ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்


ஸ்ரீ காமகோடி ப்ரதீபம்
மலர் -21 ரௌத்ர வருஷம்: ஆவணி-புரட்டாசி ஆகஸ்டு-செப்டம்பர் 1980 இதழ் 7,8


அஹிம்ஸையின் தத்துவம்

சாஸ்த்ரரத்னாகா எஸ்,ஸுப்ரஹ்மண்ய சாஸ்திரி

     வேதம் கூறுகிறது मा हिस्यात् सर्व भूतानि. ஸ்மிருதிகளும் இவ்வாரு கூறுகின்றன.  இதர மதங்களிலும் இந்த தத்வமுண்டு.  கிறிஸ்து "ஒருவன் வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு இடது கன்னத்தைக் காட்டு" என்றார்.  ஆகவே "அவனை திருப்பி அடித்து ஹிம்ஸிக்காதே" என்பதே அதன் கருத்து.  புத்தர் யஜ்ஞத்தில் ஆடு வதை செய்வதை மறுத்து அஹிம்ஸையை வற்புறுத்தி வேறு மதம் ஸ்தாபித்தார்.

      ஹிம்ஸை என்றால் மரண துன்பத்தைக் கொடுக்கும் செய்கை.  அது கத்தியாலோ வேறு ஆயுதத்தாலோ விஷம் கொடுத்தோ எவ்விதமும் கூடாது என்று பொருள்.  அதிலும் மனுதர்ம சாஸ்திரம் - கொல்பவன், கொல்லச் செய்பவன், அதை ஆதரிப்பவன், மாம்ஸ வியாபாரம் செய்பவன், அதை பக்வம் செய்பவன், சாப்பிடுபவன் அனைவரும் ஹிம்ஸை செய்பவரே என்கின்றது.  யோக சாஸ்திரத்தில் பதஞ்சலி பகவான் கூறுவது ஹிம்ஸை 27 விதம் (1) செய்வது, தூண்டுவது, அனுமதிப்பது என்று மூன்று விதம்.  இவையே (2) மிருதுவானது, மத்யமரீதி, தீவிரமானது என்று ஒவ்வொன்றும் மூன்று விதம் (3) இவையே கோபத்தால் செய்தது, தோல் அல்லது மாம்ஸம் இவைகளுக்காக செய்தது அல்லது மோஹத்தால் அறிவின்மையால் செய்தது என்று மூன்றுவிதம் ஆக 27 விதம்.  இவைகளும் தேசம், ஜாதி, காலம் இவைகளால் குறுக்காமல் இருந்தால் இதே மஹா விரதமாகும் - அதாவது (1) தேசம்-குருக்ஷேத்ரம் முதலிய புண்ய தேசங்களில் கொல்வதில்லை என்பது (2) காலம் - அமாவாஸ்யை முதலிய புண்ய காலங்களில் கொல்வதில்லை என்பது (3) ஜாதி - பசு அல்லது பிராம்மணரைக் கொல்வதில்லை என்பது.  இப்படி விரதத்தை குறுக்காமலிருந்தால் இது மஹாவிரதமாகும்.

      அஹிம்ஸையின் பயன் - பதஞ்சலி முனிவர் இப்படிப்பட்ட அஹிம்ஸகன் எதிரில் ஸஹஜ சத்ருக்களான எலி, பூனைகள், மான், புலி முதலிய ஜந்துக்களும் விரோதத்தைக் காட்டாது; அன்யோன்யமாக இருக்கும் என்கிறார்.  ஆச்ரமங்களில் புலியும் மானுக் ஒரே குளத்தில் நீர் குடித்தன என்கிறார்கள்.  நிசாகாரர் என்ற ரிஷி காலையில் தியானத்துக்கு ஆரம்பிக்குமுன் அவரைக் காண சிங்கம், புலி, கரடி, மான், பசு இவை வந்து அவருக்கு சுற்றிலும் உட்கார்ந்து அவருக்கு நமஸ்காரித்துவிட்டுப் போகும் என்று சொல்கிறது ராமாயணம்.  மஹாபாரதத்தில் ÿவஸிஷ்டருக்கு தன் புத்ரனான சக்தி என்பவனை ஒரு ராக்ஷஸன் கொன்றுவிட்டாதால் கனத்த சோகமேற்பட்டது.  அப்போது அவர் ஒரு பெரிய கருங்கல்லைக்கட்டிக் கொண்டு ஸமுத்ரத்தில் விழுந்தார்.  ஸமுத்ரராஜன் அவரைக் கொல்லமுடியாமல் கயிற்றை அறுத்து அலையால் அவரைக் கரையேற்றினான்.  பின்பு அவர் பல கொடிகளை சுற்றிக் கொண்டு நதியில் விழ நதி அவரைக் கொல்ல முடியாது கொடிகளை அறுத்துக் கரையேற்றியது.  பின்பு தற்கொலை செய்ய முடியாமல் அவர் அந்தப் பிரயத்தனத்தை விட்டார்.  நதிக்கும் விபாசா என்று பெயர் ஏற்பட்டது என்கிறது.  இவை எல்லாம் உண்மையான கதைகள்.  இன்றும் அனுஷ்டித்து பயனை அனுபவிக்கலாம்.  பௌத்தர் தாம் கொல்லாமல் இதர மதத்தினரைக் கொல்லும்படி செய்து மாம்சம் புஜிக்கின்றனர்.  ஆதலால் அவைகளிடமும் முக்யமான அஹிம்ஸை இல்லை.  மஹாத்மா காந்தி அஹிம்ஸகர்.  ஆனால் அவரை ஒருவன் சுட்டுக் கொன்றான் என்றால் அவருடைய அஹிம்ஸையும் பூர்ண அஹிம்ஸை அல்ல என்று ஏற்படுகிறது.  சரித்ரத்தில் அவர் தம் வீட்டில் ஓர் கன்று சாகும் தருவாயில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததைக் சகிக்காமல் அதைக் சுட்டுக் கொன்று அதன் துக்கத்தை போக்கினார் என்று படிக்கிறோம்.  தேசத்தில் உணவு பற்றாத சமயம் அவர் சமுத்ரத்தில் உள்ள மீன்களைப் பிடித்து உண்ணலாம் என்று அறிக்கை விடுத்ததும் அஹிம்சைக்குப் புறம்பானதே.  வைதீக தர்மத்தில் பெரிய யாகங்களில் ஆட்டைக் கொன்று அதன் வபை மாம்ஸம்  இவைகளை ஹோமம் செய்கிறார்களே என்று புத்தர் தூஷித்தார்.  வேத வியாஸரே அஹிம்ஸை தர்மம் போதிக்கும் வேதமே சொல்வதால் யாகத்தில் செய்வது தோஷமில்லை என்கிறார்.  அது சுயநல நோக்கம் கொண்டது இல்லை.  உலக நன்மைக்காக செய்யப்படுவது.  ஆகவே யாகம் தவிர இதர இடங்களில் செய்வது ஹிம்ஸையே; அதர்மம் என்கிறார்.

 

            நாம் தினமும் புஜிக்கிற தான்யத்திலும் ஜீவன் இருக்கிறது. கீரை முதலிய காய்கறிகளிலும் ஜீவன் உண்டு.  ஆகவே அவைகளை இம்சிக்காது நாம் உயிருடனிருக்க முடியுமா?  இதற்காகவே சாஸ்திரம் வைச்வதேவம் என்ற கர்மத்தை பிரம்மணன் செய்யும்படி வற்புறுத்துகிறது.  அதாவது कणुंन पॆषणं चुल्ली उदकुंभश्च मार्जनॊ पञ्चसूना गृहस्थस्य पञ्च यज्ञाद्विनश्यति  என்ற சாஸ்திரம் உரல் உலக்கை, அம்மி முழவி, அடுப்பு விறகு, ஜலம், துடைப்பத்தால் பெருக்குவது என்ரு ஐந்தும் கிருஹஸ்தனுக்கு தவிர்க்க முடியாதவை.  இதனால் ஏற்படும் பாவத்தைத் தீர்க்க பஞ்சமஹாயக்ஞம் அதாவது வைச்வ தேவாதிகளைச்செய் “यज्ञशिष्टाशिन्:सतॊ मुच्यन्तॆ सर्वकिल्बिषै:” என்கிறார்.  “न पचॆदन्नमात्मनॆ”  भुञ्चतॆ तॆत्वघं पापा यॆ पचन्त्यात्मकारणात्                                         என்று மனிதன் தனக்காக என்று சமயல் செய்தால் அவன் பாபத்தையே  புசிக்கிறான் என்கிறார்.  ஆகவே இந்த வைச்வ தேவ கர்மத்தால் ஹிம்ஸாபாபத்தை வெல்லலாமே ஒழிய ஹிம்ஸை செய்யாதிருக்க இயலாது என்று ஏற்பட்டது.  ஸன்யாசிகளோ, பிக்ஷை எடுக்கும் பிரம்மசாரிகளோ பயப்பட வேண்டாம்.  ஏனெனில் அவர்களுக்குப் பிக்ஷை போடும் கிருஹஸ்தர்களே பாபத்தை போக்கி விடுகிறார்கள்.  வைச்வதேவம் செய்ய முடியாதவர் பகவானுக்கு ஆகாரத்தை நிவேதனமாவது செய்துவிட்டுப் புசித்தல் வேண்டும்.  ஏன்?  இந்த புவியில் உள்ள ஸமஸ்த ஆகாரமும் இவைகளை சிருஷ்டி செய்த பகவானுக்கு சொந்தம்.  ஆகவே அந்த ஆகாரத்தை அவனுக்குத் தெரிவிக்காது எடுத்துக் கொண்டால் அது திருடுவது போலாகும்.  இதையும் பகவான்  तैर्दत्तानप्रदायैभ्यॊ यॊ भुक्तॆ स्तॆन एव स: என்ற வாக்யத்தால் கூறுகிறார்.  நிவேதனம் செய்தால் அவன் அனுமதி கிடைக்கும்.

            மஹாபாரதத்தில் ÿகிருஷ்ண பகவான் எதிரில் கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் யுத்தம் நடக்கிறது.  கர்ணன் கை ஒங்குகிறது.  அப்பொழுது தர்மபுத்திரர் சொல்கிறார் - "அர்ஜுனா! உன் காண்டீபத்தைக் கொண்டு உன்னால் யுத்தத்தில் ஜயம் பெற முடியாது.  அதை இன்னொருவரிடம் கொடு-" என்றார்.  அர்ஜுனனுக்கு மிகுந்த கோபம் வந்தது.  என் காண்டிபத்தை இன்னொருவரிடம் கொடு என்று சொல்லி என் ஆயுதத்தை பழிப்பவரை கொல்வதாக உறுதி மொழி செய்திருக்கிறேன்.  ஆதலால் இப்பொழுது தர்மபுத்திரரைக் கொல்வேன் என்று வாளை உருவுகிறான்.

      ÿகிருஷ்ணன்: அர்ஜுனா! உன்னைப் போல் மூடனை நான் உலகில் கண்டதில்லை.  அண்ணன் மஹாபூஜ்யன்.  தர்மத்தின் அவதாரம்; அவனை அர்சிக்க வேண்டியிருக்க அவனைக் கொல்வது என்று எண்ணுவதுமுண்டோ" என்றார்.  அர்ஜுனன் தன் பிரதிக்ஞையை என்ன செய்வது என்றான்.

            பகவான்:  கொல்வது என்பது உயிர் நீக்குவது மாத்திரமல்ல.  பெரியோரை மரியாதையின்றி ’நீ’ என்று கூப்பிட்டாலும் அது கொல்வதேயாகும்.  அஹிம்ஸை, ஸத்ய வசனம் என்பதெல்லாம் அறிந்து செய்ய வேண்டும்.  ஓர் மனிதன் காட்டில் கடும் தவம் செய்து வந்தான்.  ஒரு சமயம் வேட்டையாடும் அரசன் தவறுதலாக அவன் பேரில் பாணம் போட்டு அவன் உயிர் துறந்தான்.  உடனே ஆகாயத்திலிருந்து புஷ்பவிருஷ்டி பெய்தது.  தேவர் போற்றினர்.  ஏன் எனில் அந்த தபசி உலகம் அனைத்தும் மடிந்து அழிய வேண்டும் என்ற நோக்கத்துடன் தவமிருந்தான்.  அவனை மடியும்படி செய்த அரசன் புரிந்த செயல் ஹிம்ஸை அல்ல.  உலகைக் காப்பாற்றும் புண்ய காரியம்.  ஆதலால் பூமாரி பெய்தது.  ஆதலால் அது அஹிம்ஸையே.  அதுபோல் பெரியோரை நீ என்று கூப்பிடுவதும் வதமேயாகும்.  சாஸ்திரம் தான் இது ஹிம்ஸை என்று லக்ஷணத்தால் கூறவேண்டுமே ஒழிய, நாமாக தீர்மானம் செய்யலாகாது என்றார்.  தர்மாதர்மங்களைச் சாஸ்திர மூலமாகவே அறிய வேண்டும்.  ஆதலால் யாகாதி தர்மங்களை நிந்தை செய்வது தவறு.

            வைதிகதர்மரக்ஷணம்: தர்மத்தைக் காப்பதென்றால் தர்மத்தை அறிந்தவர்களையும் அதை அனுஷ்டிப்பவர்களையும் அதை நமக்கு உபதேசம் செய்யும் உபாத்யாயர்களையும் கௌரவமாக நடத்த வேண்டும்.  அவர்களை இகழ்ந்து பேசக்கூடாது.  தவறு நேர்ந்தாலும் அவைகளை மறந்து விடவேண்டும்.  தர்மத்தை காப்பாற்ற தன் சக்திக்கு ஏற்ப தர்மம் கொடுக்க வேண்டும்.  தர்மத்தைக் காப்பாற்றினால் நம்மையே கப்பாற்றிக் கொண்டதாகும்.  வைதிகர்கள் சிராத்தம் முதலியவைகளையும் உபநயனம் விவாஹம் முதலியவைகளையும் சாஸ்திர முறைபடி செய்யாவிடில் தர்மத்தைக் காப்பாற்ற முடியாது.  ஆகையால் அந்தத் தர்ம பரம்பரையைக் காப்பது நமது கடமை.

*****************************************************************************************************************

Home Page