லோக வ்யவஹாரார்த்தம் ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹார க்ருத்யங்களைச் செய்யும் ப்ரஹ்ம – விஷ்ணு – ருத்ரர் தோன்றுவது. சைவத்தில் – சாக்தத்திலும்தான் – இந்த மூன்றோடு இன்னும் இரண்டு க்ருத்யங்கள். பஞ்ச க்ருத்யம் என்பதாக. திரோதானம் அல்லது திரோபவம் என்பது ஒன்று. அதுதான் மாயை. லோகத்தை எதிலிருந்து எப்படி உண்டாக்கினான்? அதுதான் புரியவே மாட்டேனென்கிறது. ஏதோ ஒரு மாயா சக்தியினால் இப்படி எல்லாவற்றையும் செப்பிடு வித்தை காட்டுகிறான். அதுதான் திரோதானம். மும்மூர்த்திகளின் கார்யங்களுக்கும் அடிப்படையானது அதுதான். பஞ்ச க்ருதயத்தில் பாக்கியிருப்பது ‘அநுக்ரஹம்’. எப்படியோ ஜீவனுக்கு கர்மா என்ற ஒன்று ஏற்பட்டபின் அதை அநுபவித்தால்தானே தீர்க்கமுடியும்? அதற்கு (1) சரீரம், (2) அதன் புறக்கரணம் மட்டுமின்றி அகக்கரணம் (மனஸ், புத்தி முதலியவை), (3) இவற்றை வைத்துக்கொண்டு வினையை அறுவடை செய்கிற களமாக உள்ள இந்த ஜகத் என்பது, (4) அறுவடையை அநுபவிப்பது என்பவை தேவையாயிருக்கின்றன. (முறையே) தநு, கரணம், புவநம், போகம் என்று சொல்லும் இந்த நாலையும் பரமாத்மா கொடுப்பதுதான் ‘அநுக்ரஹம்’. இது சின்ன அநுக்ரஹம். பெரிய அநுக்ரஹம், கடைசியில் இதெல்லாவற்றிலிருந்தும், அதாவது திரோதானத்தினால் உண்டான மாயா லோக வாழ்க்கையிலிருந்தே, ஜீவனை விடுவித்து மோக்ஷ பதத்தைத் தருவதுதான். நடராஜாவின் குஞ்சிதபாதம் அந்தப் பதத்தைத்தன் தருகிறது. அதனால்தான் தூக்கிய திருவடி என்று அதற்கு ஏற்றம்.

நடராஜாவின் நாட்டியத்திற்குப் பஞ்சக்ருத்ய பரமானந்தத் தாண்டவம் என்று பெயர். ஒரு கையில் அவர் பிடித்துக் கொண்டிருக்கிற டமருகத்தின் சப்தத்தினால்தான் ஸ்ருஷ்டி உண்டாகிறது. அபயஹஸ்தத்தினால் ‘ஸ்திதி’ என்ற பரிபாலனம் செய்கிறார். இன்னொரு கையிலிருக்கும் அக்னியால் ஸம்ஹாரம் பண்ணுகிறார். முஸலகனின் மேலே ஊன்றியிருக்கிற அவருடைய வலது பாதத்தால் திரோதான க்ருத்யத்தை நடத்துகிறார். முடிவாக, குஞ்சித பாதம் என்ற இடது திருவடியைத் தூக்கிக் காட்டி, “இதைப் பிடித்துக் கொண்டால் அதுதான் மோக்ஷாநுக்ரஹம்” எனறு தெரிவிக்கிறார்.

நடராஜா சிவம் என்ற பரமாத்மாவாக, ஸகல கார்ய காரண மூலமாக இருப்பவர். அவரிடமிருந்து ஒவ்வொரு கார்யத்திற்கு ஒவ்வொரு மூர்த்தி வருகிறார். இப்படி வரும்போது ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரத்துக்கு ப்ரஹ்ம – விஷ்ணு ருத்ரர்கள் இருப்பதுபோல திரோபவ, அநுக்ரஹ கர்த்தாக்களாகவும் இரண்டு மூர்த்திகள் இருக்கவேண்டுமல்லவா? திரோபவ கர்த்தாவுக்குத்தான் ‘ஈச்வரன்’ என்று பெயர். நடைமுறையிலும், இதர சாஸ்திரங்களிலும் ‘ஈச்வரன்’ என்பதற்கு என்ன அர்த்தம் கொடுத்தாலும், சைவ சாஸ்திரப்படி ‘ஈச்வரன்’ என்றால் திரோபவம் என்கிற மாயையைச் செய்யும் மூர்த்தி என்றே அர்த்தம். வெறுமே ‘ஈச்வரன்’ என்று சொல்லாமல் ‘மஹேச்வரன்’ என்பார்கள். ‘அநுக்ரஹ’ கர்த்தாவுக்கு ஸதாசிவன் என்று பேர்.

சுருங்கச்சொன்னால், சைவ சாஸ்திரப்படி, சிவம் என்ற பரமாத்ம வஸ்து ப்ரஹ்ம – விஷ்ணு – ருத்ர – மஹேச்வர – ஸதாசிவர்களைக் கொண்டு ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹார – திரோதான – அநுக்ரஹங்கள் என்ற பஞ்ச க்ருத்யங்களைச் செய்கிறது. சாக்தத்தில் சிவத்துக்குப் பதில் சக்தியைப் “பஞ்சக்ருத்ய பராயணா” என்று சொல்லியிருக்கிறது.

ருத்ரன் ஸம்ஹார கர்த்தா. (“குருர் ப்ரஹ்மா”) ச்லோகத்திலோ “மஹேச்வர:” என்று சொல்லியிருக்கிறது. “குருர் – தேவோ – மஹேச்வர:“. ஆனாலும் இங்கே மஹேச்வரன் என்பதைத் திரோதானகர்த்தா என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளாமல் ஸம்ஹாரகர்த்தா என்று பண்ணிக் கொள்வதுதான் பொருத்தம். முதலில் ப்ரஹ்மா, விஷ்ணு என்று ச்ருஷ்டி, ஸ்திதி கர்த்தாக்களைச் சொன்னதால் அடுத்து ஸம்ஹார கர்த்தாவைச் சொல்வதுதானே பொருத்தம்? சைவ சாஸ்த்ரப்படி நுணுக்கமாகப் போகாமல் ஸாதாரணமாக சிவம், சிவன், ஈச்வரன், மஹேச்வரன், ருத்ரன் என்ற எல்லாவற்றையும் ஒருவனுக்கே பேராகச் சொல்வதுபோலவே இங்கேயும் சொல்லியிருக்கிறதென்று அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ப்ரம்மாவின் தொழில் கருணையானதே!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  வைஷ்ணவத்தில்
Next