திருப்பல்லாண்டுத் தலங்கள்

திருவிசைப்பா

திருப்பல்லாண்டுத் தலங்கள்

திருவாசகத்திற்கு அடுத்து விளங்கும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஆகிய இரண்டும் முறையாக அமைந்த இசைப்பதிகங்களையுடையனவே. இவைகளை அருளிச் செய்தோர் 1) திருமாளிகைத் தேவர் 2) சேந்தனார் 3) கருவூர்த்தேவர் 4) பூந்துருத்தி நம்பி, காடநம்பி 5) கண்டராதித்தர் 6) வேணாட்டடிகள் 7) திருவாலியமுதனார் 8) புருடோத்த நம்பி 9) சேதிராயர் ஆகிய அருளாளர்கள்.

இத்திருப்பதிகங்கள் இந்தளம், காந்தாரம், சாளரபாணி, நட்டராகம், பஞ்சமம், புறநீர்மை என்னும் பண்கள் அமைப்பில் அமைந்துள்ளன. இவற்றுள் "சாளரபாணி" என்னும் பண், ஒன்பதாம் திருமுறையுள் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள். சிவபெருமானின் திருமேனிச்சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக்கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது. முருகக்கடவுளைப் பற்றிய ஒரு திருப்பதிகம் இதில் இடம் பெறுகின்றது. (திருவிடைக்கழி)

பதிகங்களைப் பாடிய அருளாளர்களின் பெயர்களை நினைவூட்டும் பழம்பாடல் -


"செம்பொன்மணி அம்பலத்து நிருத்தனார்க்குத்

திருவிசைப்பா உரைத்தவர்தம் திருப்பேர் சொல்லில்

பம்பு புகழ் செறிதிருமா ளிகைமெய்த் தேவர்

பரிவுடைய சேந்தனார் கருவூர்த்தேவர்

நம்பிகா டவர்கோன்நற் கண்டராதித்தர்

நன்குயர்வே ணாட்டடிகள் திருவாலி யமுதர்

அம்புவியோர் புகழ்புரு டோத்தமர்சேதி ராயர்

ஆகவர் ஒன்பதின்மர் தாமுறை கண்டடைவே"


இப்பதிகங்களுக்குரிய தலங்கள் வருமாறு-

1) கோயில் (சிதம்பரம்)

2) கங்கை கொண்ட சோழேச்சரம்

3) களந்தை ஆதித்தேச்சரம்

4) கீழ்க்கோட்டூர் மணியம்பலம்

5) திருமுகத்தலை

6) திரைலோக்கியசுந்தரம்

7) திருப்பூவணம்

8) சாட்டியக்குடி

9) தஞ்சை இராஜராஜேச்சரம்

10) திருவிடைமருதூர்

11) திருவீழிமிழலை

12) திருவாரூர்

13) திருவாவடுதுறை

14) திருவிடைக்கழி


(கோயில் எனப்படும் சிதம்பரத்திற்குத் திருவிசைப்பாப் பதிகங்கள் 15ம் திருப்பல்லாண்டுப் பதிகம் ஒன்றும் உள்ளன. ஏனைய தலங்கள் அனைத்தும் ஒவ்வொரு (திருவிசைப்பா) பதிகத்தை பெற்றுள்ளன. மொத்தப் பதிகங்கள் - திருவிசைப்பா -28, திருப்பல்லாண்டு -1, ஆகமொத்தம் ஒன்பதாம் திருமறையுள் 29 பதிகங்கள் உள்ளன. ஒன்பதாம் திருமுறைப் பாடல்கள் 365 எனத் தொகை கூறப்பட்டிருப்பினும் கிடைத்திருப்பவை 301. ஆக 64 பாடல்கள் ஏடுகளிற் சிதைந்திருத்தல் வேண்டும்)

இத்தலங்களுள் திருவிடைக்கழி, முருகப் பெருமான் தலமாகும். இத்தலத்துப் பதிகமும் முருகனைப் பற்றியதே. ஏனைய தலங்களுள், சிதம்பரம், திருப்பூவணம், திருவிடைமருதூர், திரூவாரூர், திருவீழிமிழலை, திருவாவடுதுறை ஆகிய ஆறு தலங்கள் (தேவாரத்) திருமுறைத் தலங்களாகவும் விளங்குகின்றன. இவை நீங்கலாகவுள்ள தலங்கள் 1) கங்கைகொண்ட சோழேச்சரம் 2) களந்தை ஆதித்தேச்சரம் 3) கீழ்க்காட்டூர் மணியம்பலம் 4) திருமுகத்தலை 5) திரைலோக்கிய சுந்தரம் 6) சாட்டியக்குடி 7) தஞ்சை இராஜராஜேச்சரம் 8) திருவிடைக்கழி முதலியவை (ஒன்பதாம் திருமுறையாகிய) திருவிசைப்பாத் தலங்களாகவே விளங்குகின்றன.

பஞ்சபுராணம் பாடும் முறை அமைப்பில் திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும் தனித்தனியே இடம் பெறுகின்றன.


பாடிய அருளாளர்களும் பாடப்பட்ட தலங்களும் பதிக எண்ணிக்கையும்


1. திருமாளிகைத்தேவர் - கோயில் -4

2. சேந்தனார் - திருவீழிமலை

- திருவாவடுதுறை

- திருவிடைக்கழி -3

3. கருவூர்த்தேவர் - கோயில்

- களந்தை ஆதித்தேச்சரம்

- கீழ்க்கோட்டூர் மணியம்பலம்

- திருமுகத்தலை

- திரைலோக்கியசுந்தரம்

- கங்கைகொண்ட சோழேச்சரம்

- திருப்பூவணம்

- சாட்டியக்குடி

- தஞ்சை இராஜராஜேச்சரம்

- திருவிடைமருதூர் -10

4. பூந்துருத்தி நம்பி

காட நம்பி - திருவாரூர்

- கோயில் -2

5. கண்டராதித்தர் - கோயில் -1

6. வேணாட்டடிகள் - கோயில் -1

7. திருவாலியமுதனார் - கோயில் -4

8. புருடோத்த நம்பி - கோயில் -2

9. சேதிராயர் - கோயில் -1

(சேந்தனார் பாடியது

திருப்பல்லாண்டு - கோயில் -1


ஒன்பதாம் திருமுறையை அருளியுள்ள அருளாளர்களுள் கருவூர்த்தேவரே அதிகமான பதிகங்களை - பத்துப் பதிகங்களைப் பாடியுள்ளார்.

திருவிசைப்பாவில் மட்டும் இடம் பெற்றுள்ள "சாளரபாணி" என்ற பண் வகையில் பதிகம் ஒன்றை அமைத்துப் பாடியுள்வர் பூந்துருத்தி நம்பி காட நம்பி என்பவரே.

Previous page in  கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is திருவாரூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  சிதம்பரம்
Next