அரைகுறை ஞானத்துக்கே ஆதரவு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

வாஸ்தவ நிலை எப்படி இருக்கிறதென்று பார்த்தால் வ்யஸனம்தான் மிஞ்சுகிறது. வர வர வர வித்யையின் தரம் குறைந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு சாஸ்திரமாக மறைந்துகொண்டே வருகிறது. எத்தனையோ கலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கின்றன. ஒரே இருட்டிலே சின்ன மின்மினிப் பூச்சி வெளிச்சம்கூடப் பெரிசாகத் தெரிகிறாற்போல, குருபீடங்களிலே ஸ்வல்பவித்வத்தோடு ஒருத்தர் இருந்துவிட்டால்கூட அவரை சிஷ்யலோகம் “ஸர்வஜ்ஞர்” என்று புகழ்ந்து அவரும் தாம் அதற்குமேல் தெரிந்துகொள்ள வேண்டாமென்று நினைக்கிற அளவுக்குக் கொண்டு விட்டுவிடுகிறது.

மின்மினிப் பூச்சியைச் சொல்லும்போது ஒரு கதை நினைவு வருகிறது. கதை என்றால் நிஜமாகவே நடந்த கதை. நீலகண்ட தீக்ஷிதரும், பழமார்நேரி மஹாதேவ சாஸ்த்ரிகள் என்பவரும் ஸம்பந்தப்பட்ட கதை. நீலகண்ட தீக்ஷிதர் மதுரையில் புகழ்வாய்ந்ததாக உள்ள திருமலை நாயகர் மஹாலையும் புது மண்டபத்தையும் கட்டிய நாயக மன்னருக்கு மந்த்ரியாக இருந்தவர். மஹாபக்தர். இவற்றோடு மஹாவித்வானுமாவார். பழமார்நேரி சாஸ்த்ரிகள் இவர் மாதிரி ப்ரஸித்தி பெறாதவர். ஆனாலும் தீக்ஷிதரும் அவரிடம் எப்படித் தோற்றுப் போனமாதிரி ஆனார் என்று அந்தக் கதை தெரிவிக்கிறது. ஞானசூன்ய உலகத்திலே எப்படி மின்மினிப் பூச்சி மாதிரி துளிப்போல ஞானத்தைப் பகட்டாகக் காட்டிக்கொள்பவர்கள் தங்களை ப்ரமாதப் படுத்திக்கொள்ள முடிகிறது என்று மஹாதேவ சாஸ்திரி இடித்துக் காட்டி ச்லோகம் இயற்றிச் சொன்னதில்தான் தீக்ஷிதருக்கு அவரிடம் ரொம்பவும் மரியாதை ஏற்பட்டது என்று கதை*.

வெறும் அரட்டை ஆஸாமிகளும் மின்மினி அறிவினாலேயே ப்ரகாசிக்கிற இருட்டுச் சூழ்நிலையில்தான் இப்போது இருக்கிறோம். இந்த மின்மினி ஒளியை மங்கச்செய்யும் நக்ஷத்ரக் கூட்டங்களின் ப்ரகாசம், நக்ஷத்ரங்களின் ஒளியையும் மழுங்கப் பண்ணும் சந்த்ரோதயம், அந்த சந்த்ரனும் இருக்கிற இடம் தெரியாமல் அமுங்கிப்போகும் ஸூர்யோதயம் என்னும்படியாக மேலும் மேலும் நாட்டில் வித்யா ப்ரகாசம் ஓங்கும்படியாகச் செய்யவேண்டும். இப்போது பூர்ண யோக்யதை உள்ள வித்வான்கள், சாஸ்திரஜ்ஞர்கள், பழைய கலைகள் தெரிந்தவர்கள். ஆயுர்வேத வைத்யர்கள், சில்பிகள், ரதகாரர்கள், பரத சாஸ்திர நிபுணர்கள் என்று ஏதோ கொஞ்சமாவது இல்லாமல் போகவில்லை. ஆனாலும் அரட்டைக்குத்தான் மதிப்புத் தருவது. தடபுடாவுக்குத் தான் மரியாதை செய்வது என்று லோகம் இருப்பதில், – கட்சியபிமானம் ஜாதியபிமானம் முதலியன இதிலும் தலைதூக்கியிருப்பதில் – ஸாதுக்களாக அடங்கியிருந்து கொண்டிருக்கிற, நிஜமான யோக்யதையுள்ள இந்தச் சில வித்வான்களுக்கு ஆதரவு கிடைப்பது ச்ரமமாயிருக்கிறது. சவடால்காரர்கள் ஆர்ப்பாட்டமாகத் தங்களுடைய அரைகுறை ஞானத்தில் வேதாந்த சாஸ்திரம் வரையில் நம்முடைய வித்யைகளைப் பற்றி எழுதுவது இன்று ஜகத் ப்ரஸித்தி பெறுகிறது. நல்ல ஞானமுள்ள விஷயஜ்ர்கள் ரொம்பவும் பரிச்ரமப்பட்டு ஆராய்ச்சி செய்து எடுத்துச் சொல்கிற விஷயங்களை ப்ரசாரம் செய்வதற்கு, ப்ரசுரம் செய்வதற்கு எவரும் முன்வருவதில்லை. இன்றைய நிலையில் தடபுடல்தான் வேண்டும், பூர்ண யோக்யதை அவச்யமில்லாத விஷயம் என்கிறதுபோல ஆகிக்கொண்டு வருகிறது. இதற்குக் காரணம், பொதுவாக வித்யா ஞானத்தின், சாஸ்திர அறிவின் லெவல் ரொம்பவும் இறங்கியிருப்பதுதான். மேற்கத்தியப் படிப்பிலே தேர்ந்தவர்கள் தற்போது நிறைய இருந்தாலும் ஸ்வதேச வித்யைகளில் பரிச்சயம் ஜனங்களுக்கு இல்லாததால்தான், இதிலே வாஸ்தவமான ஞானத்தை எடைபோட முடியாமல், படாடோபமான அரைகுறை ஞானத்தை ஆதரிப்பதாக இருக்கிறது. இது ஸரியே இல்லை.

ஆதரிப்பவர்கள் இல்லாவிட்டால் நல்ல வித்வத் உள்ளவர்களுக்கு மனஸு தளர்ந்து போய் அவர்கள் தங்கள் வித்வத்தைத் தங்களுடைய ஸந்ததிக்கோ, சிஷ்யர்களுக்கோ கற்றுக்கொடுக்காமலே போய்விடுவார்கள். நமக்கு வித்யைகள் நஷ்டமாகிப்போகும். இப்படித்தான் தற்போதே நேர்ந்திருக்கிறது. இது மேலும் இப்படியே போய்க்கொண்டிருப்பதற்கு விடப்படாது என்பதற்காகத்தான் இவ்வளவு சொல்வதும்.


* ஸ்ரீசரணர்கள் சுவைப்படக் கூறிய இக்கதையின் விரிவை இதே பகுதியில் “கவிஞர், அறிஞரின் தற்பெருமை” என்ற உரையின் “நீலகண்டரும் மஹாதேவரும்” என்ற பிரிவில் காண்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அரசாங்கமல்ல மக்களும் சீடர்களுமே பொறுப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  நேரில் கண்ட ஆதர்ச வித்வான்கள்
Next