மன்னுபுகழ்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெருமாள் திருமொழி

மன்னுபுகழ்

திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சௌரிராஜனையே ஆழ்வார் இராமனாகக் குறிப்பிடுகிறார்.

கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு

தரவு கொச்சக் கலிப்பா

கணபுரத்தின் கருமணியே!தாலேலோ

719. மன்னுபுகழ்க் கௌசலைதன்

மணிவயிறு வாய்த்தவனே,

தென்னிலங்கைக் கோன்முடிகள்

சிந்துவித்தாய், செம்பொன்சேர்

கன்னிநன்மா மதிள்புடைசூழ்

கணபுரத்தென் கருமணியே,

என்னுடைய இன்னமுதே

இராகவனே தாலேலோ. 1

எண்திசையும் ஆள்பவனே!தாலேலோ

720. புண்டரிக மலரதன்மேல்

புவனியெல்லாம் படைத்தவனே

திண்டிறலாள் தாடகைதன்

உரமுருவச் சிலைவளைத்தாய்,

கண்டவர்தம் மனம்வழங்கும்

கணபுரத்தென் கருமணியே,

எண்டிசையு மாளுடையாய்!

இராகவனே!தாலேலோ. 2

சனகன் மருமகனே!தாலேலோ

721. கொங்குமலி கருங்குழலாள்

கோசலைதன் குலமதலாய்,

தங்குபெரும் புகழ்ச்சனகன்

திருமருகா!தாசரதீ!

கங்கையிலும் தீர்த்தமலி

கணபுரத்தென் கருமணியே,

எங்கள்குலத் தின்னமுதே!

இராகவனே!தாலேலோ. 3

வில்லுக்கு ஒருவனே!தாலேலோ

722. தாமரைமே லயனவனைப்

படைத்தவனே, தசரதன்றன்

மாமதலாய்!மைதிலிதன்

மணவாளா, வண்டினங்கள்

காமரங்க ளிசைபாடும்

கணபுரத்தென் கருமணியே,

ஏமருவும் சிலைவலவா!

இராகவனே!தாலேலோ. 4

பரதனுக்கு நாடு தந்தவனே!தாலேலோ

723. பாராளும் படர்செல்வம்

பரதநம்பிக் கேயருளி,

ஆராவன் பிளையவனோ

டருங்கான மடைந்தவனே,

சீராளும் வரைமார்பா!

திருக்கண்ண புரத்தரசே,

தாராளும் நீண்முடியென்

தாசரதீ!தாலேலோ. 5

சிற்றன்னை சொற்கொண்டவனே!தாலேலோ

724. சுற்றமெல்லாம் பின்தொடரத்

தொல்கான மடைந்தவனே,

அற்றவர்கட் கருமருந்தே!

அயோத்திநகர்க் கதிபதியே,

கற்றவர்கள் தாம்வாழும்

கணபுரத்தென் கருமணியே,

சிற்றவைதன் சொல்கொண்ட

சீராமா!தாலேலோ. 6

அயோத்தி மன்னனே!தாலேலோ

725. ஆலினைலைப் பாலகனா

யன்றுலக முண்டவனே,

வாலியைக்கொன் றரசிளைய

வானரத்துக் களித்தவனே,

காலின்மணி கரையலைக்கும்

கணபுரத்தென் கருமணியே,

ஆலிநகர்க் கதிபதியே!

அயோத்திமனே!தாலேலோ. 7

தேவர்க்கு அமுதம் அளித்தவனே!தாலேலோ

726. மலையதனா லணைகட்டி

மதிளிலங்கை யழித்தவனே,

அலைகடலைக் கடைந்தமரர்க்

கமுதருளிச் செய்தவனே,

கலைவலவர் தாம்வாழும்

கணபுரத்தென் கருமணியே,

சிலைவலவா!சேவகனே!

சீராமா!தாலேலோ. 8

இலங்கையை அழித்தவனே!தாலேலோ

727. தளையவிழும் நறுங்குஞ்சித்

தயரதன்றன் குலமதலாய்,

வளையவொரு சிலையதனால்

மதிளிலங்கை யழித்தவனே,

களைகழுநீர் மருங்கலரும்

கணபுரத்தென் கருமணியே,

இளையவர்கட் கருளுடையாய்!

இராகவனே!தாலேலோ. 9

யாவரையும் படைத்தவனே!தாலேலோ

728. தேவரையு மசுரரையும்

திசைகளையும் படைத்தவனே,

யாவரும்வந் தடிவணங்க

அரங்கநகர்த் துயின்றவனே,

காவிரிநல் நதிபாயும்

கணபுரத்தென் கருமணியே,

ஏவரிவெஞ் சிலைவலவா!

இராகவனே!தாலேலோ. 10

காகுத்தனின் பக்தர்கள் ஆவர்

729. கன்னிநன்மா மதிள்புடைசூழ்

கணபுரத்தென் காகுத்தன்,

தன்னடிமேல், 'தாலேலோ'

என்றுரைத்த தமிழ்மாலை,

கொல்நவிலும் வேல்வலவன்

குடைக்குலசே கரன்சொன்ன,

பன்னியநூல் பத்தும்வல்லார்

பாங்காய பத்தர்களே. 11

அடிவரவு:மன்னு புண்டரிகம் கொங்கு தாமரை பார் சுற்றம் ஆலின் மலை தளை வேரை கன்னி -- வன்தாள்.









 





 













 


 


 



Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is ஆலை நீள்கரும்பு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  வன்தாளினிணை
Next