பழையாறைவடதளி

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

பழையாறைவடதளி

கும்பகோணம் - ஆவூர் பாதையில் முழையூர் சென்று அவ்வழியாக இத்தலத்தை அடையலாம்.

சோழ மன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கிய தலம். பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மணை இருந்த இடம் "சோழமாளிகை" என்னும் தனி ஊராக உள்ளது.

தேவார காலத்தில் (1) முழையூர் (2) பட்டீச்சரம் (3) சத்திமுற்றம் (4) சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படையூர்களாக விளங்கின. இவ்வூர் (1) A.H. 7 ஆம் நூறறாண்டில் - பழையாறை நகர் என்றும், 8 ஆம் நூற்றாண்டில் - நந்திபுரம் என்றும், 9,10ஆம் நூற்றாண்டில் முடிகொண்ட சோழபுரம் என்றும், 12 ஆம் நூற்றாண்டில் இராஜபுரம் என்றும் வழங்கப்பெற்றது.

பழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும்.

1) வடதளி - தாராசுரத்திலிருந்து 5 A.e. தொலைவு, அப்பர் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை. சிதலமான கோயில் உள்ளது. கோயிலுக்குப் பக்கத்தில் துறையூர் சிவப்பிரகாசர் சமாதியுள்ளது.

2) மேற்றளி

3) கீழ்த்தளி (பழையாறை)

4) தென்தளி.

இத்தகு சிறப்புடைய இவ்வூர் சிற்றூராகவுள்ளது. தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர்

பழையாறை வடதளி எனப்பட்டது.

சமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணாநோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் தலம். மங்கையர்க்கரசியார், அமர்நீதி நாயனார் ஆகியோர் அவதரித்த தலம. அப்பர் பாடல் பெற்றது.

மங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறைத் தலைநகராகக் கொண்டவன் இவனே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனேயாகும். (திரு. கே.எம். வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக்குறிப்பு - பெரிய புரணாம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.)

வடதளி - (மாடக்கோயில்)

இறைவன் - தர்மபுரீஸ்வரர்

இறைவி - விமலநாயகி.

இதன் பக்கத்தில் முழையூர் (வைப்புத்தலம்) உள்ளது. மக்கள் இக்கோயிலை முழையூர்க் கோயில் என்று வழங்குகின்றனர்.

பழையாறை -

இறைவன் - சோமேசர்.

இறைவி - சோமகலாம்பிகை.

தலமரம் - நெல்லி.

தீர்த்தம் - சோம தீர்த்தம் (எதிரில் உள்ளது. இக்குளத்துநீர் சித்தப்பிரமை முதலியவைகளைப் போக்கவல்லது) கருடன், ஆதிசேஷன் வழிபட்ட தலம்.

பழையாறையில் நாணயச் சாலை இருந்த இடம் இன்று 'கம்பட்ட விசுவநாதர்' ஆலயம் உள்ள இடமென்பர். (கம்பட்டம் - நாணயச் சாலை) இராஜராஜ சோழனார் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது. குந்தவைப் பிராட்டி இவ்வூரில்தான் இராஜேந்திரனை வளர்த்தான். இத்தகு சிறப்புடைய பழையாறை, பாண்டியர் ஆதிக்கம் மேலோங்கியபோது தன் சிறப்பை இழந்தது.

இக்கோயில் சோழர் திருப்பணி பெற்றது. கிழக்கு பார்த்த சந்நிதி. எதிரில் குளம். இன்று சீர்கெட்டுள்ளது. வெளிப்பிராகாரத்தில் அம்பாள் கோயில் தெற்கு நோக்கியுள்ளது. கோயில்முன் மண்டபத்தில் உள்ள கைலாசநாதர் உருவமும், மகாமண்டபத்தில் உள்ள துர்க்கை உருவமும் அழகுடையன. இத்தலத்தைச் சூழ்ந்துள்ள (1) நல்லூர் (2) வலஞ்சுழி (3) சத்திமுற்றம் (4) பட்டீச்சரம் (5) ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷிணாயன புண்ணியநாளில் - வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.

"தலையெலாம் பறிக்கும் சமண் கையருள்

நிலையினான் மறைத்தான் மறைக் கொண்ணுமே

அலையினார் பொழில் ஆறை வடதளி

நிலையினானடியே நினைந்துய்ம்மினே" (அப்பர்)

-துட்டமயல்

தீங்கு விழையார் தமை வான் சென்றமரச் செய்விக்க

ஒங்கு பழையாறையில் என்னுள்ளுவப்பே. (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. சோமேசர் திருக்கோயில்

பழையாறை - பட்டீஸ்வரம் அஞ்சல் - 612 703

கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.







 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is ஓமாம்புலியூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவலஞ்சுழி
Next