பிரம்மசாரியின் லக்ஷணம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஒவ்வொரு நாளும் பிரம்மசாரிகள் அக்னி காரியம், அதாவது ஸமிதாதனம் (சுள்ளிகளை மந்திரபூர்வமாக ஹோமம்) பண்ண வேண்டும். பிக்ஷாசர்யம் (பிக்ஷை எடுத்தல்) செய்ய வேண்டும். அலவணமாக (உப்பில்லாமல்) சாப்பிட வேண்டும். பிரம்மசாரிகளில் பிராம்மணன் பலாச (புரச) தண்டமும், க்ஷத்ரியன அச்வத்த (அரசு) தண்டமும், வைசியன் அத்தி தண்டமும் வைத்துக் கொள்ள வேண்டும். ‘ச்ருத தாரண’த்துக்காகத் தண்டம் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது எதை அத்தியயனம் பண்ணுகிறானோ அதைக் கெட்டியாக இருத்திக் கொள்வதற்கு அப்படிச் செய்ய வேண்டும். இடிதாங்கி, ஏரியல் என்றெல்லாம் இல்லையா? அப்படி மநுஷ்யனுக்கானது இந்த தண்டம். இடிதாங்கி scientific [விஞ்ஞான பூர்வமானது] என்றால் தண்டமும் scientific தான். வேதத்திலுள்ள எல்லா மந்திரங்களும் மறவாமல் மனதில் இருக்கும்படி பாதுகாக்க தண்டம் வேண்டும். வேத மந்திர சக்தியை தாரணம் பண்ணுவதற்கு அந்த தண்டத்திற்கு ஒரு சக்தி இருக்கிறது. வேதநிதி அகலாமல் இருக்க அதை வைத்துக் கொள்ள வேண்டும். பிரம்மசாரி மேலே கிருஷ்ணாஜினம் (மான்தோல்) போட்டுக் கொள்ள வேண்டும். மேல் வேஷ்டி போட்டுக்கொள்ளக் கூடாது. எலெக்ட்ரீஷியன் மரத்தின் மேல் நிற்கவேண்டும்; ரப்பர் gloves போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற மாதிரி ஆத்மிக மின்ஸாரத்துக்கு பெரியவர்கள் இந்த விதிகளைக் கொடுத்திருக்கிறார்கள்.

இப்பொழுது நாம் ஒரு நாள் உபாகர்மாவைத் தான் பண்ணுகிறோம். அப்புறம் தொடர்ந்து வேதம் படிப்பதில்லை. உத்ஸர்ஜனமும் [ஒரு வேதப்பகுதியைப் படித்து முடிப்பது] பண்ணுவதில்லை. அது பண்ணாததற்குப் பிராயச்சித்தமாக ‘காமோகார்ஷீத்’ ஜபம் பண்ணுகிறோம்; “நான் பாபம் பண்ணவில்லை; காமம் பண்ணியது, கோபம் பண்ணியது; என்னிடம் வராதே; நமஸ்காரம் பண்ணுகிறேன்!” என்று சொல்லுகிறோம். அந்த மந்திரத்துக்கு அதுதான் அர்த்தம். உத்ஸர்ஜனம் பண்ணினால் இந்த ஜபம் அவசியம் இல்லை.

கால நியமம், விரத நியமம், ஆஹார நியமம் முதலியவைகளை அநுஷ்டிப்பது பிரம்மச்சரியம். அத்யயனத்தில் ஸ்வர லோபம், வர்ண லோபம் முதலான உச்சாரணத் தப்புக்கள் ஏற்படக்கூடும். இதற்குப் பிராயச்சித்தமாக ஆவணியவிட்டத்தன்று எள்ளு மாத்திரம் சாப்பிட்டு அன்று முழுவதும் பட்டினி இருந்து மறுநாள் 1008 ஸமித்தால் காயத்ரி ஹோமம் பண்ண வேண்டும். இப்பொழுது ஹோமமாக பிரதம சிராவணக்காரர்கள் (தலைப்பூணூல் பையன்கள்) மட்டும் பண்ணுகிறார்கள். மற்றவர்கள் ஹோமமின்றி ஜபம் மாத்திரம் செய்கிறார்கள். இப்படியின்றி எல்லாருமே ஹோமம் செய்ய வேண்டும். வெறும் ஜபம் பண்ணினால் தூக்கம் வருகிறது. அதனால் லோபம் வருகிறது. ஒரு காரியம் இருந்தால் தூக்கம் வராது. அதற்காகவாவது ஸமித்தினால் ஹோமம் பண்ணலாம். பலாஸ ஸமித்தால் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் அச்வத்த ஸமித்தால் பண்ணவேண்டும். கடைசி பக்ஷம் தர்ப்பையினாலாவது பண்ண வேண்டும்.

பிரம்மசாரி சாப்பிடுவதற்கு கணக்கு இல்லை. வயிறு நிறைய சாப்பிடலாம். ஆனாலும் நாக்கு ருசியைக் குறைக்க வேண்டும். இவன் இஷ்டப்படியான சமையலாக இருக்கக்கூடாது, பிக்ஷையில் எது கிடைக்கிறதோ அதையே சாப்பிட வேண்டும் என்பதும் இவனை பிக்ஷை எடுக்க வைத்ததற்கு ஒரு காரணம். மூல காரணம், பிச்சை எடுப்பதால் இவனுக்கு விநயம் ஏற்படும் என்பதே. ருசி பார்க்கக் கூடாது என்றாலும் ஆஹாரத்தின் அளவுக்கு கட்டுப்பாடு இல்லை. பிரம்மசாரி வயிறாரச் சாப்பிட வேண்டும். பட்டினி முதலிய உபவாஸங்களை பிரம்மசாரிக்கு சாஸ்திரங்கள் விதிக்கவில்லை. வளர்கிற பருவத்தில் அவன் புஷ்டியாக இருக்க வேண்டும். அதே ஸமயம் ஸத்வ குணத்தோடு, முரடாக இல்லாமல் இருக்க வேண்டும். குரு சுச்ருஷை இப்படிப்பட்ட ஸத்வ குணத்தை ஊட்டவே ஏற்பட்டது.

தனது வேத சாகையையும், சதுர்தச வித்யைகளில் மற்றவற்றையும் பன்னிரண்டு வருஷ குருகுல வாஸத்தில் கற்றுத் தேற வேண்டும். பிறகு ஸமாவர்த்தனம் பண்ணிக் கொண்டு அகத்துக்குத் திரும்பிப் போய் விவாஹம் செய்து கொள்ள வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is சாஸ்திர விதியும், பொது வழக்கும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பிரம்மச்சாரியன் லக்ஷணம்
Next