வார வழிபாடு : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘வார வழிபாட்டுச் சங்கம்’ என்று ஊருக்கு ஊர் இருக்க வேண்டும் என்று நான் ஓயாமல் சொல்லி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். வாரத்தில் ஒருநாள் ஜனங்களையெல்லாம் ஒன்று சேர்த்துக் கோயிலில் வழிபாடு நடத்த வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இதர மதஸ்தர்கள் அத்தனைபேரும் இதை யாரும் சொல்லாமலே தாங்களாகச் செய்து வருகிறார்கள். இதன் ப்ரத்யக்ஷ சக்தியால்தான் அவர்களுக்குப் புது ஸ்வதந்திர தேசமே முதற்கொண்டு கிடைக்கிறது! நமக்கோ லோகம் முழுக்க ஏற்கனவே இருந்த கௌரவமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருக்கிறது! நம் ஜனங்கள் எல்லாரும் வாரத்தில் ஒரு நாளாவது ஒன்று சேர்ந்து தங்கள் கோணா மாணாவையெல்லாம் விட்டுவிட்டு பகவானிடம் கொஞ்சம் மனஸைக் கரைத்தால்தான் இந்த தேசத்துக்கு ஏதாவது நல்லது பிறக்க முடியும் என்றுதான் ‘வார வழிபாட்டுச் சங்கம்’ நிறுவச் சொல்லி அநேக இடங்களில் ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களே மேலே சொன்ன மற்ற பரோபகார, ஜீவாத்ம கைங்கர்யப் பணிகளையும் எடுத்து நடத்த வேண்டும். தனி ஆர்கனைஸேஷன் எதுவும் வேண்டாம்.

மாயவரத்திலிருக்கிற திருப்பாவை-திருவெம்பாவைக் குழு இம்மாதிரி அநேகப் பணிகளைத் திட்டம் போட்டுச் செய்து வருகிறது. அதன் முக்ய நோக்கம் பாவை மஹாநாடு நடத்துவதும், பாவைப் புஸ்தகங்களைப் பள்ளிக்கூடப் பசங்களுக்கு ஃப்ரீயாக டிஸ்ட்ரிப்யூட் செய்து பரீக்ஷை பண்ணி, ப்ரைஸ் தருவதும்தான். இவற்றோடுகூட (1) ஜெயில் கைதிகளுக்கு பக்தி நூல்கள் கொடுப்பது; அவர்களை பஜனை பண்ண வைப்பது, (2) ஆஸ்பத்திரி நோயாளிகளுக்குப் பிரஸாதமும், ஸ்தோத்ரப் புஸ்தகங்களும் விநியோகிப்பது, (3) ஸத்ஸங்கம் யார் ஏற்படுத்தித் தெரிவித்தாலும் அவர்களுக்கு மத ஸம்பந்தமான பிரசுரங்கள் அனுப்புவது, (4) அநாதைப் பிரேத ஸம்ஸ்காரம் பண்ணுவது, (5) வெட்ட வெளியில் கோயிலில்லாமல் இருக்கிற மூர்த்திகளுக்கும், இடிந்து பாழான கோயிலிலுள்ள மூர்த்திகளுக்கும் கொட்டகை போட்டு, அங்கே, பூஜைக்கு ஏற்பாடு பண்ண முடியாவிட்டாலும், ஒரு அகலையாவது ஏற்றி வைக்கப் பண்ணுவது, (6) , கோயில் நந்தவனங்களைப் பராமரிப்பது, (7) பசுக்களுக்கு மேய்ச்சல் திடல் வளர்ப்பது; அதுகள் சொறிந்து கொள்ளக் கல் நாட்டுவது, (8) சுமைதாங்கி நாட்டுவது, (9) வார வழிபாடு என்கிறனே, அதன்படி பிரதிவாரமும் ஒரு கிழமையில் பகவந் நாம பஜனையுடன் உள்ளூரிலோ, வெளியூரிலோ அருகேயுள்ள ஒரு கோயிலுக்குப் போய்ப் பிரதக்ஷிணம் பண்ணி கோபுர வாசலில் கொஞ்சம் கொஞ்சம் நாழி மௌனம், த்யானம், நாம ஸ்மரணம், ஸங்கீர்த்தனம், பிரவசனம் முதலியன பண்ணுவது – என்று பல காரியங்களை செய்கிறார்கள்.

”வாரத்தில் ஒரு நாள் கூட்டு வழிபாடு, வாரத்தில் ஒரு நாள் பொதுப்பணி என்றால் எப்படி முடியும்? ஒரு நாள் தானே ‘லீவ்’ இருக்கிறது?” என்று கேட்பீர்கள். அந்த ஒரு நாளிலேயேதான் இரண்டையும் சேர்த்துச் செய்யச் சொல்கிறேன். தெய்வப்பணி, ஸமூஹப்பணி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஞாயிற்றுக்கிழமை தோறும் செய்ய வேண்டும்.

முதலில் கோவில் வாசலில் எல்லா ஜனங்களும் சேர்ந்து வழிபட்டு, அத்தனை பேரும் அந்த ஒரே பராசக்தியின் குழந்தைகளாகச் சேர்ந்து பகவந் நாமத்துடனயே கோவிலைப் பிரதக்ஷிணம் பண்ணிக் கொண்டு போய்க் குளம் வெட்டுவதையோ, ரோடு போடுவதையோ, நந்தவனம் வளர்ப்பதையோ செய்ய வேண்டும். வேலையெல்லாம் முடிந்த பின்னும் கோவிலுக்கே திரும்பிவந்து, ”உன் க்ருபையால் இன்றைக்கு கொஞ்சம் பாபத்தைக் கழுவிக் கொள்ள முடிந்தது;சரீரம் எடுத்ததற்குப் பயனாக ஓர் உபகாரம் பண்ண முடிந்தது” என்று நமஸ்காரம் செய்ய வேண்டும். கொஞ்சம் பஜனை – ஒரு பத்து நிமிஷம் இருந்தால் கூடப் போதும் – கொஞ்சம் உபந்யாஸம் நடத்தி விட்டு எல்லாரும் கலைய வேண்டும். அறுபத்திமூவர் அல்லது ஆழ்வாராதிகள் அல்லது பக்த விஜயத்தில் வரும் மஹான்கள் இவர்களைப் பற்றிய உபந்யாஸமாக இருந்தால், நம் மாதிரி மனிதர்களாக இருந்தவர்களே எப்படியெல்லாம் த்யாகத்தாலும், ப்ரேமையாலும் தெய்வமாக உயர்ந்திருக்கிறார்கள் என்று மனஸில் ஆழப் பதியும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is குளம் வெட்டும் பணி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  செலவு விஷயம்;ஜாக்ரதை தேவை
Next