திருச்சிற்றேமம்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருச்சிற்றேமம்

சிற்றாய்மூர் - சித்தாய்மூர்

மக்ள் சித்தாமூர் என்று அழைக்கின்றனர். திருவாரூர் - திருத்துறைப் பூண்டி சாலையில் ஆலத்தம்பாடி வந்து, அங்கிருந்து சித்தாமூர் செல்லும் பாதையில் 3 A.e. நடந்து செல்ல வேண்டும். இத்தலத்திற்கு வருவோர் கூட்டமாகத் தனிப் பேருந்தில் வந்து தரிசிப்பதே சிறந்தது. அரிச்சந்திர நதியின் வடபால் உள்ளதலம். ஊர் அருகில் செண்பகநதி உள்ளது. பிரமரிஷி, சித்தர்கள் வழிபட்டது தலம்.


இறைவன் - சுவர்ண ஸ்தாபனேஸ்வரர். பொன்வைத்தநாதர்.


இறைவி - அகிலாண்டேஸ்வரி.


தலமரம் - ஆத்தி.


தீர்த்தம் - சுவர்ண புஷ்கரணி.


சம்பந்தர் பாடல் பெற்றது.

தலவிநாயகர் - ஆத்திமிர விநாயகர்.

அழகான ராஜகோபுரம். கிழக்கு நோக்கியது. திருச்சிற்றேமத்திற்கு வடபாலுள்ள முத்தரசபுரத்தை ஆண்டு வந்து மன்னனுக்கு நாடொறும் இவ்வூர் வழியாகப் பாற்குடம் செல்வது வழக்கம். சில நாள்களில் அபர்பற்குடம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழுந்து உடையலாயிற்று. அரசன் அவ்விடத்தை வெட்டிப் பார்க்க, சிவலிங்கத் திருமேனி கண்டான். அவ்விடத்துக் கோயில் எழுப்பினான் என்பது வரலாறு. இதற்கு அடையாளமாக சிவலிங்கத்தின் மீது வெட்டுக்காயம் உள்ளது.

நடராஜர் அழகான வடிவம். பிராகாரத்தில் கன்னிவிநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள. பிரமரிஷி. ஐயனார், பைரவர், சனிபகவான், சூரியன், விசுவநாதர் சந்நிதிகள் தரிசிக்கத்தக்கவை. தலப்பதிகம் அம்பாள் சந்நிதி முன்பு பதிக்கபட்டுள்ளது.

வேலவர், சோமாஸ்கந்தர், ஆடிப்பூர அம்மன், பிரதோஷநாயகர், சந்திரசகேரர், மற்றும் தலவரலாற்றுடன் தொடர்புடைய செட்டியார், அவர் மனைவி ஆகியோர், சம்பந்தர் முதலியோரின் உற்சவத் திருமேனிகள் உள்ளன.

தலவரலாறு - இவ்வூரில் வாழ்ந்த சங்கரன் செட்டியார், மனைவி கருவுற்ற மிக்க அண்மைக் காலத்தே பொருளீட்டும் முயற்சி மேற் கொண்டு வெளியூர் சென்றார். சிவப்பற்று கொண்டு, சிவந் தொண்டு செய்து வாழ்ந்து வந்து அம்மங்கைக்கு இறைவன் நாடொறும் ஒரு பொன் காசுவைத்து உதவ, அவள் அதை விற்று வாழ்வு நடத்தி வந்தாள். மகப்பேறு காலம் நெருங்கியது. இறைவனை நோக்கி அழுது வேண்ட, அகிலாண்டேஸ்வரியே தாயாக வந்து உதவிட, மகவினைப் பெற்றெடத்தாள். செட்டியார் ஊர் திரும்பினார். புல்லறிவினர் சிலர் அம்மாதின் மேல் பொய் ஒழுக்கக் குற்றச்சாட்டுக்களைச் செட்டியாரிடம் கூறினர். அம்மங்கை இறைவனிடம் சென்று பல்லோர் முன்னிலையிலும் வேண்டி, தன் கற்பை வெளிப்படுத்துமாறு கலங்கி வேண்ட, இறைவன் - கோயிற்கதவைத் தானே திறக்கச் செய்தும், ஆத்தமிரத்தை இடம் பெயர்ந்து முன்புறம் வரச்செய்தும், நந்தி தேவரைப் பலிபீடத்தின் பின் போகச் செய்தும் - பல அற்புதங்களை நிகழ்த்தி அப்பெண்ணின் கற்புத்திறத்தை ஊரறியச் செய்தார் என்பர்.

இவ்வூரின் மேற்கே 6 A.e. தொலைவிலுள்ள இடம் - செட்டிப் பெண்ணிற்கு இறைவன் அன்றாடம் பொன் நிறுத்துத்தந்த இடமாகும் (பொன் நிறை) - 'பொன்னிறை' என்னும் பெயருடையது.

இக்கோயிலில் உள்ள தேன்கூடு வியப்பானது. இதுபற்றிய ஒரு செய்தி -நாடொறும் அர்த்த சாமத்தில் வழிபட்டு வந்த பிரமரிஷி ஒருநாள் காலம் தாழ்ந்து வர, ஆலயக்கதவு காப்பிடப்பட்டுவிட்டது. அப்போது அவர் தேனீ உருக்கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டு அங்கேயே வசிக்கத் தொடங்கினார் என்பர். உற்சவங்களும் பூஜைகளும் முறையாக நடைபெறுகின்றனர்.

இத்திருக் கோயிலின் பக்கத்தில் திருமால் ஆலயமுள்ளது. இவ்வூர்க்குக் கிழக்கில் திருவாய்மூரும், மேற்கில் கைச்சினமும், வடக்கில் வலிவலமும் திருக்குவளையும் குண்டையூரும், வடகிழக்கில் எட்டுக்குடியும் உள்ளன.


"நிறைவெண் திங்கள் வாண் முக மாதர் பாட நீள்சடைக்

குறைவெண் திங்கள் சூடியோர் ஆடல் மேய கொள்கையான்

சிறைவண்டி யாழ் செய் பைம் பொழிற் பழனஞ் சூழ் சிற்றேமத்தான்

இறைவன் என்றே உலகெலாம் ஏத்த நின்ற பெருமானே". (சம்பந்தர்)

-"மேன்மைதரும்

முற்றேமம் வாய்ந்த முனிவர் தினம்பரவும்

சிற்றேமம் வாய்ந்த செழுங்கதிரே" (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. சுவர்ணஸ்தாபனேஸ்வரர் திருக்கோயில்

சித்தாமூர் -அஞ்சல். பொன்னிரை - S.O.

திருவாரூர் வட்டம் - திருவாரூர் மாவட்டம் 610 203






Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருவுசாத்தானம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருக்களர்
Next