சுயேச்சையும் கட்டுப்பாடும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இங்கே ஒரு பொதுவான விஷயம் சொல்லவேண்டும். எவ்வளவுதான் அலசி அலசி விரிவாக எழுதினாலும் நூறாயிரம் சமாசாரங்கள் வந்து சேர்கிற மநுஷ்ய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சமும் இப்படித்தான் என்று எழுதிவைத்து நிர்ணயம் பண்ண முடியாது. எழுத்திலே நிர்த்தாரணம் செய்வது சட்டம் மாதிரி நிர்ப்பந்தமாகத்தான் தோன்றும். நன்றாகக் கட்டுப்பாடு செய்கிற சட்ட விதிகள் வேண்டும்தான். நம் சாஸ்திரங்களில் இப்படி நிறைய இருக்கத்தான் செய்கின்றன. சுதந்திரம், ஜனநாயகம் என்று பெரிசாகச் சொல்வதெல்லாம் யதார்த்தத்தில் மனம் போனபடி நடப்பதாகவும், அசக்தமான‌ நல்லவர்களை பலிஷ்டரான முரடர்கள் ஸ்வயேச்சையாக அடக்கி ஒடுக்கிக் கஷ்டப்படுத்துவதாகவுமே இருப்பதைப் பார்க்கிறோம். ஆகையால், விதிகளைப் போட்டு ஜனங்களைக் கட்டுப்படுத்தத்தான் வேண்டும். ஆனாலும் இதிலும் ஒரு ‘லிமிட்’ வேண்டும். கட்டுப்பாடு பண்ணுவதற்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். இல்லாவிட்டால் மநுஷ்ய ஸ்வபாவப்படி, ஒரேயடியாகச் சட்டம் போட்டு நெரித்தால் உத்ஸாகமே போய்விடும். ரொம்பவும் கட்டுப்படுத்தினாலே ரொம்பவும் அறுத்துக் கொண்டு ஓடத் தோன்றும்.

இதனால் நம் சாஸ்திரங்களில் எல்லாவற்றையும் எழுதி வைத்து சட்டமாகத் திணிக்காமல், பல விஷயங்களில் பெரியவர்கள் பண்ணுகிறதைப் பார்த்தே மற்றவர்கள் மனமொப்பி, தாங்களாக, ஸ்வயேச்சையாக அதே மாதிரி செய்யும்படி விட்டிருக்கிறார்கள். என்னை நீங்கள் பெரியவன் என்று வைத்துக் கொண்டு விட்டால், என்னைப் பார்த்து நான் பண்ணுகிற மாதிரி நீங்களும் நெற்றிக்கு இட்டுக் கொள்ள வேண்டும், பூஜை பண்ண வேண்டும், பட்டினி கிடக்க வேண்டும் என்று ஸ்வயேச்சையாக ஆரம்பிக்கிறீர்கள் இல்லையா? இந்த மாதிரி சில விஷயங்களை personal example (இன்னொருத்தரின் வாழ்க்கை உதாரணம்) , tradition (மரபு) , தேச வழக்கம் (local custom), குடும்ப வழக்கம் இவற்றைப் பார்த்தே பண்ணும்படியாக விட்டால்தான் பாக்கிக்குச் சட்டம் போட்டு விதிகளாக எழுத்தில் எழுதி வைக்கிறபோது அவற்றை ஜனங்கள் சிரத்தையுடன் அநுஸரிக்க விரும்புவார்கள்.

வாழ்ந்து காட்டி பிறத்தியாரையும் அப்படிச் செய்ய வைப்பது ரொம்ப உசத்தி. அப்புறம் வாய் வார்த்தையாகப் பேசி, compulsion (நிர்பந்தம்) இல்லாமல் ஸ்வயேச்சையாக ஏற்கிற மாதிரி persuasion மூலம் பண்ண வைப்பது இரண்டாம் பக்ஷம். கடைசி பக்ஷம்தான் விதியாக எழுதி வைத்துக் கட்டாயப்படுத்துவது. ஸஹஸ்ரம் வத; ஏகம் மா லிக என்று வசனம் கூட உண்டு. ‘ஆயிரம் விஷயத்தை வாய் வார்த்தையாகச் சொல்; ஆனால் அதில் ஒன்றைக் கூட எழுதி வைத்து நிர்ப்பந்தம் பண்ணாதே’ என்பது இதற்குத் தாத்பரியம். இப்போது எடுத்ததற்கெல்லாம் written laws (எழுத்து மூலம் சட்டம்)! கையில் பேனா கிடைத்தவனெல்லாம் தன் அபிப்ராயத்தை எழுதி ‘பப்ளிஷ்’ பண்ணிவிடுகிறான்!

மநுஷ்யனுக்கு சுதந்திரமே தராமல் ஹிந்து தர்மசாஸ்திரங்கள் ஆயிரம் சட்டம் போடுகின்றன என்று இக்காலத்தவர் கண்டித்தாலும், அதிலே இந்த சுதந்திரத்தை மதித்துப் பல விஷயங்களை விட்டுத்தான் வைத்திருக்கிறது. ஜீவன் இஷ்டப்படி போய், தானும் கெட்டு லோகத்தையும் கெடுக்காமலிருக்க வேண்டுமானால் எல்லா விஷயத்திலுமே ஒரு நிர்ணயம் இருக்கத்தான் வேண்டும் என்று நம் சாஸ்திர கர்த்தாக்கள் கருதியிருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட நிர்ணயங்கள் எல்லாவற்றையும் ஜனங்கள் எழுத்து மூலம் சட்டமாக எடுத்துக் கொள்வதானால் ரொம்பவும் கட்டி வைக்கிற மாதிரி நினைப்பார்கள். ஆகையால், ‘சிலவற்றை மட்டுமே எழுதுவோம்; பாக்கியை அவர்களே சுதந்திரமாக சிஷ்டர்களைப் பார்த்தும், மரபைப் பார்த்தும், தேச குல ஆசாரத்தைப் பார்த்தும் அநுஷ்டிக்கட்டும்’ என்று விட்டிருக்கிறார்கள்.

‘சாஸ்திர விதி’ என்னும்போது தோன்றும் நிர்பந்த எண்ணம் பெரியோர் வழி, மரபு என்னும்போது தோன்றுவதில்லை. குல வழக்கம், ஊர் வழக்கம் முதலியவற்றை ஒரு சுய அபிமானத்தோடு ஏற்றுக்கொள்கிறோம்.

இவற்றைக் கடைசி தர்மசாஸ்திர நூலான வைத்யநாத தீக்ஷிதீயந்தான் பெரிய மனஸோடு ஒப்புக் கொண்டது என்றில்லை. பூர்வ கிரந்தங்களும் இதே அபிப்ராயத்தைக் கொண்டவைதான். பெரும்பாலாரால் பின்பற்றப்படுகிற – ‘அதாரிடி’ ஸ்தானம் பெற்ற – ஆபஸ்தம்ப ஸூத்திரத்திலேயே மஹரிஷி ஆபஸ்தம்பர் முடிவில், “நான் இந்த சாஸ்திரத்தில் எல்லா தர்மங்களையும் சொல்லிவிடவில்லை. மீதி எவ்வளவோ இருக்கின்றன. ஸ்திரீகளிடமிருந்தும், நாலாம் வர்ணத்தவரிடமிருந்துங்கூடக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியவை அநேகம் இருக்கின்றன. அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்கிறார்.

இதிலிருந்து ‘ஸ்திரீகளைப் புருஷர்கள் அடக்கி வைத்தார்கள்; பிராமணரல்லாதாரை பிராமணர்கள் கீழே தள்ளியிருந்தார்கள்’ என்று குற்றம் சொல்வதெல்லாம் எவ்வளவு தப்பு எனத் தெரிகிறது. பெரிய தர்ம சாஸ்திர ஆதார நூலிலேயே ஸ்திரீ-சூத்ரர்களின் தார்மிக ஞானத்தை மதித்து, அதற்கு அதிகாரபூர்வமான ஸ்தானம் கொடுத்திருக்கிறது.

கல்யாணங்களில் ஆரத்தி எடுப்பது, பச்சை பூசுவது என்று அநேக விஷயங்கள் பெண்டுகள் சொன்னபடி செய்ய வேண்டும் என்றே ஆச்வலாயனர் முதலான பெரிய ‘ஒரிஜினல்’ ஸூத்ரகர்த்தாக்கள் சொல்லியிருக்கிறார்கள். பந்தற்கால் நடுவதற்கு மந்திரம் இருந்தாலும்கூட, அது விஷயமாகப் பந்தல் போடுகிற வேலைக்காரன் ஒரு ஐதிகம் சொன்னால் அதையும் கேட்கத்தான் வேண்டும்.

இப்படியெல்லாம் சாஸ்திரங்களில் ஒரே கெடுபிடிக் கட்டாயம் பண்ணாமல் எல்லாருக்கும் கொஞ்சம் ஜனநாயக சுதந்திரம் கொடுத்துத்தான் இருக்கிறது.

நாலாம் வர்ணமான சூத்திரர்களுக்கு உள்ள ஸம்ஸ்காரங்களையும் அநுஷ்டானங்களையும் தர்ம சாஸ்திரங்கள் சொல்லியிருக்கின்றன. அந்த ஜாதியை அலக்ஷ்யம் பண்ணவே இல்லை. தீஷிதீயத்தில் வர்ணாச்ரம காண்டத்திலும், ஆன்ஹிக காண்டத்திலும், சிராத்த காண்டத்திலும் இவை உள்ளன.

பொதுவாக, தர்ம சாஸ்திரங்களில் ஆசார காண்டம், வியவஹார காண்டம் என்று இரண்டு உண்டு. ஒழுக்கங்களை ஆசாரம் என்பார்கள். அவற்றை நடைமுறையிலான வெளிக்காரியங்களில் பின்பற்றுவதே வியவஹாரம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is வைத்யநாத தீக்ஷிதீயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  சின்னங்கள்
Next