திருவாசகம்

திருமுறைத்தலங்கள்

திருவாசகம்

பண்டாய நான்மறை

திருச்சிற்றம்பலம்

பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனும்
கண்டாரு மில்லைக் கடையேனைத் தொண்டாகக்
கொண்டருளும் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை. 1


உள்ள மலமூன்றும் மாய உகுபெருந்தேன்
வெள்ளம் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவும் கெடும்பிறவிக் காடு. 2


காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டில் பரிபாகன் நம்வினையை - வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளும் கெடநெஞ்சே வாழ்த்து. 3


வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாரும்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாரும் - சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 4


நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசை - பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். 5


காணும் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் - காணும்
பெரியாளை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு. 6


பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை - பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து. 7

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is நாராயண ஸ்ம்ருதி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்கச்சி ஏகம்பம் - ஏகாம்பரநாதர் திருக்கோயில்
Next