மைந்தரை வளர்க்கும் மணத்தக்காளி - Ayurveda Articles | Sri Kanchi Kamakoti Peetham
  1. Home
  2. Articles
  3. Ayurveda Index
  4. மைந்தரை வளர்க்கும் மணத்தக்காளி
ஆயுர்வேதக் கட்டுரைகள்

மைந்தரை வளர்க்கும் மணத்தக்காளி

Sri Kanchi Kamakoti Peetham
மைந்தரை வளர்க்கும் மணத்தக்காளி

வாய்ப்புண்ணா? மணத்தக்காளிக் கீரையை சமைத்து சாப்பிடவும் என்று கூறுவர். மணத்தக்காளி இலையை பறித்து வாயிலிட்டு குதப்பி துப்பினாலே போதும், வாய்ப்புண், உதடு வெடிப்பு, வாய் வேக்காளம் குறைந்து விடும். மணத்தக்காளி விதையை புளித்தமோரில் உப்புப்போட்டு ஊறவைத்து வற்றலாகாக்கிச் சாப்பாட்டில் .வற்றலை நெய் அல்லது எண்ணெயில் பொரித்து உணவாக ஏற்பதன் மூலம் பித்த வாந்தி, குமட்டல், அஜீர்ணம் நீங்கி விடும். கெட்டியான தயிரில் உப்புப்போடாமலும் மணத்தக்காளி விதையை ஊற வைத்து, உப்பில்லா பத்யமான காலங்களில் உணவாகச் சேர்க்கலாம். இலையுடன் தேங்காய் உப்பு சேர்த்து சுண்டச் செய்து சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு நலம் தரும்.

மணத்தக்காளிக்கு காகமாசீ என்று சம்ஸ்கிருதத்தில் பெயர். பார்ப்பதற்கு சிறிதாகவும் அழுகு குன்றி இருக்கும். செடிகளுக்கு பறவையின் பெயரை சூட்டுவது வழக்கம். காகமாசீ என்று பெயர் பெற்றிருந்தாலும் ஒரு அற்புதமான மூலிகை வகையாகும்.

குழந்தைகள் பித்தத்தின் சீற்றத்தினால் உடற்சூடு அல்லது காங்கை, சரிவர உணவு உண்ணாமல் மெலிந்திருத்தல், எப்பொழுதும் சிடுசிடுப்புடன் போகப்படுதல், தூக்கமின்மை போன்றவல்லால் அவதியுறும் நிலையில் காகமாசீ தைலம் 1/2-1 அவுன்ஸ் வரை இரவில் சாப்பிடக் கொடுக்கலாம். பெரியவர்களுக்கு 1-3 அவுன்ஸ் வரை சாப்பிடலாம்.

மணத்தக்காளியை இடித்து ஒரு கிராம் முதல் மூன்று கிராம் அளவில் தேன் குழைத்து சாப்பிட இருமல், சளி, தொண்டையில் சளி அடைப்பு போன்றவை நீங்கி விடும். விதை, இலையை நன்கு வெந்நீருடன் அரைத்து வீக்கத்தின் மீது பற்றிட, வீக்கம் வடிந்து விடும். இலைச்சாறு 1 அவுன்ஸ் வீதம் காலை மாலை வெறும் வயிற்றில் பருகினால் சிறுநீர் தாராளமாக வெளியேறி விடுவதால் உடல் வீக்கம் வற்றிவிடும். கால்பிடிக்கு மேலாக விதையை உண்ணக்கூடாது. அதிக அளவில் சாப்பிட்டால் நீர்போல பேதியாகும். இக்குறை இலையில் இல்லை.

கோடைக்காலத்தில் மணத்தக்காளி கீரை மற்றும் விதையை அடிக்கடி உணவில் சேர்ப்பது நலம். உடல் உஷ்ணத்தைத் தணிப்பதோடல்லாமல் கபத்தையும் கண்டிக்கும் மூலிகையாகும். உடல் கனத்து வாயு உபத்திரவங்கள் நீங்க விதையை நெய்யில் வறுத்து சாப்பிடலாம்.

மைந்தரை காக்கும் காகமாசீ தைலம் ஆயுர்வேத மருந்து கடைகளில கிடைக்கும். கசப்பும் துவர்ப்பும் மிகுந்த மணத்தக்காளியை கோடை காலத்தில் உணவாக சேர்த்து பயன் பெறுவோம்.