செம்பருத்தி - Ayurveda Articles | Sri Kanchi Kamakoti Peetham
  1. Home
  2. Articles
  3. Ayurveda Index
  4. செம்பருத்தி
ஆயுர்வேதக் கட்டுரைகள்

செம்பருத்தி

Sri Kanchi Kamakoti Peetham

செம்பருத்தி

Latin Name: Hibiscus rosa – sinensis
Family: Malvaceae
English Name: China Rose, Hibiscus, Shoe-flower
Sanskrit Name: जपा, ओण्ड्रपुष्पी

Hibiscus

இதன் வேர், இலை மற்றும் பூக்கள் பயன்பாட்டிற்கான பகுதிகளாகும். இலைகள் குளிர்ச்சியானவை. தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து காலை மாலை வெறும் வயிற்றில் சிறிய அளவு சாப்பிட்டு வர, மலமிளகி வெளியேறும். சிலருக்கு இரண்டு மூன்று முறை பேதியாகவும் கூடும். குடலை மிருதுவாக்கி அதன் வேலைத்திறனை மேம்படுத்தும். இரத்தத்திலுள்ள பெருவாரியான கப – பித்த தோழங்களினால் ஏற்படும் உபாதைகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும் திறன் கொண்டது. உடலில் ஏற்படும் எரிச்சலை நீக்கும். கல்லீரல் உபாதைகளை நீக்கி, சுறுசுறுப்படையச் செய்யும். உடல் தளர்ச்சியை நீக்கி, உற்சாகப்படுத்தும். உட்புறப்பகுதிகளில் ஏற்படும் சீழ்க்கட்டிகளை உடைத்து வெளியேற்றும். இலைகளை அரைத்துத் தோலில் பூசித் தேய்த்துக்குளிக்க படை, சொறி, சிரங்குகளை அகற்றி விடும்.
செம்பருத்தி இலைகளை விட, பூவின் மொட்டுகளுக்கு சக்தி அதிகம். நறுமணத்துடன் கூடிய அதை வாயில் போட்டு மென்றால் கசப்பாக இருக்கும். குளிர்ச்சியானது. சிறுநீரக எரிச்சலை போக்கக் கூடியது. மூல உபத்திரவத்திற்கு மிகவும் நல்லது. கருப்பை மற்றும் மாதவிடாய் உபாதைகளுக்கு நல்ல தீர்வைத் தரக் கூடியது.
செம்பருத்திப்பூ சுவையில் துவர்ப்பும், இனிப்பும் கலந்த்து. குளிர்ச்சி தரக் கூடியது. எளிதில் ஜீரணமாகக்  கூடியது. வறட்சி நீக்கி உடலுக்கு எண்ணெய் படையைத் தரக் கூடியது. குடல், கருப்பை, தொண்டை இவற்றில் புண்கள் ஏற்பட்டால் 1 -3 பூக்களை அரைத்துப் பாலில் கலக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் புண்கள் ஆறிவிடும்.
மலத்துடன் ரத்தம் கலந்து செல்லுதல், ரத்த மூலம், மாதவிடாய் காலத்திற்குப் பின் தொடர்ந்து சில நாட்களுக்கு காணும் ரத்தப் பெருக்கு, தொண்டை மற்றும் மூக்கு வழியாக ரத்தக்கசிவு ஏற்பட்டு, எச்சில் துப்பும் போதும் மூக்கைச் சிந்தும் போதும் ரத்தம் காணுதல் போன்ற நிலைமைகளை குணப்படுத்த பூவின் மொட்டைப் பாலில் அரைத்துச் சாப்பிடுவது நல்லது.

जपाख्या ओण्ड्रकाख्या च रक्तपुष्पी जवा च सा।
अर्कप्रिया रक्तपुष्पी प्रातिका हरिवल्लभा॥ (राजनिघण्टु)
जपा च जपपुष्पा च प्रातिका रक्तपुष्पिका।
अरुणा रुद्रपुष्पा च रागपुष्पी शिवप्रिया॥ (स्वयंकृतिः)
जपापुष्पं जवापुष्पमोण्ड्रपुष्पं जवा जपा।
पिण्डपुष्पं हेमपुष्पं त्रिसन्ध्या त्वरुणा सिता॥ (कैय्यदेवनिघण्टु)
रक्तपीतसितेत्यादिवर्णसंस्थानभेदतः।
जपा तु बहुधा प्रोक्ता वरा रक्ता गुणाधिकाः॥ (स्वयंकृतिः)
जपा संग्राहिणी केश्या त्रिसन्ध्या कफवातजित्। (भावप्रकाशिका)
जपाशीता च मधुरा स्निग्धा पुष्टिप्रदा मता।
गर्भवृद्धिकरी ग्राही केश्या जन्तुप्रदा मता॥
वान्तिजन्तुकरा दाहप्रमेहार्शविनाशिनी।
धातुरुक्प्रदरं चेन्द्रलुप्तं चैव विनाशयेत्॥
जपापुष्पं लघु ग्राहि तिक्तं केशविवर्धनम्। (निघण्टुरत्नाकरम्)
जपा तु कटुरुष्णा स्यादिन्द्रलुप्तकनाशकृत्।
विच्छर्दिजन्तुजननी सूर्याराधनसाधनी॥ (राजनिघण्टु)
त्रिसन्ध्या शीतला तिक्ता विषपित्तकफापहा। (कैय्यदेवनिघण्टु)
செம்பருத்தி பூக்கள் பல நிறங்களில் அமைந்திருந்தாலும் நல்ல சிவப்பு நிறத்தில் பல இதழ்களைக் கொண்ட செம்பருத்திச் செடிதான் மருத்துவகுணங்களில் சிறப்பானதாக கண்டறியப்பட்டுள்ளது.

எஸ்.ஸுவாமிநாதன்,
டீன்,
ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை – 600123
போன் - 9444441771

www.sjsach.org.in


மேலும்