அத்யயன முறைகள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

எழுதி வைக்காமலே வேதத்தைத் துளிக்கூடப் பிழை வராமல் காப்பாற்றிக் கொடுப்பதற்காக நம்முடைய ஆன்றோர் பல வழிகளை வகுத்து வைத்தார்கள். ஒரு அக்ஷரம்கூட மாறிவிடாமல், ஒரு ஸ்வரம்கூட ஏற்றல் இறக்கலில் வித்தியாஸப் பட்டுவிடாமல், மந்திர சக்தியானது பூரணமாகப் பலன் தருவதற்காக அத்யயனத்தில் பல விதிகளை ஏற்படுத்தி வைத்தார்கள்.

ஒவ்வொரு பதத்திலுள்ள ஒவ்வொரு அக்ஷரத்தையும் சொல்வதற்கு இத்தனை கால அளவை வேண்டும் என்று “மாத்ரா” கணக்கு வைத்திருக்கிறார்கள். மூச்சை எப்படி விடுவதால் சரீரத்தில் எந்தப் பகுதியிலே வைப்ரேஷன் ஏற்பட்டு சுத்தமான அந்த அக்ஷரம் பிறக்குமோ, அதைக் கூட சிக்ஷா என்ற வேதாங்கத்தில் நிர்ணயம் பண்ணிக் கொடுத்திருக்கிறார்கள். ஸங்கீத ஸ்வரத்துக்கும் வேத ஸ்வரத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை, மிருகங்கள், பக்ஷிகள் முதலியவை எழுப்பும் ஒலிகளுக்கும் வேத ஸ்வரங்களுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை ஆகியவற்றைச் சொல்லி, சரியாக வேத ஸ்வரங்களை உச்சரிப்பதற்கு வழி காட்டியிருக்கிறார்கள்.

வார்த்தைகளும் அக்ஷரங்களும் மாறிப் போகாமலிருப்பதற்குச் செய்த ஒரு பெரிய உபாயம் என்னவென்றால், ஒரு மந்திரத்திலுள்ள பதங்களைப் பல தினுசில் கோத்து வாங்கி வாக்யம், பதம், க்ரமம், ஜடா, மாலா, சிகா, ரேகா, த்வஜம், தண்டம், ரதம், கனம் ஆகிய பலவிதமான முறைகளை (patterns) ஏற்படுத்தியிருப்பதுதான்.

இப்போது கனபாடிகள் என்று சிலபேரைச் சொல்கிறோம் அல்லவா? இவர்கள் “கனம் என்கிற முறையில் வேதம் ஓதுவது வரைக்கும் பாடம் படித்தவர்கள்” என்று அர்த்தம். ‘பாடி’ என்றால் பாடம் படித்தவன். ‘கனம்’ வரையில் பாடம் படித்தவன் “கனபாடி”. ஒரு கனபாடி கனம் சொல்லும்போது கேட்கிறோம். ஒரு சில பதங்களையே அவர் அப்போது பல தினுஸாக மாற்றி மாற்றி, மடக்கி மடக்கி சொல்கிறார் என்று தெரிகிறது. இது கேட்பதற்கே பரமானந்தமாக கர்ணாம்ருதமாக இருக்கிறது. வேத மந்திரங்களுக்குப் பொதுவாகவே உள்ள காம்பீர்யம் இதனால் மேலும் ஜாஸ்தியானாற் போலிருக்கிறது. இப்படியேதான் க்ரமம், ஜடை, சிகா, மாலா முதலான மற்ற முறைகளிலும் பதங்களை ஒவ்வொரு விதமாகச் சேர்த்துக் சேர்த்துத் திருப்பித் திருப்பிச் சொல்கிறபோது ரொம்பவும் கம்பீரமாக, தெய்விகமாக இருக்கிறது. ஆனால் இந்த ஓதுமுறைகளின் முக்யமான உத்தேசம் வேத மந்திரங்களின் அக்ஷரம் கொஞ்சம் கூட மாறிவிடாமலிருப்பதற்காக அவற்றைக் குறுக்கும் நெடுக்குமாய் பின்னிப் பின்னித் தரவேண்டும் என்பதே.

வாக்ய பாடம் அல்லது ஸம்ஹிதா பாடம் என்பதுதான் மந்திரங்களை உள்ளபடி அப்படியே பாடம் பண்ணுவது. வாக்ய ரூபமாக மந்திரங்கள் வரும்போது, அதிலுள்ள பதங்கள் ஸந்தியில் ஒன்று கூடுவதுண்டு. இங்கிலீஷைவிடத் தமிழில் இம்மாதிரி ஸந்தியில் வார்த்தைகள் ஒன்று சேர்வது ஜாஸ்தி. இங்கிலீஷில் வார்த்தைகள் தனித்தனியாகவேதான் இருக்கும். தமிழில் பழைய தேவாரம், திருவாசகம், திருக்குறள், திவ்யபிரபந்தம் மாதிரியானவற்றில் நமக்கு தனித்தனியாக வார்த்தைகள் தெரியாத மாதிரி ஸந்தி சேர்த்திருப்பதைப் பார்க்கிறோம். ஸம்ஸ்கிருதத்தில் தமிழைவிடவும் தனித்தனி வார்த்தைகளின் ரூபம் தெரியாமல் ஸந்தி சேர்த்திருக்கும். இப்படி ஒவ்வொரு வேத வாக்யத்திலும் உள்ள பதங்களைத் தெளிவாகப் பிரித்துப் பிரித்துப் பாடம் பண்ணுவதற்குத்தான் ‘பத பாடம்’ என்று பெயர்.

ஸம்ஹிதா பாடத்துக்கு அடுத்தது பத பாடம். இதற்கு அடுத்தது க்ரம பாடம். இதிலே ஒரு மந்திரத்தின் முதல் வார்த்தையை இரண்டாவது வார்த்தையுடன் சேர்த்தும், இரண்டாவது வார்த்தையை மூன்றாவதுடன் சேர்த்தும் மூன்றாவதை நாலாவதுடன் சேர்த்தும், இப்படியே அந்த மந்திரம் முடிகிறவரைக்கும் சொல்லிக் கொண்டு போக வேண்டும்.

பழைய கால சாஸனங்கள் சிலதில் உள்ள ஊர் பிரமுகர்களின் பெயர்களில் சில பெயருக்கு முடிவில் “க்ரம வித்தன்” என்று போட்டிருக்கும். “வேதவித்” என்கிற மாதிரி (வேதவித்து என்று தமிழில் சொல்கிறோம்) , ‘க்ரமவித்’ அல்லது ‘க்ரமவித்தன்’ என்றால், வேதத்தைக் கிரமம் என்ற அத்யயன முறையில் சொல்லத் தெரிந்தவன் என்று அர்த்தம். தமிழ் நாட்டில் இப்படி ஊருக்கு ஊர் பலர் இருந்திருப்பதைத்தான் சாஸனங்களிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.

இதற்கப்புறம் ஜடா பாடம். இதிலே முதல் வார்த்தையை இரண்டாவது வார்த்தையுடன் சேர்த்துச் சொன்னவுடன், அதை மாற்றி இரண்டாவதை முதல் வார்த்தையுடன் சேர்க்க வேண்டும்; மறுபடியும் முதலை இரண்டாவதோடு சேர்க்க வேண்டும். அப்புறம் இரண்டாவது வார்த்தையை மூன்றாவதோடும், அதை மாற்றி மூன்றாவதை இரண்டாவதோடும் திரும்பவும் இரண்டாவதை மூன்றாவதோடும்; இப்படியே பின்னால் வருகிற வார்த்தைகளையும் மாற்றி மாற்றிச் சேர்த்துக் கொண்டு போக வேண்டும். இப்படிச் சொல்ல வல்லவர்களையே ‘ஜடா வல்லபர்’ என்பது.

இங்கே இரண்டு வார்த்தைகளைக் கோத்து வாங்கின மாதிரியே, மூன்று வார்த்தைகளை முன்னும் பின்னுமாக மாற்றுவது சிகா பாடம்.

இதைவிட சிரமமானது கனபாடம். இதிலே நாலு தினுசு உண்டு. முன்னும் பின்னுமாக வார்த்தைகளைப் பல விதங்களில் permutation, combination என்று சேர்த்துச் சொல்லும் அத்யயன முறையே அது. அதையெல்லாம் விளக்கினால் கணக்கு க்ளாஸ் மாதிரி மண்டையை உடைக்கும்.

உயிரைக் காப்பாற்றுகிற ஒரு அபூர்வ மருந்தைக் காப்பாற்றுவதற்கு லாபரட்டரியில் எத்தனையோ ஜாக்ரதை செய்து வைத்திருப்பது போல, லோகத்தை ரக்ஷிக்கிற வேத சப்தங்களை எழுதி வைக்காமலே வாய் வார்த்தையில் லவலேசம் கூட மாறிப் போய் விடாமல் காப்பாற்றித் தருவதற்காக, நம் பூர்விகர்கள் இப்படிப்பட்ட பாட முறைகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள்.

ஸம்ஹிதா பாடத்திலும், பத பாடத்திலும் மந்திரத்திலுள்ள வார்த்தைகளை அதே ஆர்டரில், ஒவ்வொன்றையும் ஒரே தரம் மட்டும் சொல்வதால் இவை ப்ரகிருதி (இயற்கையான) பாடம் எனப்படுகின்றன. மற்றவை விக்ருதி (செயற்கையான) பாடம் எனப்படும். க்ரமத்திலே வார்த்தைகள் ஒன்று – இரண்டு – மூன்று அசல் பிரகிருதியாகவே போகாவிட்டாலும், இரண்டுக்கப்புறம் ஒன்று, மூன்றுக்கப்புறம் இரண்டு என்று தலைகீழாகத் திரும்பாததால், அதைப் பூரணமான விக்ருதி என்று சொல்ல முடியாது. முழு விக்ருதியானவை க்ரமம் தவிர எட்டுப் பாட வகைகள் ஆகும். அஷ்ட விக்ருதி என்ற இந்த எட்டு விதமான பாடங்களின் பெயர்களையும் ஒரு ச்லோக ரூபமாக நினைவில் வைத்துக் கொள்கிற மாதிரிச் சொல்வதுண்டு:

ஜடா மாலா சிகா ரேகா த்வஜோ தண்டோ ரதோ கன :|

இத்-யஷ்ட-விக்ருதய: ப்ரோக்தா, க்ரம: பூர்வா மஹர்ஷிபி :|

ரொம்பவும் ஆதிகாலத்தில் மஹரிஷிகளாலேயே இந்தப் பாடமுறைகள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன.

வேதம் வாய்மொழியாக மட்டுமே (புஸ்தகத்தில் எழுதி வைக்காமல்) வரும்போது, அதன் ரூபம் கொஞ்சமும் மாறக்கூடாது என்றால், அதற்கு இத்தனை விதமான பாடமும் இருந்ததாக வேண்டும் என்று வைத்தார்கள். பதத்தில் வார்த்தை வார்த்தையாகவும், க்ரமத்தில் இரண்டிரண்டு வார்த்தையாகவும், ஜடையில் அதை முன்பின்னாகவும் இப்படியெல்லாம் பல தினுசில் சொல்வது ஒன்றுக்கொன்று tally ஆவதால் [ஒத்துப்போவதால்] மூலரூபம் மாறவே இல்லை என்று நிச்சயமாகிறதல்லவா? அதனால் இத்தனை விதமான பதச் சேர்க்கை முறைகளும் இருக்க வேண்டும் என்று வைத்தார்கள். இதில் ஒன்றைவிட இன்னொரு தினுசில் அத்யயனம் பண்ணுவதற்குப் பலனும் இத்தனை மடங்கு ஜாஸ்தி என்று கூடச் சொல்வதுண்டு.

ஸம்ஹிதா பாட மாத்ரேண யத் பலம் ப்ரோச்யதே புதை:|

 பதேது த்விகுணம் வித்யாத் க்ரமேது ச சதுர் குணம்|

 வர்ண க்ரமே சதகுணம் ஜடாயாந்து ஸஹஸ்ரகம் |

 (ஸம்ஹிதா பாடத்தைவிட இருமடங்கு பலன் கொண்டது பத பாடம்; நான்கு மடங்கு பலனளிப்பது க்ரம பாடம்; நூறு மடங்கு பலன் வாய்ந்து ‘வர்ண க்ரமம்’ என்ற பாடமுறை; ஆயிரம் மடங்கு பலனளிப்பது ஜடா பாடம்.)

அநாதியான வேதம் மாறவே கூடாது என்பதற்காக இத்தனை ஜாக்ரதையாக நம் முன்னோர்கள் அதன் ரூபத்தை ரக்ஷித்துக் கொடுத்திருக்கும்போது, வேத சப்தங்கள் எப்படி மாறின என்பதைப் பார்த்து வேதத்துக்குக் கால நிர்ணயம் பண்ணுகிறோம் என்று நவீன கால ஆராய்ச்சியாளர்கள் கிளம்பியிருப்பது, ஒரு போதும் யதார்த்தத்தை உள்ளபடி அறியப் பிரயோஜனப் படாது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is கால ஆராய்ச்சி சரியல்ல
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  தெய்வ வாக்கு
Next