திருக்களர்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருக்களர்

திருத்துறைப்பூண்டி - மன்னார்குடி சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். மன்னார்குடியிலிருந்து 21 A.e தொலைவில் உள்ளது. பேருந்து வசதியுண்டு.

பராசரமுனிவர், காலபைரவர், துர்வாசர் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். இத்தலத்திற்குப் பாரிஜாதவம் தருவனம், கற்பகவனம், என்னும் பெயர்களுண்டு.


இறைவன் - பாரிஜாதவனேஸ்வரர், களர்முளைநாதர்.


இறைவி - அமுதவல்லி, இளங்கொம்பன்னாள், அழகேஸ்வரி.


தலமரம் - பாரிஜாத தீர்த்தம்.


தீர்த்தம் - துர்வாச தீர்த்தம் முதலியன.


சம்பந்தர் பாடல் பெற்றது.

களரி என்பதற்குக் கூட்டம், சபை, அரங்கம் எனப் பல பொருள்கள். துர்வாசருக்குச் சிவபெருமான் பிரமதாண்டவ தரிசனம் தந்தருளியமையால் 'களரி' என்னும் இத்தலப்பெயர் பின்பு 'களர்' என்றாயிற்று. துர்வாசருக்கு நடராஜர் நடனக் காட்சிதந்தவடிவமும் அதன் எதிரில் துர்வாசரின் வடிவமும் (கைகூப்பிய நிலையில்)

உள்ளது.

வலம்புரி விநாயகர் சந்நிதியும் காணச்சிறப்பானது.

கோவிலூர் மடாலயத்தில் அதிபராக இருந்த வீரசேகர ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக் கோயில் ஆலயத்திற்குப் பக்கத்தில் உள்ளது. அவருக்குத் திருக்களர் ஆண்டவர் என்று பெயர். நன்கு பராமரிக்கப்படும் இக்கோயிலில் - மடாலயத்தில் சாதுக்கள் இருந்து வருகின்றனர். கோவிலின் பக்கத்தில் வேதபாடசாலையும், பசுமடமும், வேதாந்த மடமும், அறுபத்துமூவர் குருபூஜை மடமும் உள்ளன. இத்தலத்தில் பிடாரி கோயிலும், ஐயனார் கோயிலும், மாரியம்மன் கோயிலும் உள்ளன. இத்திருக்கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கோயிலுக்குள் மூன்று பிராகாரங்கள் உள்ளன. முன்னே இருப்பது துர்வாச தீர்த்தம்.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. உள்நுழைந்தால் நந்தியும் கொடிமரமும் உள்ளன. ஆலயத்தின் தென்மேற்கு முனையில் விநாயகர் கோயிலும், வடக்கில் வசந்த மண்டபமும் யாகசாலையும் உள்ளன. இதையடுத்து சுவாமிக்கும் அம்பாளக்கும் ஒசூர வரிசையில் இரண்டு கோபுரவாயில்கள் உள்ளன.

உள்ளே ஆண்டவர் உருவமும் நவக்கிரகங்களும் உள. உள்வாயிலைக் கடந்து சென்றால் சந்திரன், பிரம்மா, விஸ்வகர்மா, வழிபட்ட சந்நிதிகளும் உள்ளன. நால்வர் சந்நிதி உளது. மோக்ஷத்துவாரேஸ்வரர், சோமாஸ்கந்தர் தல (வலம்புரி) விநாயகர், வள்ளி தெய்வயான சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி சந்நிதிகள் தரிசிக்கத்தக்கன. நடராஜர் சந்நிதி (பிரம தாண்டவமூர்த்தி) இத்தலத்தில் விசேஷமானது.

கிழக்கில் பெருமாள் சந்நிதியும் சூரியசந்நிதியும் உள்ளன. மூலவர் - பாரிஜாதவனேஸ்வரர். சிவலிங்கத் திருமேனி. இருபுறமும் துவார பாலகர்கள், நந்தி பலிபீடமும் உள்ளன. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது தனியே உள்ளது. இருபுறமும் துவாரசக்திகள். வெளி மண்டபத்தின் கீழ்க்கோடியில் அஷ்டபுஜதுர்க்கை சந்நிதி உள்ளது. சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு மத்தியில் தல விருக்ஷம் உள்ளது. கல்வெட்டில் சுவாமியின் பெயர் - களர் முளைத்த நாயனார், அடைந்தார்க்கு அருள் செய்த நாயனார் - என்று குறிக்கப்படுகின்றது. ஞான சம்பந்தர் தம் பதிகத்தில் 'அடைந்தார்க்கு அருளாயே' என்று பாடுவது இங்கு நினைக்கத்தக்கது.

வலம்புரி விநாயகர் சந்நிதியில் - கோபுரத்திற்கு உள்புறத்தில் அகோரவீரபத்ரர் மேற்கு நோக்கி வீரமுடன் காட்சி தருகின்றார். 'விடங்கர் லிங்கம்' நடராஜருக்குப் பக்கத்தில் பேழையில் உள்ளது. நடராஜர் (பிரபையுடன்) அழகாகத் தரிசனம் தருகின்றார் - அற்புதத் தரிசனம். ஆண்டுக்கொருமுறை ஆதிரையில் மட்டும் புறப்பாடு. இங்குள்ள தீர்த்தங்களுள் துர்வாச தீர்த்தமே சிறப்புடையத. மற்றையவை - 1) பிரமதீர்த்தம் (சிந்தாமணிதீர்த்தம்) (தெற்கு வீதியில் உள்ளது)

2) ருத்ரதீர்த்தம் (மேல வீதியில் உள்ளது)

3) ஞானதீர்த்தம் (வடக்கு வீதியில் உள்ளது)

சுவாமிக்குச் செய்துள்ள திருப்பணிகளுள், திருக்களர் ஆண்டவர் செய்துள்ள திருப்பணிகளே சிறப்பானவை. பூஜைகள் செம்மையாக முறையாக நடைபெறுகின்றன. சிறப்பான உற்சவங்களும் அவ்வப்போது உரிய காலங்களில் நடத்தப்பெறுகின்றன. மாசி மகத்தில் சிந்தாமணி தீர்த்தத்திலும் பங்குனி உத்திரத்தில் ருத்ர தீர்த்தத்திலும் நடைபெறும் தீர்த்தவாரி சிறப்பு.

அம்பாளுக்கு முழு உருவத்திற்குமாக ஓர் அன்பரின் உபயமாகத் தங்கக்கவசங்கள் செய்யப்பட்டு, விசேஷ காலங்களில் மட்டும் சார்த்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தங்கக்கவசக் காட்சியைக் காண கண்கோடி வேண்டும் - அற்புதமான ஆனந்தக் காடசி. மனதிற்குப் பெரும் நிறைவைத் தருகின்றது. அழகேஸ்வரிக்கு அழகான அலங்காரம். இத்லத்திற்குத் தலபுராணம் உள்ளது - இயற்றியவர் களப்பால் என்னும் ஊரில் வாழ்ந்த ஆதியப்பர்.


"நீருளார் கயல் வாவி சூழ்பொழில்

நீண்ட மாவயலீண்டு மாமதில்

தேரினார் மறுகில்

விழா மல்கு திருக்களர்

ஊருளாரிடு பிச்சை பேணும்

ஒருவனே ஒளிர் செஞ்சடைம்மதி

ஆர நின்றவனே

அடைந்தார்க் (கு) அருளாயே". (சம்பந்தர்)


-"ஓங்குபுத்தி

மான்களரிலோட்டி மகிழ்வோ டிருந்தேத்தும்

வான்களரில் வாழு மறை முடிபே" (அருட்பா)


அஞ்சல் முகவரி -

அருள்மிகு. பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில்

திருக்களர் - அஞ்சல் - 614 720

திருவாரூர் மாவட்டம்.







Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருச்சிற்றேமம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  பாதாளேச்சுரம்
Next