மடத்தில் செய்துள்ள ஏற்பாடு : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஏழெட்டு வயசில் கல்யாணம் பண்ண முடியாவிட்டாலும், சட்டம் அநுமதிக்கிற வயசு வந்தவுடனேயாவது கல்யாணத்தைப் பண்ணிவிட வேண்டும் என்பதற்காக “கன்னிகாதான ட்ரஸ்ட்” என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம்*.

ஏழையான பெண் குழந்தைகளுக்குப் பணம் இல்லாததால் கல்யாணம் நடக்கவில்லை என்று இருக்கக்கூடாது என்ற உத்தேசத்தோடு இந்த டிரஸ்டிலிருந்து வசதியில்லாதவர்களுக்குப் பரம சிக்கனமாகச் செலவுக்குப் பணம் கொடுத்துக் கல்யாணம் பண்ணி வைக்கிறோம். இதற்கு உபகாரம் பண்ணுவது பெரிய புண்ணியம். நம்முடைய தர்மத்துக்கு சேவை செய்கிற பாக்கியத்தை இது தரும்.

மற்ற ஜாதிகள் பிராம்மணர்களைப் போல இத்தனை கிரிசை கெட்டுப் போகவில்லை. அந்த ஜாதிகளில் இத்தனை வரதக்ஷிணைக் கொடுமையோ, பெண்கள் இத்தனை பெருவாரியாகக் காலேஜ் படிப்பு, உத்யோகம் என்று போய் ஸ்வயேச்சையாகத் திரியும்படித் ‘தண்ணி தெளித்து’ விட்டிருக்கிற நிலைமையோ இல்லை. ஆதலால் ஏழைப் பிராம்மணப் பெண்களை உத்தேசித்தே இந்த டிரஸ்ட் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.

இந்த கன்னிகாதான டிரஸ்டுக்கும் சரி, வேதரக்ஷண நக்ஷத்திரக் காணிக்கைக்கும் சரி, பிராம்மணர்களைத் தவிர மற்றவர்களிடம் பணம் வாங்கக் கூடாது என்பது என் அபிப்ராயம். காரணம், இவன் பண்ணின தப்புக்கு மற்றவர்களை penalty [அபராதம்] செலுத்தும்படிப் பண்ணக்கூடாது என்பதுதான். வேதத்தை விட்டது இவன் பண்ணின பெரிய தப்பு. சட்டத்துக்கு உட்பட்டுகூட அதன்படியான மினிமம் வயசிலும் பெண்களுக்குக் கல்யாணம் பண்ணாமல் விட்டிருப்பது, அதே மாதிரி அல்லது அதைவிடப் பெரிய தப்பு. அதனால் இந்தத் தப்புக்களை நிவருத்தி பண்ணுவதற்காகச் செய்திருக்கிற ஏற்பாடுகளுக்கு இவனேதான் பணம் கொடுக்க வேண்டும். மற்றவர்களை உபத்ரவிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் இது இரண்டோடு மூன்றாவது தப்பாகும். பிராம்மணன்தான் இப்பொழுது எந்தத் தொழிலுக்கு வேண்டுமானாலும் போய் சம்பாதிக்கிறானே! வேண்டாத க்ளப்களுக்கும் கேளிக்கைகளுக்கும் யதேஷ்டமாகச் செலவழிக்கிறானே! அதனால் இவனேதான் இந்த இரண்டுக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் அபிப்ராயம்.

திருமாங்கல்யம், கூறைப்புடவை, மூஹூர்த்த வேஷ்டி இவை கொடுத்து வெகு சிக்கனமாகக் கல்யாணத்தை முடிப்பதற்கு கன்னிகாதான டிரஸ்டின் மூலம் திரவிய ஸஹாயம் செய்யப்படுகிறது.

வேதரக்ஷணத்துக்காகப் பண்ணிய ஏற்பாடுகளின் அளவுக்குக் கூட இந்தக் கன்யாதான ஏற்பாடு திருப்திகரமாகப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை. இதை ரொம்ப வருத்தத்தோடு சொல்கிறேன். கடப்பாரையை முழுங்கினவனுக்கு சுக்குக் கஷாயம் கொடுத்த மாதிரி, குட்டிச் சுவராகப் போன பிராம்மண சமூகத்துக்கு ஏதோ துளிதான் இதனால் பண்ண முடிந்திருக்கிறது. இப்போது கரை புரண்டு வந்திருக்கிற அதர்மப் பிரவாஹத்துக்கு அணை போட வேண்டும் என்ற எண்ணமே பெண்ணைப் பெற்றவர்களுக்கு இல்லாததால் ட்ரஸ்டை utilise செய்து கொள்ள [பயன்படுத்திக் கொள்ள] போதுமானவர்கள் வரவில்லை. காலத்தில் கல்யாணமாகவில்லையே என்ற கவலை பெண்ணைப் பெற்றவர்களுக்கு விட்டுப் போய், அவர்கள் பாட்டுக்குப் பெண்ணை சம்பாத்தியத்துக்கு விட்டுவிடலாம் என்று ஹாய்யாக நினைக்கிற பொழுது, நாங்கள் ‘டிரஸ்ட்’ வைத்து என்ன பண்ணுவது? இப்போது பெண்ணைப் பெற்றவர்கள் பிள்ளை தேடுவதற்குப் பதில் அவளுடைய உத்தியோகத்துக்குத்தான் ரெகமன்டேஷன் தேடுவதாக நம் தேசத்தில் துர்த்தசை ஏற்பட்டிருக்கிறது. மிஞ்சினால் வருஷத்தில் ஐம்பது கலியாணத்துக்கு உதவி செய்கிறோம். ஒரு வருஷத்தில் ஐயாயிரம் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். அதைப் போலப் பத்து மடங்கு பெண்கள் உத்தியோகம் தேடி அலைகிறார்கள் என்றால் நாங்கள் சொல்கிற வயசில் கல்யாணம் பண்ணிக்கொள்ள 50 பேர்தான் கிடைக்கிறார்கள்! இந்த டிரஸ்ட் வைத்தது, ஏதோ என் duty-ல் நான் fail ஆகவில்லை என்று என்னை நானே ஸமாதானப் படுத்திக் கொள்ளத்தான் கொஞ்சம் பிரயோஜனப்படுகிறது!

சட்ட வரம்பு தாண்டினவுடனேயே கல்யாணம் பண்ணிக் கொடுக்கும்படியாகவாவது முன்னேற்பாடுகளைத் தயாராகச் செய்துவைத்துக் கொள்ளும்படி தாயார் தகப்பனார்மார்களுக்கு ஒரு மானம், வேகம், சுரணை பிறக்காதா என்பதால் இப்படி பச்சையாகச் சொல்கிறேன்.


* க‌ன்னிகாதான‌ ‘ட்ர‌ஸ்ட்’ முக‌வ‌ரி “ஸ்ரீ காஞ்சி காம‌கோடி ச‌ங்க‌ர‌ ம‌ட‌ம், காஞ்சீபுர‌ம்” என்ற‌ முக‌வ‌ரிக்கு எழுதித் தெரிந்து கொள்ள‌லாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is மணப்பிள்ளையின் கடமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வாஸ்தவமான சீர்திருத்தம்
Next